Also Watch
Read this
Posted on: Mar 02, 2026 08:16 AM
By: Manigandan Raja
திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் சுவாமி தரிசனம் செய்த கையோடு, மதுரையில் நடந்த தேசிய ஜனநாயக கூட்டணி பொதுக் கூட்டத்தில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, மீண்டும் ஆட்சிக்கு வரும் திமுகவின் கனவு கானல் நீராகி விடும் என்றார். பணம் என்றால் நமக்கு, பிரச்சனை என்றால் மக்களுக்கு என்பது தான் திமுகவின் மாடலே என்ற பிரதமர் நரேந்திர மோடி, மத்தியில் காங்கிரஸும், திமுகவும் ஆட்சியில் இருந்த போது, தமிழ்நாட்டுக்கு எதுவுமே செய்யாமல் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தார்கள் எனவும், இதற்கு மேல் திமுக அரசு நீடிக்கவே கூடாது என்றும் சூளுரைத்தார்.
மதுரையில் பிரதமர் மோடி
தமிழ்நாட்டில், சட்டமன்ற தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் நிலையில், மதுரை மண்ணிற்கு வருகை தந்தார் பிரதமர் நரேந்திர மோடி. மதுரையில் காலடி எடுத்து வைத்ததும், விமான நிலையத்திலேயே ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அரசு நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரதமர் நரேந்திர மோடி, தேசிய நெடுஞ்சாலை ஆணையம் சார்பிலான பல்வேறு திட்டப் பணிகளை தொடங்கி வைத்தார்.
அந்த வகையில், பரமக்குடியில் இருந்து ராமநாதபுரம் வரை ஆயிரத்து 853 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 47 கிலோ மீட்டர் தூரத்திலான 4 வழிச்சாலை, புதுச்சேரி - மரக்காணம் இடையே 46 கிலோ மீட்டர் தூரத்திற்கு 2 ஆயிரத்து 157 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நான்கு வழிச்சாலை திட்டப் பணிகளை காணொலி மூலம் திறந்து வைத்தார். மேலும், சீரமைப்பு பணிகள் நிறைவுற்ற காரைக்குடி, மணப்பாறை, சோழவந்தான் உள்ளிட்ட 8 ரயில் நிலையங்களை பிரதமர் மோடி திறந்து வைத்தார். சென்னை கடற்கரை - எழும்பூர் இடையே நான்காவது ரயில் பாதை அமைக்கும் திட்டத்தையும் துவக்கி வைத்தார் பிரதமர்.
திருப்பரங்குன்றத்தில் பிரதமர் மோடி
திட்டங்களை தொடங்கி வைத்த கையோடு முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றான திருப்பரங்குன்றத்தில் பிரதமர் மோடி சுவாமி தரிசனம் செய்தார். அதோடு, திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்ற அனுமதிக்கவில்லை எனக் கூறி பூர்ணசந்திரன் என்ற நபர் உயிரை மாய்த்துக் கொண்ட நிலையில், பூர்ணசந்திரன் குடும்பத்தினரையும் பிரதமர் மோடி சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.
பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி
இதனையடுத்து, மதுரை மண்டேலா நகரில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தேசிய ஜனநாயக கூட்டணியின் பிரம்மாண்ட பொதுக் கூட்டத்தில் பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது, திமுக மீண்டும் ஆட்சியை பிடிக்க கனவு கண்டு கொண்டிருக்கிறது என்ற பிரதமர், அந்த கனவு கானல் நீர் ஆகி விடும் என்றார். நீண்ட காலத்திற்கு கடந்த 2021 தேர்தலில் தான் திமுகவுக்கு மெஜாரிட்டி கிடைத்தது என்ற பிரதமர், நம்பி ஓட்டுப் போட்ட மக்களின் எதிர்பார்ப்பை மண்ணோடு மண்ணாக்கி விட்டது எனவும், தமிழ்நாட்டை திமுக கொள்ளையடித்துக் கொண்டிருக்கிறது எனவும் கடுமையாக சாடினார். திமுகவின் மாடலே பணம் என்றால் நமக்கு பிரச்சனை என்றால் மக்களுக்கு என்பது தான் என விமர்சித்தார்.
ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தார்கள்
பிரதம மந்திரி வீட்டு வசதி திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டில் 6 லட்சம் வீடுகள் கட்டி முடிக்கப்பட்டன என்ற பிரதமர், திமுக அரசு காலம் தாழ்த்தி வருவதால் இன்னும் 3 லட்சம் வீடுகள் நிலுவையில் இருக்கிறது என்றார். திமுகவின் சில்லறைத்தனமான அரசியலால் ஏழை மக்கள் ஏன் பாதிக்கப்பட வேண்டும்? எனவும் பிரதமர் கேள்வி எழுப்பினார். 2014ஆம் ஆண்டுக்கு முன்பு திமுகவும், காங்கிரஸும் மத்தியில் ஆட்சியில் இருந்த போது மக்களுக்காக எதுவுமே செய்யாமல் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தார்கள் என கிண்டலடித்த பிரதமர், திமுக - காங்கிரஸ் ஆட்சியில் ஒதுக்கப்பட்டதை விட தமிழ்நாட்டின் ரயில் திட்டங்களுக்கு 8 மடங்கு அதிகமாக நிதி ஒதுக்கியிருப்பதாக பெருமிதம் தெரிவித்தார். திமுக நல்லது செய்யாது, செய்யவும் விடாது எனவும், வாய்ப்பு இருந்த போது மக்களுக்கு எதுவும் செய்யாமல் இருந்து விட்டு தற்போது வாய் கிழிய பேசிக் கொண்டும், கூப்பாடு போட்டுக் கொண்டும் இருப்பதாக விமர்சித்தார்.
ஊழல் செய்வதில் போட்டி
அடுத்ததாக, அரசியலில் நேர்மை என்றால் நாட்டிற்கே எடுத்துக்காட்டு காமராஜர் தான் என புகழ்ந்து தள்ளிய பிரதமர், காமராஜருக்கு நேர் எதிர் தான் திமுக என விளாசினார். நகராட்சி நிர்வாகத் துறையில் 1020 கோடி ரூபாய் ஒப்பந்த ஊழல், பணி நியமனம் வழங்க 888 கோடி ரூபாய் ஊழல், மணல் கொள்ளையில் 4 ஆயிரத்து 700 கோடி ரூபாய் ஊழல், டாஸ்மாக்கில் 40 ஆயிரம் கோடி ரூபாய் ஊழல் என திமுக மீதான ஊழல் புகார்களை மேடையில் பட்டியலிட்ட பிரதமர் மோடி, வழக்கமாக மக்கள் பணி செய்வதில் தான் அமைச்சர்கள் போட்டி போடுவார்கள். ஆனால், திமுக அமைச்சர்கள் தான் ஊழல் செய்வதில் போட்டி போட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்றும், இதற்கு மேல் திமுக அரசு நீடிக்க எந்த தார்மீக உரிமையும் இல்லை என்றும் உரையாற்றினார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved