Also Watch
Read this
By: Web Team

மருத்துவக்கல்லூரி அருகே குப்பைகளை கொட்டி, தீயிட்டு எரிப்பதால் ஏற்படும் புகை மூட்டத்தால் நோயாளிகள் கடும் அவதி அடைந்துள்ளனர்.
சிவகங்கை மாவட்டம், அரசு மருத்துவக்கல்லூரி அருகே நகராட்சி நிர்வாகம், அலட்சியமாக குப்பைகளை கொட்டி அடிக்கடி எரிப்பதால், புகை மூட்டம் பரவி, நோயாளிகள் மூச்சுத் திணறலால் அவதிக்குள்ளாகி வருகின்றனர். சிவகங்கை நகராட்சியின் கீழ், சுமார் 5 டன் அளவிற்கும் மேலான குப்பைகள் நகராட்சி நிர்வாகத்தால் சேகரிக்கப்படுகிறது. இந்த குப்பைகளை தரம் பிரித்து அப்புறப்படுத்த நகர் பகுதிக்குள் 5க்கும் மேற்பட்ட குப்பை தரம் பிரிக்கும் கிடங்கு உள்ளது.
ஆனால், குப்பைகளை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை அருகே உள்ள திறந்தவெளியில் கொட்டி, அடிக்கடி நகராட்சி ஊழியர்கள் தீயிட்டு எரிக்கின்றனர். இதனால், அப்பகுதி முழுவதும் புகை பரவி அருகில் உள்ள மருத்துவமனைக்கு செல்கிறது.

இதன் காரணமாக, சிகிச்சையில் இருக்கும் நோயாளிகள் மூச்சு திணறல் உள்ளிட்ட பிரச்சனைகளால் பாதிக்கப்படுகின்றனர்.
நகராட்சி நிர்வாகம் குப்பைகளைக் கையாள்வதில் இதுபோல் அலட்சியமாக செயல்படாமல், முறையாக அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.