Also Watch
Read this
புதுச்சேரியில் மக்களை சந்தித்து விசில் சின்னத்திற்கு வாக்கு சேகரித்த தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், தமிழ்நாட்டை போலவே புதுச்சேரியிலும் திமுக -காங்கிரஸ் கூட்டணி குழம்பி போன கூட்டணியாக தான் இருக்கிறது எனவும், பாஜக - என்.ஆர்.காங்கிரஸ் கூட்டணி சோர்ந்து போன கூட்டணி எனவும் விமர்சித்தார்.

அரசியலுக்கு வந்த பிறகு காங்கிரஸ் கட்சியை விமர்சிக்காமல் இருந்த விஜய், புதுச்சேரி பிரச்சாரத்தில் முதன் முறையாக விமர்சித்தார்.

புதுச்சேரியில் விஜய்...
எங்கு பார்த்தாலும் மக்கள் கூட்டம், திரும்பிய பக்கமெல்லாம் வரவேற்பு என புதுச்சேரியே விஜய்யின் வருகையால் குலுங்கி போய் விட்டது என்று தான் சொல்ல வேண்டும். புதுச்சேரியில் ஏப்ரல் 9ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறும் நிலையில், த.வெ.க. மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து விஜய் வாக்கு சேகரித்தார். சென்னையில் இருந்து ரேஞ்ச் ரோவர் கருப்பு நிற காரில் புறப்பட்ட விஜய்யை, ஏராளமான ரசிகர்கள் பின் தொடர்ந்து சென்றனர். புதுச்சேரிக்குள் நுழையும் போது காரில் இருந்து பிரச்சார வேனுக்கு மாறிய விஜய், சாலை வலம் சென்றார்.

இளநீர், ஜூஸ், கூலிங்கிளாஸ்...
வழிநெடுகிலும் மேள, தாளங்கள் முழங்க மக்கள் கூடி நின்று விஜய்க்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். தொண்டர்கள், ரசிகர்கள் அன்பு மழையில் நனைந்த விஜய், கையசைத்தபடியும், கையெடுத்து கும்பிட்டபடியும் சென்றார்.

மாலைகள், கட்சி துண்டுகளை வீசியெறிந்து அன்பை வெளிப்படுத்திய மக்கள், ஆங்காங்கே இளநீர், ஜூஸ், பதநீர் ஆகியவற்றை விஜய்க்கு வழங்கினர். தொண்டர் கொடுத்த இளநீரை பருகியபடி மக்களை சந்தித்த விஜய், நடுவே 2 தொண்டர்கள் கொடுத்த கூலிங் கிளாஸை வாங்கி போட்டு காட்டினார்.

களத்தில் துணை ராணுவப்படை
சாலை முழுவதும் விஜய்யின் ரசிகர்கள், தவெக தொண்டர்கள் ஆக்கிரமித்து நிற்க, எங்குமே போக்குவரத்து நெரிசல் ஏற்படாத வண்ணம் காவல்துறையும் சிறப்பான ஏற்பாடுகளை செய்திருந்தது.

விஜய்யின் வருகைக்காக துணை ராணுவ படையும் களத்தில் இறக்கப்பட்டு பாதுகாப்பு கொடுக்கப்பட்டது. முதலில் தட்டாஞ்சாவடி ஒழுங்குமுறை விற்பனை கூட மைதானத்திற்கு வந்த விஜய், காங்கிரஸும், திமுகவும் கூட்டணியில் இருப்பதாக கூறிக் கொண்டே ஒருவரை எதிர்த்து ஒருவர் போட்டியிடுவதாக கிண்டலடித்தார்.

விஜய் அளித்த வாக்குறுதிகள்
கடைசியாக புதுச்சேரி மக்களுக்கான தேர்தல் வாக்குறுதிகளை அறிவித்தார் விஜய். துணை நிலை ஆளுநரின் தலையீடு இல்லாத முழுமையான மாநில அந்தஸ்து அமைய சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும், த.வெ.க. ஆட்சி அமைந்து 6 மாதத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படும், 25 ஆயிரம் ரூபாய் மகப்பேறு உதவித் தொகையாக வழங்கப்படும், மீனவர்களுக்கு டீசலுக்கு லிட்டருக்கு 20 ரூபாய் மானியம் என பல்வேறு வாக்குறுதிகளை அறிவித்து விசில் சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார்.

தொண்டர்கள் அட்ராசிட்டி
முன்னதாக, விழுப்புரத்தில் விஜய்யின் கார் மீது தொண்டர்கள் ஏறியதால் பரபரப்பு ஏற்பட்டது.

ஓடும் காரின் முன்பகுதியில் ஏறிய தொண்டர்கள் சிலரை பவுன்சர்கள் அப்புறப்படுத்தினர். அதேபோல, புதுச்சேரிக்குள் ரோடு ஷோ சென்று கொண்டிருக்கும் போது பிரச்சார வாகனம் மீது ஏற முயன்ற தொண்டரை, பவுன்சர்கள் அப்புறப்படுத்தினர்.

புதுச்சேரியில் மொத்தம் மூன்று இடங்களில் விஜய் பேச திட்டமிட்டு இருந்த நிலையில், கூட்டம் காரணமாக ஒரு இடத்தில் மட்டும் விரிவாக பேசிய விஜய், மற்ற இரண்டு இடங்களிலும் விசில் சின்னத்திற்கு ஓட்டுப் போடுங்கள் என சுருக்கமாக முடித்துக் கொண்டார்.

கடைசியாக தவளக் குப்பத்தில் பிரச்சாரம் மேற்கொண்ட விஜய், மணவெளி தொகுதி வேட்பாளர் ராமு பெயரை சொல்வதற்கு பதிலாக பாஜக வேட்பாளர் செல்வம் பெயரை மாற்றிக் கூறியது சர்ச்சையானது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved