Also Watch
Read this
திருச்சியில், ரவுடியை 3 பேர் கொண்ட கும்பல் பைக்கில் துரத்தி சென்று ஓட ஓட வெட்டிக் கொலை செய்யப்பட்ட சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பெண் ஒருவருடன் திருமணத்தை மீறிய உறவில் ரவுடி இருந்ததே கொலைக்கு காரணம் என தகவல் வெளியாகி உள்ளது.

இரவில் நடந்த பயங்கரம்
திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் அருகே உள்ள அரியமங்கலத்தைச் சேர்ந்தவர் 24 வயதான பாஷா. இவர் மீது அரியமங்கலம் காவல் நிலையம் உள்ளிட்ட பல்வேறு காவல் நிலையங்களில் குற்ற வழக்குகள் உள்ளன. இந்நிலையில் சம்பவத்தன்று இரவு 11 மணியளவில் பாஷா, அரியமங்கலம் அண்ணா நகர் வினோபாஜி தெருவில் இரு சக்கர வாகனத்தில் சென்றார். அப்பொழுது 3 பேர் கொண்ட கும்பல் ஆயுதங்களுடன் பைக்கில் துரத்தி வந்ததால், இரு சக்கர வாகனத்தில் தப்பியோடிய முயன்ற ரவுடி பாஷா சாலை வளைவில் திரும்பிய போது, நிலைதடுமாறி கீழே விழுந்தார்.

சிசிடிவி கேமரா இருந்தும்...
வேகமாக எழுந்து, அங்கிருந்து தப்ப முயன்ற ரவுடியை அந்த கும்பல் சுற்றி வளைத்து அரிவாளால் தலையிலேயே சரமாரியாக வெட்டிவிட்டு அவரது வாகனத்தையும் திருடிச் சென்றது. இதில் தலையில் படுகாயமடைந்த ரவுடி நிகழ்விடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். அப்பகுதியில் சிசிடிவி கேமராக்கள் இருந்தபோதிலும், கொலையாளிகள் எவ்வித பதற்றமும் இன்றி மிக நிதானமாக இக் கொலைச் சம்பவத்தை அரங்கேற்றிவிட்டுத் தப்பினர். தகவலறிந்து வந்த அரியமங்கலம் போலீசார் ரவுடி பாஷாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனர்.

வழக்குப்பதிவு, விசாரணை
ரவுடி பாஷா பெண் ஒருவருடன் திருமணத்தை மீறிய உறவில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த விவகாரத்தால் ஆத்திரமடைந்த அப்பெண்ணின் சகோதரரே பாஷாவை வெட்டிப் படுகொலை செய்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ள நிலையில், போலீசார் கொலையாளிகளை தேடி வருகின்றனர். கடந்த செப்டம்பர் மாதம் பாஷாவை மர்ம நபர்கள் கொலை செய்ய முயன்றதாகவும், அப்போது அவர்கள் அரிவாளால் வெட்டியதில் வலது கையில் 2 விரல்கள் துண்டானதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. இருப்பினும் அந்த பெண்ணுடன் தொடர்பை பாஷா கைவிடாததால் தற்போது ஸ்கெட்ச் போட்டு கொலை செய்ததும் தெரிய வந்துள்ளது. அரியமங்கலம் பகுதியில் ரடிவு வெட்டி படுகொலை செய்யப்பட்ட இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.