Also Watch
Read this
By: Manigandan Raja
பெரம்பலூர் மாவட்டம், திருமாந்துறையில் ரவுடி கொட்டு ராஜா சுட்டுக்கொலை செய்யப்பட்டார். ரவுடி வெள்ளைக்காளியை போலீசார் அழைத்து சென்ற போது நாட்டு வெடிகுண்டு வீசி கொல்ல முயன்ற சம்பவத்தில் அதிரடி நடவடிக்கையை போலீசார் எடுத்துள்ளனர்.
வெள்ளைக்காளி மீது வெடிகுண்டு வீச்சு
கடந்த 24ஆம் தேதி பெரம்பலூரில் போலீஸ் வேனில் அழைத்துச் செல்லப்பட்ட பிரபல ரவுடி வெள்ளைக் காளி மீது நாட்டு வெடிகுண்டு வீசி கொலை செய்ய முயன்ற சம்பவத்தில், கொட்டு ராஜா சம்மந்தப்பட்டிருந்தார். குற்ற வழக்குகள் தொடர்பாக, ரவுடி வெள்ளைக் காளியை, திண்டுக்கல் மற்றும் புதுக்கோட்டை நீதிமன்றங்களுக்கு போலீஸார் அழைத்துச் சென்றுவிட்டு மீண்டும் சென்னைக்கு வேனில் அழைத்துச் சென்று கொண்டிருந்தனர். அந்த வேனில் வெள்ளைக் காளி மற்றும் 10 போலீஸார் இருந்தனர். அப்போது பெரம்பலூர் மாவட்டம் எறையூர் சுங்கச்சாவடி அருகே வேனை நிறுத்தி, ஒரு ஓட்டலில் சாப்பிடுவதற்காக வெள்ளைக் காளியுடன் போலீஸார் நடந்து சென்றனர். அப்போது போலீஸ் வாகனத்தை பின்தொடர்ந்து 2 கார்களில் வந்த 15 பேர் கொண்ட கும்பல், திடீரென வெள்ளைக் காளி மீது நாட்டு வெடிகுண்டுகளை வீசியது. இதில், காளி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். இதில் 3 போலீஸார் காயமடைந்தனர்.
ஐந்து தனிப்படை தேடுதல் வேட்டை
இந்த சம்பவத்தை அடுத்து, நாட்டு வெடிகுண்டு வீசிய கும்பலை பிடிக்க 5 தனிப்படைகள் அமைக்கப்பட்ன. இந்த சம்பவத்தில் தொடர்புடைய கொட்டு ராஜா என்ற ரவுடியை போலீஸார் நேற்று கைது செய்தனர். அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் ஆயுதங்கள் மற்றும் நாட்டு வெடிகுண்டுகளை பெரம்பலூர் - திருமாந்துறை வனப்பகுதியில் பதுக்கி வைத்துள்ளதாக தெரியவந்தது. இவற்றைக் கைப்பற்ற போலீஸார் அங்கு கொட்டு ராஜாவை அழைத்து சென்றுள்ளனர்.
போலீசாரை வெட்டிவிட்டு தப்ப முயற்சி
அப்போது, காவல் துறை வாகனம் மீது வெடிகுண்டு வீசியும், போலீஸ் எஸ்ஐ சங்கரை அரிவாளால் வெட்டிவிட்டும் தப்பிக்க அவர் முயற்சித்துள்ளார். இதையடுத்து காவல் துறை ஆய்வாளர் நந்தகுமார் கொட்டு ராஜாவை துப்பாக்கியால் சுட்டதில், அவர் உயிரிழந்தார் என்று காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved