Also Watch
Read this
கோவை அருகே ஏமாற்றி திருமணம் செய்து, 3 லட்சம் ரூபாய் மோசடி செய்த விவகாரத்தில் சீட்டிங் லேடியை விட்டுவிட்டு, பாதிக்கப்பட்ட வெல்டிங் தொழிலாளியை ஆபாச வார்த்தைகளால் திட்டியும், மிரட்டியும், லஞ்சம் வாங்கியும், எஸ்ஐ எல்லைமீறி உள்ளது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இதனை வெல்டிங் தொழிலாளி தனது செல்போனில் ரெக்கார்டு செய்ததால் உஷாரான எஸ்ஐ, தலைமை காவலர் மூலம் லஞ்சப்பணத்தை மீண்டும் கொடுக்க முயன்ற ஆடியோவும் லீக் ஆகி உள்ளது.

ஏற்கெனவே திருமணம் ஆனவருடன்...
பொள்ளாச்சியை சேர்ந்த வெல்டிங் தொழிலாளி முகேஷ் என்பவருக்கு ஏற்கெனவே திருமணமான ஒரு பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. தனக்கு விவாகரத்து ஆகிவிட்டதாக அந்த பெண் கூறியதை நம்பி அவரை திருமணம் செய்த முகேஷ் கோவைக்கு அழைத்துச்சென்று 3 மாதங்களாக குடும்பம் நடத்தி உள்ளார். இதனிடையே, விவாகரத்து ஆகவில்லை என்பதையறிந்து முகேஷ் நியாயம் கேட்ட, கோபித்துக்கொண்டு தனது கணவர் வீட்டுக்கே சென்றுவிட்டார் அந்த பெண். அதன்பிறகு, தான் கொடுத்த 3 லட்சத்தை அந்த பெண்ணிடம் முகேஷ் திருப்பிக்கேட்க, அதுதொடர்பாக தம்பதிக்குள் சண்டை வந்துள்ளது.

ரூ.5,000 லஞ்சம்...
இதனால் அந்த பெண்ணும், அவரது கணவரும் விஷமருந்தினர். இது தொடர்பாக விசாரணை செய்த கிழக்கு காவல் நிலைய உதவி ஆய்வாளர் ஜான்சன், முகேஷை மிரட்டியதோடு, அவரிடம் 5 ஆயிரம் ரூபாய் லஞ்சமும் வாங்கியதாக தெரிகிறது. இதனை, முகேஷ் செல்போனில் ரெக்கார்டு செய்ததை பார்த்த ஜான்சன், தனது வேலைக்கு ஆபத்து வந்துவிடுமோ என்றெண்ணி, பணத்தை மீண்டும் அவரிடமே கொடுக்குமாறு தலைமை காவலர் நாகராஜனுக்கு உத்தரவுபோட்டார்.

வார்த்தைகள் வலிக்கிறது...
அந்தவகையில் முகேஷை தொடர்புகொண்ட நாகராஜன், கஷ்டப்படுகிறவர்களின் பணம் நமக்கு வேண்டாம் என எஸ்ஐ கூறியதாகவும், அதனால் கொடுத்த 5 ஆயிரத்தை வாங்கி கொள்ளுமாறும் கூறினார். ஆனால், அதனை வாங்க மறுத்த முகேஷ், ஜான்சன் தன்னை அடித்தாலும்கூட வலித்திருக்காது, அவர் பேசிய வார்த்தைகள் மிகவும் வலிக்கிறது என உடைந்து அழுதார்.

பணத்தை வாங்க மறுத்து...
நியாயப்படி பார்த்தால் பாதிக்கப்பட்டதும் பணத்தை இழந்ததும் நான்தானே? எனக்கு தானே நீதி கிடைத்திருக்க வேண்டும் என கண்ணீர் வடித்த முகேஷ், 3 லட்சத்தையே ஏமாந்துவிட்டேன், வெறும் 5 ஆயிரம்தானே, நீங்களே வைத்துக்கொள்ளுங்கள் என விரக்தியில் பேசினார். தலைமை காவலர் நாகராஜனும், எஸ்ஐ ஜான்சன் நல்ல எண்ணத்தில்தான் பணத்தை கொடுக்க சொல்வதாக எவ்வளவோ பசப்பி பார்த்தார். ஆனாலும், அந்த பக்கமே இனி நான் வரமாட்டேன் எனக்கூறிவிட்டு அழுதபடியே இணைப்பை துண்டித்தார் முகேஷ்.

காவலர்கள் சஸ்பெண்ட்
இந்த ஆடியோ அசுரவேகத்தில் சமூகவலைதளங்களில் வலம்வர, உதவி ஆய்வாளர் ஜான்சன் மற்றும் தலைமை காவலர் நாகராஜன் இருவரையும் சஸ்பெண்ட் செய்து காவல் கண்காணிப்பாளர் பவன்குமார் ரெட்டி நடவடிக்கை எடுத்துள்ளார்.