Also Watch
Read this

நாகர்கோவில் சிறைக்கைதி மரணம் குறித்து முதலமைச்சர் விஜய் வாய் திறக்காமல் இருப்பது ஏன்? என திமுக முன்னாள் அமைச்சர் சிவசங்கர் கேள்வி எழுப்பி உள்ளார்.
சிவகங்கை அஜித்குமார் காவல் மரணம் தொடர்பாக, ’சாரி சொல்லாதீங்க CM சார், நீதி கொடுங்க,’ எனக் கேட்டதை சுட்டிக்காட்டி விமர்சித்து உள்ளார்.
ஸ்டிக்கர் ஒட்டும் அரசு
பெரம்பலூர் மாவட்டம், குன்னம் சட்டமன்ற தொகுதியில் தொடர்ந்து இரண்டாவது முறையாக வெற்றி பெற்ற சட்டமன்ற உறுப்பினர், முன்னாள் அமைச்சர் சிவசங்கர் குன்னம் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தை திறந்து வைத்தார். தொடர்ந்து கட்சி நிர்வாகிகளின் வாழ்த்துக்களை பெற்றுக்கொண்ட சிவசங்கர் கூறியதாவது; தமிழகத்தில் தவெக ஆட்சி அமைந்ததே ஒரு மோசமான சூழலாக உள்ளது. ஏற்கெனவே சிறப்பாக செயல்பட்ட திமுக, அதிமுகவின் திட்டங்களை தனது திட்டங்களைப் போல ஸ்டிக்கர் ஒட்டிக் கொள்கிறது தவெக அரசு.
திமுக, அதிமுக திட்டங்களை...
அதிமுகவை குறிவைத்து கட்சியை கைப்பற்ற முயலும் தவெக அரசு, அதற்காக அச்சுறுத்தும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதிமுக ஆட்சியில், மருத்துவ படிப்புக்காக 7.5% இடஒதுக்கீடு, திமுகவின் வேளாண் உள்ளிட்ட பல்வேறு உயர்கல்வி படிப்புகளுக்கான இடஒதுக்கீடுகளை, தவெக வழங்கியதைப் போன்று, தற்போது பணியாளர்களுக்கு ஆணை வழங்கி உள்ளது. கரூரில் முதல்வர் வழங்கிய அரசுப் பணி ஆணை தொடர்பான வழக்கு, நீதிமன்றத்தில் உள்ள நிலையில் பாமக தலைவர் அன்புமணி, கட்சி கூட்ட நெரிசலால் உயிரிழந்த பாமகவினருக்கும் அரசுப் பணி வழங்க கோரியதைப் போல, இனி இதுபோன்ற பல்வேறு கருத்துக்களும் வலுக்கும்.

திருமாவளவன் கருத்து
அண்ணாமலையின் புதிய கட்சி தொடக்கம் என்பது பாஜகவால் நேரடியாக கால் ஊன்ற முடியாத தமிழகத்தில் B C D போன்ற அதன் அடுத்த அமைப்பாகவே செயல்படும். திமுக உடன் இருந்த இணக்கம் போல், தவெக உடன் இடதுசாரிகள் இல்லை. திருமாவளவன் கூறும் இரு துருவ போட்டி என்பது, விஜய் கூறும் திமுக, தவெக இடையே தான் போட்டியே என்பதைப் போல் உள்ளது.

ரசிகர்களுக்காக மட்டும்...
தற்போதைய முதல்வர், ரசிகர்களுக்காக மட்டுமே மேடையேறி பேசுகிறார். மக்களுக்கான கருத்தை பேசுவதில்லை. லாக்கப் மரணம் தொடர்பாக, முதல்வர் மவுனமாக இருக்கிறார். கடந்த திமுக ஆட்சியில், "சாரி சொல்லாதீங்க CM சார், நீதி கொடுங்க." என கேட்டவர், தற்போது மௌனம் காப்பது வேடிக்கையாக உள்ளது.
இவ்வாறு சிவசங்கர் கூறினார்.