Also Watch
Read this
திமுகவின் முன்னாள் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு, தற்போது லஞ்ச ஒழிப்புத்துறையின் தீவிர விசாரணை வளையத்திற்குள் வந்துள்ளார். கரூரில் சாலை அமைக்காமலேயே பல கோடி ரூபாய் முறைகேடு செய்யப்பட்டதாக அறப்போர் இயக்கம் கொடுத்த புகாரின் பேரில் நடவடிக்கை பாய்ந்துள்ள நிலையில், நீதிமன்ற உத்தரவின்படி லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகத்தில் ஆஜரான எ.வ.வேலுவிடம், அதிகாரிகள் 100க்கும் மேற்பட்ட கேள்விகளுடன் சுமார் 5 மணி நேரம் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தியுள்ளனர்.

தீவிர விசாரணை வளையத்தில்...
திமுகவின் அதிகாரம், கட்சியின் கஜானா, மாநாடோ, பொதுக்கூட்டமோ எதுவாக இருந்தாலும் முன்னின்று கவனிக்கும் பொருளாதார ஜமீன். 2026 சட்டமன்றத் தேர்தலின் வடக்கு மண்டல சூப்பர் பவர். இப்படி திமுகவுக்குள் எத்தனையோ பவர்ஃபுல் அடைமொழிகளோடு வலம் வந்த முன்னாள் பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு, இப்போது லஞ்ச ஒழிப்புத்துறையின் தீவிர விசாரணை வளையத்துக்குள் சிக்கி, தத்தளித்து கொண்டிருக்கிறார்.

11 பேர் மீது வழக்கு...
அறப்போர் இயக்கம் கொடுத்த புகார் தான் இந்த விவகாரத்தின் ஆணிவேர். கரூர் மாவட்டத்தில் தொட்டக்குறிச்சி - கரூர் சாலை, மண்மங்கலம் - நன்னியூர் சாலை உட்பட பல சாலைகளை தரம் உயர்த்த 4 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. ஆனால், கடந்த 2022ஆம் ஆண்டு மார்ச் வரை ஒரு கூடை ஜல்லி கூட கொட்டாமல், வெறும் பேப்பரிலேயே சாலை அமைத்து சங்கர் ஆனந்த் இன்ப்ரா என்ற ஒப்பந்த நிறுவனத்திற்கு 3 கோடியே 20 லட்சம் ரூபாயை வாரி வழங்கியிருக்கிறார்கள் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள். விவகாரம் வெடித்ததும், அவசர அவசரமாக இரவோடு இரவாக போலீஸ் பாதுகாப்புடன் சாலை அமைத்து ஆதாரங்களை அழிக்க பார்த்தனர். ஆனால், அதற்குள் கவண் கல்லை எறிந்துவிட்டது அறப்போர் இயக்கம். இந்த கூட்டுச்சதி மற்றும் ஊழல் வழக்கில் எ.வ.வேலு, ஒப்பந்ததாரர் உட்பட 11 பேர் மீது 8 பிரிவுகளின் கீழ் எஃப்ஐஆர் பாய்ந்தது.

ஆஜரானார் எ.வ.வேலு
கடந்த 25ஆம் தேதி, எ.வ.வேலுவின் சென்னை ஆழ்வார்பேட்டை இல்லம், திருவண்ணாமலை வீடு என 20க்கும் மேற்பட்ட இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் அதிரடி வேட்டை நடத்தினர். அங்கிருந்து முக்கிய ஆவணங்களும், கணக்கில் வராத 40 லட்சம் ரூபாயும் சிக்கியதாக லஞ்ச ஒழிப்புத்துறை தரப்பில் கூறப்பட்டது.

இதையடுத்து, ஜூலை 3ஆம் தேதி எ.வ.வேலு நேரில் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டது. இந்த சூழலில், எனக்கு உடம்பு சரியில்லை, மெடிக்கல் செக்கப் என்று எ.வ.வேலு சிங்கப்பூர் பறக்க, டென்ஷனான லஞ்ச ஒழிப்புத்துறை அவருக்கு எதிராக லுக்அவுட் நோட்டீஸ் பிறப்பித்து அதிரடி காட்டியது. இறுதியாக சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டதை தொடர்ந்து, வேறு வழியின்றி ஆலந்தூரில் உள்ள லஞ்ச ஒழிப்புத்துறை தலைமை அலுவலகத்தில் ஆஜரானார் எ.வ.வேலு.

சுமார் 5 மணி நேரமாக...
காலை 10.50 மணிக்கு வேலுவின் கார் ஆலந்தூர் அலுவலகத்திற்குள் நுழைந்தது. டிஎஸ்பி பாஸ்கரன் தலைமையிலான அதிகாரிகள் குழு, எ.வ.வேலுவை உட்கார வைத்து விசாரணையை தொடங்கினர். நெடுஞ்சாலைத்துறை டெண்டர்களில் 20 முதல் 30 சதவீதம் வரை முன்கூட்டியே கமிஷன் கைமாறியதா? இப்படி 100க்கும் மேற்பட்ட கேள்விகளை எழுத்துப்பூர்வமாக தயாரித்து எ.வ.வேலுவிடம் அதிகாரிகள் நீட்டினர். அவர் அளித்த பதில்கள் அனைத்தும் வீடியோ பதிவாகவும், கணினியிலும் பதிவு செய்யப்பட்டன. காலை 11 மணிக்கு தொடங்கிய இந்த விசாரணை மாலை வரை சுமார் 5 மணி நேரம் நீடித்தது.

என் மேல் பாசம் அதிகம்
விசாரணை முடிந்து வெளியே வந்த எ.வ.வேலு, வழக்கமான தனது புன்னகையை உதிர்த்தபடி செய்தியாளர்களை சந்தித்தார். மடியில் கனமில்லை, வழியில் பயமில்லை, நான் எந்த குற்றமும் செய்யவில்லை. அரசாங்கம் திட்டமிட்டு என்னை இந்த வழக்கில் சேர்த்துள்ளது என்றார். செய்தியாளர்கள் விடாமல், இது தற்போதைய அரசின் பழிவாங்கும் நடவடிக்கையா? என்று காரில் ஏறிய அவரிடம் கேள்வி எழுப்பினர். அதற்கு, தமிழக அரசுக்கு என் மேல் பாசம் அதிகம் என்று நக்கலாக பதிலளித்துவிட்டு காரை பறக்கவிட்டார் எ.வ.வேலு.

வரும் 28ஆம் தேதி...
தன்னை விசாரணை செய்யும் இந்த அதிகாரிகள் தான் 2 மாதங்களுக்கு முன்பு என் கீழ் வேலை செய்தவர்கள் என்று வேலு சப்பக்கட்டு கட்டினாலும், லஞ்ச ஒழிப்புத்துறை திரட்டியுள்ள ஆவணங்கள் வேலுவின் கழுத்தை நெரிக்க தயாராகவே இருக்கிறது என்கிறார்கள் விவரமறிந்தவர்கள். வரும் 28ஆம் தேதி இந்த வழக்கு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரும்போது, அறிவாலய கஜானாவின் விக்கெட்டை லஞ்ச ஒழிப்புத்துறை வீழ்த்துமா? அல்லது வேலு வழக்கம் போல நழுவுவாரா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.