Also Watch
Read this
By: Manigandan Raja
சென்னை மத்திய கைலாஷ் எல் வடிவ மேம்பால ஊழலை மறைக்க, திமுக அரசு என்ன தான் ஏமாற்று வேலைகளை செய்தாலும், ஊழலுக்கான தண்டனையில் இருந்து தப்ப முடியாது என்று, பாமக தலைவர் அன்புமணி கூறி உள்ளார்.

ஊழலை மூடி மறைக்க முடியாது
இதுதொடர்பாக, அன்புமணி வெளியிட்ட பதிவு;
சென்னை மத்திய கைலாஷ் பகுதியில் எல் வடிவ மேம்பாலம் தரமற்றும், பலவீனமாகவும், அதிர்வுகளை ஏற்படுத்தும் வகையிலும் கட்டப்பட்டிருப்பதாக தொடர்ந்து குற்றம் சாட்டி வந்த நிலையில், இப்போது மேம்பாலத்தின் மீது அவசர, அவசரமாக தார்ச்சாலை அமைக்கப்பட்டு உள்ளது. உலகிலேயே புதிதாக அமைக்கப்பட்ட கான்க்ரீட் பாலத்தின் மீது, தார்ச்சாலை அமைத்த ஒரே கம்பெனி கடந்த ஐந்தாண்டுகளாக தமிழ்நாட்டைச் சீரழித்த திமுக கம்பெனி தான். இத்தகைய தார் பூச்சு வேலைகளின் மூலம் பாலம் கட்டுவதில் நடந்த ஊழலை மூடி மறைக்க முடியாது.

விதிமுறைகளை மீறி...
2015ஆம் ஆண்டு நடைபெற்ற இந்திய சாலைகள் மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட விதிகளின்படி, அதிக போக்குவரத்து இல்லாத கிராமப் பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள பாலங்களின் மேற்பரப்பில் வேண்டுமானால் தார் சாலை அமைக்கலாம், நகர்ப்புறங்களில் அவ்வாறு செய்யக்கூடாது. ஆனால், இதிலும் விதிகளை மீறி தார்ச்சாலை அமைத்திருக்கிறது. விதி மீறலுக்கு அதிகாரிகளும் துணையாக இருந்துள்ளனர்.

என்ன செய்யலாம்?
மேம்பாலத்தின் மீது தார்ச்சாலை அமைப்பது போன்ற பயனற்ற செயல்களை செய்வதற்கு பதிலாக...
* எல் வடிவ மேம்பாலத்தின் குறைபாடுகள் குறித்து பாலத்திற்கு அடுத்த வளாகத்தில் உள்ள ஐஐடி பேராசிரியர்கள் அடங்கிய குழுவைக் கொண்டு ஆய்வு நடத்த வேண்டும். அதில் தெரியவரும் தரவுகளின் அடிப்படையில் பாலத்தை வலுப்படுத்துவதற்கான பணிகளை மேற்கொள்ள வேண்டும்.

* தரமற்ற முறையில் எல் வடிவ பாலத்தைக் கட்டிய ஒப்பந்தததாரரை உடனடியாக கருப்புப் பட்டியலில் சேர்க்க வேண்டும், பாலம் கட்டியதற்கான ஒப்பந்த தொகையில் நிலுவை இருந்தால் அதை வழங்காமல் நிறுத்தி வைக்க வேண்டும்.
* மத்திய கைலாஷ் எல் வடிவ மேம்பாலம் கட்டப் பட்டதில் ஊழல் நடந்ததாகக் கூறப்படுவது குறித்து உயர்நிலை விசாரணைக்கு ஆணையிட வேண்டும்.

தண்டனையில் இருந்து தப்ப முடியாது
இவற்றைச் செய்யாமல், எல் வடிவ மேம்பால ஊழலை மறைக்க திமுக அரசு என்ன தான் ஏமாற்று வேலைகளை செய்தாலும், ஊழலுக்கான தண்டனையிலிருந்து தப்ப முடியாது. ஆட்சி மாற்றம் ஏற்பட்டவுடன், எல் வடிவ மேம்பாலம் கட்டப்பட்டதில் நடைபெற்ற ஊழல் குறித்து விசாரணைக்கு ஆணையிடப்படும். அப்போது ஊழலுக்கு காரணமான அனைவரும் நீதியின் தண்டனையை கண்டிப்பாக அனுபவித்தே தீர வேண்டும்.
இவ்வாறு அன்புமணி தெரிவித்துள்ளார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved