Also Watch
Read this
திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையம் அருகே செயல்படும் தனியார் ஆலையில் ஏற்பட்ட அமோனியா வாயு கசிவினால் வடமாநிலத் பெண் தொழிலாளர்களின் உயிர் பறிபோன நிலையில் 60க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இரவு நேர பணியை முடித்துவிட்டு துயில் கொண்டிருந்த அவர்கள் அமோனியாவை அதிகமாக சுவாசித்ததால் நுரையீரல் பாதிக்கப்பட்டு உயிரிழந்ததாக சொல்லப்படுகிறது.

இறால் ஆலையில்...
திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையம் அருகே கன்னிகைப்பேர் கிராமத்தில் st.peter's paul என்ற இறால் பதப்படுத்தப்படும் தனியார் ஆலை செயல்பட்டு வரும் நிலையில், அந்நிறுவனத்தில் நைட் ஷிப்டில் வடமாநிலத்தவர்களும், டே ஷிப்டில் தமிழர்களும் வேலை பார்த்து வந்தனர். இந்நிலையில், இரவு பணியை முடித்துவிட்டு அந்த தொழிற்சாலையின் முதல் தளத்தில் வடமாநிலத்தவர்கள் அசந்து உறங்கி கொண்டிருக்கையில் இந்த கோர சம்பவம் நிகழ்ந்து பலரின் உயிரை காவு வாங்கி உள்ளது.

வெளியேறிய அமோனியா...
இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு இறாலை ஏற்றுமதி செய்யும் இந்நிறுவனம், பதப்படுத்தல் மிஷினுக்காக அமோனியா வாயுவை பயன்படுத்தி வந்துள்ளது. இதன் மூலம் நீண்ட நாட்கள் இறாலை கெட்டுப்போகாமல் வைத்திருக்க முடியும் என்ற நிலையில், முறையான பராமரிப்பு இல்லாததால் பைப்பில் லீக்கேஜ் ஆகி அமோனியா வெளியேறி உள்ளது. அப்போது பணியில் இருந்த தமிழ் தொழிலாளர்கள் மூக்கை அடைத்துக்கொண்டு வெளியேறிய நிலையில், உறக்கத்தில் இருந்த வடமாநில தொழிலாளர்கள் காற்றில் கலந்த அமோனியாவை அதிகமாக சுவாசித்திருக்கின்றனர்.

மூச்சுத்திணறல்... மயக்கம்...
இதனால் பலருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு சரிந்து விழுந்ததாக சொல்லப்படும் நிலையில் சிலருக்கு வாய், மூக்கில் ரத்தம் வழிந்தோடியது. உயிருக்கு போராடியவர்களை பலரும் தங்கள் தோளில் தூக்கி கொண்டு ஓடி வந்து காப்பாற்றிய நிலையில், நீரை ஊற்றி ஆசுவாசப்படுத்தி காப்பாற்ற முயன்றும் பலனளிக்காமல் போனது.

அமைச்சர்கள் ஆறுதல்
இந்த கோர சம்பவம் நிகழ்ந்ததை அறிந்த முதலமைச்சர் விஜய், அமைச்சர்கள் ராஜ்மோகன் மற்றும் ஆதவ் அர்ஜூனாவை நிகழ்விடத்துக்கு சென்று கவனித்துக் கொள்ளுமாறு உத்தரவிட்டதோடு மட்டுமில்லாமல், உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு 2 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என அறிவித்துள்ளார். இதனிடையே நிகழ்விடத்திற்கு சென்ற அமைச்சர்கள் அருண்ராஜ், ஆதவ் அர்ஜூனா, ராஜ்மோகன், திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் கவிதா மற்றும் காஞ்சிபுரம் சரக டிஐஜி சேஷசாயி உள்ளிட்டோர் மருத்துவமனைக்கு சென்று பாதிக்கப்பட்டவர்களை பார்வையிட்டு ஆறுதல் தெரிவித்தனர்.

கைது, விசாரணை
கடந்த டிசம்பர் 27ஆம் தேதி கோரமண்டல் ஆலையில் அமோனியா வாயு கசிந்து எண்ணூரையே கலங்கடித்த நிலையில், மீண்டும் குலை நடுங்க வைக்கும் நிகழ்வு திருவள்ளூர் கன்னிகைப்பேர் கிராமத்தில் அரங்கேறியிருக்கிறது. இந்த அமோனியா வாயு நச்சுத்தன்மை மிகுந்தது என்ற நிலையில், அது காற்றில் கலக்கையில் சுமார் 5மணி நேரம் வரை தாக்கம் நீடிக்கும். குறைந்த அளவு அமோனியா வாயு சுவாசிக்கும்போது கண் எரிச்சல், மயக்கம் போன்ற பாதிப்புகளும், அதிகளவு சுவாசித்தால் மூச்சுத் திணறலும் ஏற்படும் என சொல்லப்படுகிறது.

அமோனியா வாயுவை வெகுநேரம் சுவாசிக்கும்போது, நுரையீரல் கடுமையாக பாதிக்கப்பட்டு மரணம் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். இந்த அமோனியா வாயு பல தொழிற்சாலைகளில் பயன்படுத்தப்படும் நிலையில் பேர் அபாயத்தை ஏற்படுத்தும் ஆலைகளில் ஆய்வு மேற்கொள்ள அதிகாரிகளுக்கு முதலமைச்சர் உத்தரவை போட்டுள்ளார்.

அம்மோனியா வாயு கசிவு - 3 பேர் கைது
அம்மோனியா வாயு கசிவு தொடர்பாக இறால் பதப்படுத்தும் தொழிற்சாலை உரிமையாளர் மோகன் மற்றும் அவரது சகோதரர் கைது செய்யப்பட்டனர்.
ஆலையின் மேலாளர் டேனியல் என்பவரையும் கைது செய்து போலீசார் தொடர் விசாரணை மேற்கொண்டுள்ளனர். அம்மோனியா வாயுக்கசிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ள நிலையில், 74 தொழிலாளர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக சுகாதாரத்துறை அறிக்கை வெளியிட்டு உள்ளது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved