Also Watch
Read this
திருப்பூர் ரோட்டரி சங்கம் சார்பில், சமூக ஆர்வலர்களை ஊக்குவிக்கும் வகையில் நடந்த பாசறை நிகழ்வில், அழகிகளின் ஆபாச நடனமும், தொழிலதிபர்களின் போதை நடனமும் பலரையும் முகம் சுழிக்க வைத்துள்ளது. அமைச்சர் செங்கோட்டையன் கலந்துகொண்ட ஒரு நிகழ்வில் ஆபாச நடனம் அரங்கேறியது பலருக்கும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ள நிலையில், தன்னார்வலர்களை இதுபோன்றுதான் ஊக்குவிக்க வேண்டுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

அமைச்சர் பங்கேற்ற நிகழ்வு
அமைச்சர் கலந்து கொண்ட ஒரு நிகழ்வில், இப்படி ஒரு ஆபாச நடனம் தேவையா? உடன் சேர்ந்து ரோட்டரி சங்க நிர்வாகிகளே மது அருந்திவிட்டு நடனம் ஆடுவதா? இதுதான் தன்னார்வலர்களை ஊக்குவிப்பதா? என்பதே பலருக்கும் ஆதங்கம்.

திருப்பூர் ரோட்டரி சங்கம் சார்பில், தன்னார்வ தொண்டு செய்யும் சமூக ஆர்வலர்களை ஊக்குவிக்கும் வகையில், பாசறை நிகழ்வு அங்குள்ள ஒரு தனியார் கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியை அமைச்சர் செங்கோட்டையன் குத்து விளக்கேற்றி துவக்கி வைத்த நிலையில் கவிப்பேரரசு வைரமுத்து சிறப்புரையாற்றினார்.

குவிந்த விஐபிக்கள்
முக்கிய தொழில் அதிபர்கள், ஏற்றுமதியாளர்கள், ரோட்டரி சங்க நிர்வாகிகள் என ஏராளமானோர் கலந்து கொண்ட இந்த நிகழ்வு இரண்டாம் நாள் முடிந்த நிலையில், சொர்க்கம் மனமகிழ் மன்றத்தில் அவர்களுக்கு மது விருந்து மற்றும் கலை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
ரோட்டரி சார்பில் நடந்த இந்த விருந்தும், அழகிகளின் நடனமும்தான் தற்போது திருப்பூர் முழுக்க ஹாட் டாப்பிக்கே. அரசால் தடை செய்யப்பட்ட இளம்பெண்களின் ஆபாச நடனம் கவர்ச்சி பாடல்களுடன் மனமகிழ் மன்றத்தில் அரங்கேற, மேடைக்கு கீழே தொழிலதிபர்கள், சங்க நிர்வாகிகள், ஏற்றுமதியாளர்கள் என பலரும் ஆட்டம் போட்டனர்.

காவல்துறை விசாரணை
முகம் சுளிக்க வைக்கும் வகையில் அரைகுறை ஆடைகளுடன் அழகிகள் நடனமாடியதை அங்கிருந்த சிலர் பேஸ்புக் மூலம் லைவ் ஸ்ட்ரீமிங் செய்து உள்ளனர். இதையடுத்து காவல் ஆணையர் ராஜேஸ்வரி உத்தரவின் பேரில் ஆபாச நடனத்தை போலீசார் தடுத்து நிறுத்தினர். மேலும், இது குறித்து விசாரணையும் நடந்து வருகிறது. இதுஒருபுறமிருக்க, இந்த வீடியோவை பார்க்கும் பலரும், தடை செய்யப்பட்ட ஆபாச நடனத்தை அமைச்சர் கலந்து கொண்ட நிகழ்விலேயே அரங்கேற்றம் செய்வதா? என கேள்வி எழுப்பி வருகின்றனர்.