Also Watch
Read this
பறித்த பதவிகளுக்கு பதில், வேறொரு பதவியை கொடுத்து வேலுமணி தரப்பை இபிஎஸ் விரக்திக்கு ஆளாக்கிய நிலையில், இதற்கு மேலும் இரட்டை இலை காற்றுக்கு ஆசைப்பட்டு கொண்டிருந்தால் அரசியலில் எதிர்காலமே இல்லையெனக் கருதி, அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்துள்ளார். இரண்டு விஜயபாஸ்கர்களும் நாளை தங்களது ஆதரவாளர்களுடன் தவெகவில் இணைய உள்ளதாக கூறப்படும் நிலையில், இடைத்தேர்தல் 7 தொகுதிகளோடு நிற்குமா? அல்லது அதன் எண்ணிக்கை கூடுமா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

ஓரணியாக சென்றாலும்...
சண்டை எல்லாம் ஓய்ந்து, ஓரணியாக கை கோர்த்த பிறகாவது அதிமுகவில் அமைதி திரும்பும் என எதிர்பார்த்தால், ஏதாவது ஒரு வழியில் பரபரப்போ அல்லது சலசலப்போ நிகழ்ந்து கொண்டே தான் இருக்கிறது. தவெகவுக்கு ஆதரவு கொடுத்த கோபத்தில் பறித்த பதவிகளுக்கு பதில் எஸ்.பி.வேலுமணி தரப்பினருக்கு கடந்த 2 நாட்களுக்கு முன்னர் தான் மாற்றுப்பதவிகளை கொடுத்தார் இபிஎஸ். அது மாற்றுப்பதவிகள் என சொல்வதைவிட மாலை போட்டு கௌரவத்திற்காக மேடையில் அமர்ந்துவிட்டு அதன்பின்னர் அக்கடா என அமர்ந்திருக்கும் பதவி என சொல்வதே சாலப்பொருந்தும். இதோ பதவி தருகிறேன், அதோ பதவி தருகிறேன் என்று, இபிஎஸ் இத்தனை நாட்களும் காத்திருக்க வைத்து கடைசியில் பெயருக்கு ஒரு பதவியை கொடுத்திருப்பதாக வேலுமணி தரப்பு விரக்தியில் ஆழ்ந்திருக்கிறது.

அலங்கார பதவியே...
ஏற்கெனவே மாவட்ட செயலாளர்களாக இருந்தவர்களுக்கு அமைப்பு செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது கட்சியில் வேண்டுமானால் பெரிய பொறுப்பாக இருக்கலாம், ஆனால் அது வெறும் அலங்கார பதவி தான் என்பதை கூடவா வேலுமணி தரப்பினர் அறியாமல் இருக்கப் போகிறார்கள்? கிளை செயலாளர் மீதுகூட நடவடிக்கை எடுக்க முடியாத ஒரு பதவி இருந்தால் என்ன? இல்லாவிட்டால் என்ன? என புலம்ப ஆரம்பித்து உள்ளனர். இந்த புலம்பல் 2 நாட்கள்கூட நீடிக்கவில்லை.

இதற்கா மீண்டும் இணைந்தோம்?
அடுத்த அதிர்ச்சியாக, அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்துள்ளார். வேலுமணி தரப்பை சேர்ந்த எம்.ஆர்.விஜயபாஸ்கரிடம் இருந்து பறிக்கப்பட்டிருந்த கரூர் மாவட்ட செயலாளர் பொறுப்புக்கு பதில், கொள்கை பரப்பு இணை செயலாளர் என்ற பதவியை கொடுத்தார் இபிஎஸ். மாவட்ட செயலாளர் பொறுப்புக்கு பதில் கொள்கை பரப்பு இணை செயலாளர் பதவி கொடுத்தது கடந்த 2 நாட்களாக அவரை தூங்கவிடவில்லை என தெரிகிறது. மன்னிப்பு கடிதம் எல்லாம் கொடுத்துவிட்டு இதற்கா மீண்டும் இணைந்தோம்? இதற்கு தவெகவுக்கு ஆதரவு தெரிவித்தபடியே இருந்திருக்கலாமே? என மனதுக்குள் உழன்று கொண்டிருந்த எம்.ஆர்.விஜயபாஸ்கர், இனிமேலும் அதிமுகவில் இருந்தால் தனக்கு எதிர்காலமே இருக்காது எனவும் அடுத்த முறை எம்.எல்.ஏ சீட்டு கூட கிடைக்குமா? என்பது சந்தேகம்தான் எனவும் எண்ண ஆரம்பித்துவிட்டாராம்.

ராஜினாமா கடிதம் ஏற்பு
அந்த எண்ணத்தின் நீட்சியாக தான், எம்எல்ஏ பதவியையே ராஜினாமா செய்துள்ளாராம். சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகரின் அறைக்கு நேரில் சென்ற அவர், பதவி விலகலுக்கான கடிதத்தை தன் கைப்பட எழுதிக் கொடுத்துள்ளார். இந்த கடிதம் விதிமுறைகளின்படி சரியாக இருந்ததால் சபாநாயகரும் உடனடியாக ஏற்றுக் கொண்டுள்ளார்.

ஜூலை 2ல் தவெகவில்...
ஏற்கெனவே அதிமுகவில் இருந்து மரகதம் குமரவேல், ஜெயக்குமார், சத்யபாமா, இசக்கி சுப்பையா, விஜயபாஸ்கர் ஆகியோர் தங்களது பதவிகளை ராஜினாமா செய்த நிலையில் தற்போது 6ஆவதாக எம்.ஆர்.விஜயபாஸ்கர் தனது பதவியில் இருந்து விலகி உள்ளார். அதேபோல், மரகதம் குமரவேல், ஜெயக்குமார், சத்யபாமா, இசக்கி சுப்பையா ஆகிய 4 பேரும் தவெகவில் இணைந்தனர். இந்நிலையில் தற்போது பதவியை ராஜினாமா செய்துள்ள எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் ஏற்கெனவே ராஜினாமா செய்துவிட்டு தவெக பொதுச் செயலாளர் ஆனந்தை சந்தித்துள்ள சி.விஜயபாஸ்கர் ஆகிய இருவரும் ஜூலை 2ஆம் தேதி தவெகவில் இணைய உள்ளதாக அரசியல் வட்டாரத்தில் பேச்சு அடிபடுகிறது.

அதிமுக எம்எல்ஏக்கள் எண்ணிக்கை
அதோடு, கரூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான அதிமுக நிர்வாகிகள், முன்னாள் உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் கட்சித் தொண்டர்களும் தவெக பக்கம் கூண்டோடு தாவ உள்ளார்களாம். அதிமுகவை சேர்ந்த 6 பேர் தங்கள் எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்ததன் மூலம் அக்கட்சி சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 41 ஆக குறைந்துள்ளது.

வருகிறது இடைத்தேர்தல்
அதேபோல், எம்.ஆர்.விஜயபாஸ்கரின் விலகல் மூலம் காலியாக உள்ள தொகுதிகளின் எண்ணிக்கையும் 7 ஆக உயர்ந்துள்ளது. திருச்சி கிழக்கு, மதுராந்தகம், தாராபுரம், பெருந்துறை, அம்பாசமுத்திரம், விராலிமலை, கரூர் ஆகிய 7 தொகுதிகளில் மீண்டும் இடைத்தேர்தல் நடக்கும் என்பதால் மாநில அரசியல் களமும் பெரும் எதிர்பார்ப்பில்தான் உள்ளது. அதேநேரம், காலியான தொகுதிகளின் எண்ணிக்கை வெறும் ஏழோடு நிற்குமா? அல்லது அதிமுகவில் இருந்து அடுத்தடுத்த விக்கெட் விழுந்து இடைத்தேர்தலே மறுதேர்தல் போல நடக்குமா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.