Also Watch
Read this
By: Web Team
அதிமுக தலைமையிலான கூட்டணியில், எந்தெந்த கட்சிகள் இணைய வேண்டும் என்பது குறித்து முடிவெடுக்கும் முழு அதிகாரம் எடப்பாடி பழனிசாமிக்கே இருப்பதாக பொதுக்குழுவில் தீர்மானம் நிறை வேற்றியது, பாஜகவுக்கான மறைமுக மெசேஜ்ஜாக பார்க்கப்படுகிறது. TTV, OPS-ஐ இணைத்து கொள்ள சொல்லி, பாஜக கொடுத்து வரும் நிர்ப்பந்தத்திற்கு பதில் சொல்லும் வகையில் அதிமுக பொதுக்குழு அமைந்ததா? என்பது குறித்து விவரிக்கிறது இந்த செய்தித் தொகுப்பு.
தேர்தலுக்கு இன்னும் நான்கைந்து மாதமே இருக்கும் நிலையில், பரபரப்பான சூழலில் அதிமுக பொதுக்குழு செயற்குழு கூட்டம் சென்னையில் கூடியது. ஆண்டுக்கு, ஒரு முறை வழக்கமாக கூட்டப்படும் சம்பிரதாய பொதுக்குழுவாக இருந்தாலும், அங்கு நிறைவேற்றப்பட்ட தீர்மானம் தான் முக்கியமாக கவனம் பெற்று வருகிறது.
அந்த வகையில், முதல் தீர்மானமே பாஜகவுடனான கூட்டணிக்கு பொதுக்குழு ஒப்புதல் அளிக்கும் தீர்மானம் தான். அதற்கு பிறகு அதிமுக தலைமையிலான கூட்டணியில் எந்த எந்த கட்சிகள் இடம்பெறும் என்பது குறித்து முடிவெடுக்கும் முழு அதிகாரம் எடப்பாடி பழனிசாமிக்கு வழங்கப்படும் என பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
திமுகவை வீழ்த்தும் நோக்கத்தில் இருக்கும் மேலும் சில கட்சிகள் அதிமுக தலைமையிலான கூட்டணியில் இணைய வாய்ப்பு இருக்கிறது என்பதால், கூட்டணியில் யாரை இணைப்பது என முடிவெடுப்பது எடப்பாடி பழனிசாமியாக தான் இருக்கும் என்றும் அந்த தீர்மானத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தீர்மானம் பாஜகவுக்கான மறைமுக செய்தியாக பார்க்கப்படுகிறது. அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்களை மீண்டும் இணைத்துக் கொள்ள வேண்டும் என பாஜக தொடர்ந்து நிர்பந்தித்து வருகிறது.
ஆனால், பாஜகவின் நிர்பந்தத்தை மீறி OPS, TTV, சசிகலா ஆகியோரை கட்சியில் இணைக்க முடியாது என எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாக இருந்து வரும் நிலையில், என்ன செய்வது என தெரியாமல் பாஜகவும் சைலண்ட் மோடில் இருந்து வருகிறது.
இந்த நிலையில் தான், தேர்தலை காரணம் காட்டி OPS, TTV, சசிகலா ஆகியோரை இணைத்துக் கொள்ள பாஜக வற்புறுத்தினாலும் எடப்பாடி பழனிசாமி எடுக்கும் முடிவு தான் இறுதியானது என்பதை உறுதிபடுத்தும் வகையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
மொத்தம் 16 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்ட நிலையில், அதிமுக மூத்த நிர்வாகிகள் வரிசையாக பேச தொடங்கினர். வரவேற்பு உரை நிகழ்த்திய வளர்மதி தொடங்கி முன்னாள் அமைச்சர்கள் சி.வி.சண்முகம்,
கே.பி.முனுசாமி உள்ளிட்ட அனைவரின் பேச்சிலும் துரோகிகள், உறவாடிக் கெடுப்பவர்கள், அரசியல் புரோக்கர்கள் என்பது போன்ற வார்த்தைகளை அதிகளவில் பயன்படுத்தியிருந்ததும் கவனிக்க வைத்தது.
அதாவது, அதிமுகவில் இருந்து வெளியேறியவர்கள் மற்றும் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக இருப்பவர்களை குற்றம் சாட்டும் வகையில் முன்னாள் அமைச்சர்கள் பேசியது கூட பாஜகவுக்கான செய்தி தான் என்கிறார்கள். அதிமுகவிலிருந்து பிரிந்து சென்றவர்களை ஒருங்கிணைக்கும் நடவடிக்கைகளுக்கு எதிராகவே, முன்னாள் அமைச்சர்கள் இந்த வார்த்தைகளைப் பயன்படுத்தியதாக பார்க்கப்படுகிறது.
பொதுக்குழுவில் எடப்பாடி பழனிசாமி மட்டும் தான் முழுக்க முழுக்க திமுகவை விமர்சித்து பேசினார் என்ற நிலையில், மற்றவர்களில் பெரும்பாலான பேச்சு, துரோகிகள் என்ற வார்த்தையை மையப்படுத்தியே இருந்தது.
அதேபோல, அதிமுக தலைமையில் மெகா கூட்டணி அமையும் என எடப்பாடி பழனிசாமி அடிக்கடி கூறி வரும் நிலையில், விரைவிலேயே மிகப்பெரிய மெகா கூட்டணியை அமைக்க இருப்பதாக அன்புமணியும் அதே வார்த்தையை பயன்படுத்தியிருந்தார்.
அந்த வகையில் விரைவிலேயே பாமகவும், அதிமுக தலைமையிலான கூட்டணியில் இணைய வாய்ப்பு இருப்பதாக சொல்லப்பட்டு வருகிறது.
இது தவிர்த்து, திருப்பரங்குன்றம் விவகாரத்தில் நீதிமன்ற உத்தரவுக்கே சவால் விடுவதாக திமுக அரசுக்கு கண்டனம் தெரிவித்த அதிமுக, SIR-க்கு வரவேற்பு தெரிவித்தும் தீர்மானம் நிறைவேற்றியது.
மற்ற விஷயங்களில் பாஜகவின் நிலைப்பாடும், அதிமுகவின் நிலைப்பாடும் ஒரே மாதிரியாக இருந்தாலும், உட்கட்சி விவகாரங்களில் பாஜகவின் தலையீடு பலிக்காது என்பதை உணர்த்தும் வகையில் தான் இருந்தது அதிமுகவின் வானகரம் பொதுக்குழு.
அதிமுகவில் சேர முடியவில்லை என்றாலும், தேசிய ஜனநாயக கூட்டணியிலாவது OPS, TTV-ஐ சேர்க்க வேண்டும் என பாஜக முனைப்பு காட்டி வரும் நிலையில், அந்த முயற்சிக்கும் அதிமுக பொதுக்குழு செக் வைத்திருப்பதாக பார்க்கப்படுகிறது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved