Also Watch
Read this
அதிமுகவில் சி.வி.சண்முகம் தரப்பை சேர்ந்த 5 எம்எல்ஏக்கள், இபிஎஸ் கூடாரத்திற்கு தாவிய அடுத்த சிலமணிநேரங்களில் 3 எம்எல்ஏக்கள் தங்கள் பதவியையே ராஜினாமா செய்துவிட்டு, தவெகவில் PRESENT ஆகி உள்ளது அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 5 எம்எல்ஏக்களின் வரவால் இபிஎஸ் பலம் 27 ஆக உயர்ந்திருந்தாலும் அதிமுக மூன்றாக உடைந்திருப்பது கட்சியை வீக் ஆக்கி உள்ளது என்ற நிலையில், மேலும் பல எம்எல்ஏக்கள் விசில் சத்தத்தை நோக்கி படையெடுக்க உள்ளதாகவும், அதன் பின்னால் தவெகவின் சைலண்ட் மாஸ்டர் அஜெண்டா தான் உள்ளதாகவும் அரசியல் வட்டாரத்தில் கூறப்படுகிறது.

தேர்தல் முடிந்து...
சட்டமன்ற தேர்தல் நடந்து முடிந்து கிட்டத்தட்ட 40 நாட்களை கடந்தும் பரபரப்பும், அதிரடிகளும் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக நீண்டு கொண்டேதான் செல்கிறது. அதிலும், அதிமுகவினர் கொடுக்கும் அப்டேட் தான் அரசியல் அதகளமே. தொடர் தோல்விக்கு காரணமே இபிஎஸ் தான், அவர் தன்னிச்சையாக செயல்படுவதாககூறி சி.வி.சண்முகம், எஸ்.பி.வேலுமணி, சி.விஜயபாஸ்கர் தலைமையிலான 25 எம்எல்ஏக்கள் தனியாக பிரிந்து, தவெக தலைமையிலான ஆட்சிக்கு ஆதரவு தெரிவிக்க அவர்களின் கட்சிப்பதவி பறிக்கப்பட்டது.
மீண்டும் இபிஎஸ் பக்கம்
அதிமுக அதிருப்தி அணிக்கு தவெக அமைச்சரவையில் இடம்கிடைக்கும் என பலர் பேசி வந்த நிலையில் அமைச்சரவை விரிவாக்கத்தில் அப்படி ஒன்று நடக்கவே இல்லை. இதனிடையே, தங்களுக்கு பொதுச்செயலாளர் இன்னும் எடப்பாடி தான், கட்சியை வலுப்படுத்த பொதுக்குழு கூட்ட வேண்டும் என்பதையே நாங்கள் வலியுறுத்தி வருவதாக எஸ்.பி.வேலுமணி, சில நாட்களுக்கு முன்பு பேச, மீண்டும் இபிஎஸ் உடன் கைகோர்க்க இதுதான் சிக்னல்போல என பேச்சு அடிபட்டது. அதேபோல், பிரிந்து கிடக்கும் எம்எல்ஏக்கள் மீண்டும் எடப்பாடி பக்கம் தாவுவார்கள் என்றும் தகவல் வெளியானது.

உள்ளதும் போய் விடுமோ?
இதனிடையே, சி.வி.சண்முகத்தின் ஆதரவாளரும் ஆற்காடு தொகுதி எம்எல்ஏவுமான சுகுமார், சென்னை பசுமைவழிச்சாலையில் உள்ள இபிஎஸ் இல்லத்திற்கு சென்று அவரை நேரில் சந்தித்தார். அவரை தொடர்ந்து, பண்ருட்டி எம்எல்ஏ மோகன், அந்தியூர் எம்எல்ஏ ஹரி பாஸ்கர், சங்கரன்கோவில் எம்எல்ஏ திலீபன், காங்கேயம் எம்எல்ஏ என்.எஸ்.என். நடராஜன் ஆகிய 4 பேர் இபிஎஸ்ஸை சந்தித்து ஏதோ குழப்பத்தில் கூடு மாறி விட்டோம், இனி அப்படி நடக்காது எனக்கூறி சமத்தாக அவரது முகாமில் இணைந்துவிட்டனர். இதற்கு பின்னால், எங்கே கட்சி தாவல் தடை சட்டம் பாய்ந்து தங்கள் பதவிக்கு ஆபத்து வந்துவிடுமோ? அதனால் உள்ளதும் போய்விடுமோ? என்ற அச்சம்தான் உள்ளதாக கூறப்படுகிறது.
எடப்பாடி பழனிசாமிக்கு பலம்
அதாவது, மொத்த உறுப்பினர்களில் மூன்றில் இரண்டு பங்கு பலம் தேவை. அப்படி பார்த்தால் அதிமுகவின் மொத்தமுள்ள 47 எம்.எல்.ஏக்களில் குறைந்தது 32 பேர் வேலுமணி தரப்பில் இருந்திருக்க வேண்டும். ஆனால், 25 பேர் மட்டுமே இருந்தனர். இது தொடர்பாக 90 நாட்களுக்குள் முடிவெடுக்க வேண்டும் என்ற கட்டாயம் இருப்பதே இந்த திடீர் திருப்பத்திற்குக் காரணமாக அமைந்துள்ளது. 5 எம்எல்ஏக்கள் இபிஎஸ் பக்கம் சென்றதால் அவரது பலம் 22ல் இருந்து 27 ஆக உயர்ந்தது. அதேநேரம், சி.வி.சண்முகம் தரப்பில் உள்ள பலம் 20 ஆக குறைந்தது.

சபாநாயகரிடம் முறையீடு
இதனால், அப்செட்டான சி.வி.சண்முகம் தரப்பு அவசர அவசரமாக சபாநாயகரை சந்தித்து தவெக ஆதரவு தீர்மானத்தின்போது எங்களோடு இருந்து கையெழுத்துப்போட்ட அந்த 5 எம்எல்ஏக்களும் தற்போது அணி மாறினாலும் தவெக ஆதரவு நிலைப்பாட்டில் அவர்கள் இட்ட கையொப்பம் மாறாது எனவும் அணிப்படி பார்த்தால் எங்களோடுதான் என்று கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும் எனவும் கூறி உள்ளனர். இதுஒருபுறமிருக்க, எது எப்படியோ தங்களுக்கு பெரும்பான்மை கிடைத்துவிட்டது என சபாநாயகரை சந்தித்து தங்கள் தரப்பு பலத்தை இபிஎஸ் தரப்பினர் எடுத்துரைத்துள்ளனர். 5 எம்எல்ஏக்கள் தாவியதையே தாங்காத சி.வி.சண்முகம் தரப்புக்கு அடுத்த சிலநொடிகளில் 3 எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்து அதிர்ச்சி வைத்தியம் கொடுத்துள்ளனர்.
முதல்வருடன் சந்திப்பு
வேலுமணி முகாமில் இருந்த மதுராந்தகம் எம்எல்ஏ மரகதம் குமரவேல், பெருந்துறை எம்எல்ஏ ஜெயக்குமார், தாராபுரம் எம்எல்ஏ சத்யபாமா ஆகிய 3 பேரும் ராஜினாமா செய்துவிட்டு சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகரை சந்தித்து அதற்கான கடிதங்களையும் வழங்கி உள்ளனர். ராஜினாமா கடிதங்களை சபாநாயகர் ஏற்றுக்கொண்ட நிலையில் 3 பேரும் அமைச்சர் ஆதவ் அர்ஜூனாவை சந்தித்து தமிழக வெற்றிக்கழகத்தில் அதிகாரபூர்வமாக இணைந்துள்ளனர். தொடர்ந்து, தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் விஜய்யையும் சந்தித்துப் பேசினர்.

தவெகவின் பலம்
இதுஒருபுறமிருக்க, அதிமுக சட்டப்பேரவைக்குழு தலைவராக எஸ்.பி.வேலுமணியை அங்கீகரிக்கக்கோரி சபாநாயகரை சந்தித்து சி.வி.சண்முகம் தரப்பு எம்எல்ஏக்கள் வலியுறுத்தி உள்ளனர். இப்படி அதிமுகவில் அடுத்தடுத்து நிலவும் பரபரப்பு அரசியல் பார்வையாளர்களையும் உற்றுநோக்க வைத்துள்ளது. ஏற்கெனவே திருச்சி கிழக்கு தொகுதி எம்எல்ஏ பதவியை முதல்வர் விஜய் ராஜினாமா செய்த நிலையில் அதிமுக ராஜினாமா எம்எல்ஏக்கள் 3 பேரையும் சேர்த்து தற்போது தமிழ்நாடு சட்டப்பேரவையின் மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை 230 ஆக குறைந்துள்ளது. எனவே இடைத்தேர்தல் விரைவில் நடைபெறும் எனவும் ராஜினாமா செய்த மரகதம் குமரவேல், ஜெயக்குமார், சத்யபாமா ஆகிய 3 பேரும்தான் அந்தந்த தொகுதிகளில் தவெக சார்பில் விசில் சின்னத்தில் வேட்பாளர்களாக நிறுத்தப்படுவார்கள் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. அதே எதிர்பார்ப்பில்தான் 3 பேருமே ராஜினாமா செய்துள்ளதாகவும் அரசியல் வட்டாரம் கூறுகிறது.. அப்படி, மரகதம் குமரவேல், ஜெயக்குமார், சத்யபாமா ஆகியோர் இடைத்தேர்தலில் நின்று வெற்றி பெற்றால் தவெகவின் பலம் 118 ஆக வலுவாகும்.

விரைவில் பதில் அளிப்போம்
அதிமுகவின் அரசியல் நிலவரம் இப்படி இருக்க 3 எம்எல்ஏக்கள் ராஜினாமா குறித்து சி.வி.சண்முகத்திடம் செய்தியாளர்களிடம் கேள்வி எழுப்பினர். முகத்தில் கடுகுபோட்டால் வெடித்துவிடும் அளவிற்கு கடுகடுவென இருந்த சி.வி.சண்முகம், எம்எல்ஏக்கள் ராஜினாமா உள்ளிட்ட அனைத்து கேள்விகளுக்கும் நாங்களே விரைவில் பதிலளிப்போம் எனக்கூறினார். அதனை தொடர்ந்து தவெகவில் இணைவீர்களா? என்று செய்தியாளர்கள் கேட்டபோது அனாவசியமான கேள்வி எனவும் டென்ஷன் ஆனார். இவர்களை தொடர்ந்து மேலும் பல எம்எல்ஏக்கள் தவெக பக்கம் படையெடுக்க தயாராக இருக்கிறார்கள் எனவும் அதற்காகவே தவெகவும் ஸ்மார்ட் அஜெண்டா ஒன்றை தயார் செய்து காய்நகர்த்தி வருவதாகவும் கூறப்படுகிறது. ”ஊர் ரெண்டுபட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம்” என்பார்கள். ஆனால், அதிமுக தானாவே கட்சியை இரண்டாக்கி, தற்போது மூன்றாக உடைத்துள்ளது தவெகவே எதிர்பார்க்காத கொண்டாட்டம்தான்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved