Also Watch
Read this
தமிழ்நாடு அரசின் அனைத்து அரசு சுகாதார சேவைகளையும் ஒரே இடத்தில் எளிதாகப் பெறுவதற்காக தொடங்கப்பட்டுள்ள 'நலம் TN' டிஜிட்டல் சுகாதாரத் தளத்தின், பயனாளிகளுக்கான சேவையை முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில், தமிழ்நாடு அரசு மருத்துவமனைகளின் மேம்பாட்டுக்காக நன்கொடை வழங்க கார்ப்பரேட் நிறுவனங்கள் மற்றும் பொதுமக்களுக்கு அமைச்சர் அருண்ராஜ் அழைப்பு விடுத்து உள்ளார். விரும்பும் மருத்துவமனைகளுக்கு நன்கொடை வழங்கலாம் என்றும், விவரங்கள் வெளிப்படைத் தன்மையுடன் இருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.

இந்நிகழ்வில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் 751 மருத்துவ உதவி அலுவலர்கள் மற்றும் 1,393 சுகாதார ஆய்வாளர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கும் விழா சென்னையில் நடைபெற்றது. அப்போது, மாற்றுத் திறனாளி மருத்துவருக்கு மேடையை விட்டு இறங்கிச் சென்று முதல்வர் விஜய் பணி ஆணையை வழங்கினார்.

2,144 பேருக்கு பணி நியமன ஆணை
சென்னை மாநில கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மருத்துவத்துறையில் 2,144 பேருக்கு பணி நியமன ஆணைகளை முதல்வர் விஜய் வழங்கினார். இதையடுத்து ரூ.139.47 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட மருத்துவத்துறை கட்டடங்களையும் முதலமைச்சர் விஜய் திறந்து வைத்தார்.

"நலம் TN" டிஜிட்டல் தளம்
மருத்துவத் துறை சார்ந்த 'நலம் TN' என்ற புதிய இணையதள சேவையை முதலமைச்சர் விஜய் தொடங்கி வைத்தார். தமிழ்நாடு அரசு மருத்துவமனை மேம்பாட்டிற்காக அறக்கட்டளை, சமூக பொறுப்பு நிதி மூலம் 'நலம் TN' உருவாக்கப்பட்டு உள்ளது. இணையதளம் மூலம் நன்கொடையாளர்கள் தங்களது பங்களிப்பை எளிமையாக, பாதுகாப்பாக வழங்க முடியும். 38 மாவட்ட அரசு மருத்துவமனைகளில் உயர் சிறப்பு சிகிச்சை வழங்கும் நோக்கில் 'நலம் TN' இணையதளம் தொடங்கப்பட்டு உள்ளது. மருத்துவமனைகளின் உட்கட்டமைப்பு, உயர்தர மருத்துவ உபகரணங்களை மேம்படுத்தும் நோக்கில் ‘நலம் TN' அமைக்கப்பட்டு உள்ளது.

"வந்தே மாதரம் பாடப்படவில்லை"
முதல்வர் பங்கேற்ற தமிழக சுகாதாரத்துறையின் நிகழ்ச்சியில் தமிழ்த்தாய் வாழ்த்து மட்டுமே பாடப்பட்டது. மாநில பாடல் பாடும் போதெல்லாம் வந்தே மாதரம், தேசிய கீதம் பாட மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது. வந்தே மாதரம் பாடப்படாமல் தமிழக அரசின் வழக்கமான பழைய நடைமுறையே இன்றைய நிகழ்வில் பின்பற்றப்பட்டது, குறிப்பிடத்தக்கது.