Also Watch
Read this
தவெக ஆட்சிக்கு வந்து 2 மாதங்களான நிலையில், முதல்முறையாக பெரம்பூர் தொகுதிக்கு விசிட் அடித்த முதலமைச்சர் விஜய் புதுப்பிக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். பின்னர் இ-சேவை மையத்தையும் திறந்து வைத்து, பணிகளை பார்வையிட்ட முதலமைச்சர், 73 ஆயிரம் குடும்பங்களுக்கு புதிய மின்னணு குடும்ப அட்டைகள் வழங்கும் திட்டத்தையும் தொடங்கி வைத்தார்.

பெரம்பூர் தொகுதியில் முதல்வர் விஜய்
முதலமைச்சர் விஜய் மீது எதிர்க்கட்சிகள் ஆயிரம் குற்றச்சாட்டுகளை அள்ளித் தெளித்தாலும், அதையெல்லாம் கிள்ளி எறிந்துவிட்டு தாங்கள் அவர்மீது கடல் அளவிலான நம்பிக்கை மற்றும் பாசம் வைத்திருக்கிறோம் என்பதை பெரம்பூர் தொகுதி பொதுமக்கள் மீண்டும் நிரூபித்திருக்கிறார்கள்.

தவெக ஆட்சிக்கு வந்து 2 மாதங்களான நிலையில், முதலமைச்சர் ஜோசப் விஜய் பிரச்சார வாகனத்தில், தான் வெற்றி பெற்ற தொகுதியான பெரம்பூருக்கு முதல் முறையாக விசிட் அடித்தார்.

பூ மழை தூவி...
தலைமைச்செயலகத்தில் இருந்து பிரச்சார வாகனத்தில் படை பலத்துடன் பெரம்பூர் நோக்கி முதலமைச்சர் ஜோசப் விஜய் படையெடுத்த நிலையில், அப்பகுதி முழுவதிலும் தடுப்புகளை அமைத்து காவல்துறையினர் தங்களது கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர்.

சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை என அனைத்து தரப்பட்ட மக்களும் சாலையின் இருபுறங்களில் நின்று, முதலமைச்சருக்கு தங்களது அன்பான முத்தங்களை காற்றின் மூலம் பறக்க விட்டும், தங்களது இதயங்களை பூக்கள் மூலம் அள்ளி வீசியும், உற்சாக குரலில் ஆர்ப்பரித்து வரவேற்றனர்.

வாக்காளர்களுக்கு நன்றி
அரசியல்வாதிகள் என்றால் வெள்ளை நிற சட்டை மற்றும் வெள்ளை நிற வேஷ்டியை மட்டுமே அணிந்திருப்பார்கள் என்பதை உடைத்தெறிந்து வரும் முதலமைச்சர் விஜய், இந்த நிகழ்ச்சியிலும் சட்டை மற்றும் கருப்பு நிற பேண்டை அணிந்து கொண்டு சாலையில் நடந்து சென்று தனக்கு வாக்களித்த வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தார்.

பின்னர், சர்மா நகரில் புதுப்பிக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்த முதலமைச்சர் விஜய், தவெகவின் கொள்கைத் தலைவர்களின் புகைப்படங்களுக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். இந்த அலுவலகம் மாற்றுத்திறனாளிகள் எளிதாக வந்து செல்லும் வகையில் சாய்தள வசதி, மாற்றுத்திறனாளிகளுக்கான சக்கர நாற்காலிகள் உள்ளிட்ட பல்வேறு வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ளது.

மாநகராட்சி ஆணையரிடம்...
இதையடுத்து எம்எல்ஏ இருக்கையில் அமர்ந்து கோப்புகளை பார்வையிட்ட முதலமைச்சர் விஜய், அங்கிருந்த அனைத்து துறை அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டு, தொகுதியின் நலன்கள் குறித்தும் கேட்டறிந்தார்.

அப்போது தொகுதி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் 3 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பல்வேறு வளர்ச்சி திட்டப் பணிகளை மேற்கொள்வதற்கான தனது பரிந்துரைக் கடிதத்தை சென்னை மாநகராட்சி ஆணையரிடம் வழங்கி, திட்டப் பணிகளை விரைந்து நிறைவேற்றுமாறு முதலமைச்சர் விஜய் கேட்டுக்கொண்டார்.

ரேஷன் கடையில்...
அலுவலக திறப்பு விழாவிற்கு பிறகு இ-சேவை மையத்தை திறந்து வைத்து, பணிகளை பார்வையிட்ட முதலமைச்சர் விஜய், தொகுதி மக்களுக்காகவே பிரத்யேகமாக உருவாக்கப்பட்டுள்ள சேவை தளத்தையும் தொடங்கி வைத்தார்.

கள ஆய்வின் ஒரு பகுதியாக, எம்.கே.பி. நகர் சிந்தாமணி கூட்டுறவு நியாய விலைக் கடைக்கு சென்ற விஜய், அங்கு ஆய்வு மேற்கொண்டு தமிழகம் முழுவதும் 73 ஆயிரம் குடும்பங்களுக்கு புதிய மின்னணு குடும்ப அட்டை வழங்கும் நிகழ்வைத் தொடங்கி வைத்தார். அதில் முதற்கட்டமாக 50 குடும்பங்களுக்கு குடும்ப அட்டைகளை வழங்கி அரிசி மற்றும் இதர உணவுப் பொருட்களையும் புன்னகையுடன் வழங்கி மகிழ்ந்தார்.

மின்சார அரசுப்பேருந்து பணிமனை
பின்னர், விசாயசர்பாடியில் 47 கோடியே 50 லட்சம் ரூபாய் செலவில் செயல்பட்டு வரும் மின்சார அரசு பேருந்து பணிமனையை பார்வையிட்ட முதலமைச்சர், பேருந்தின் மின்னேற்றச் செயல்பாடுகள் குறித்தும் கேட்டறிந்தார்.

இத்தனை வருடங்களாக பெரம்பூர் தொகுதியில் எம்எல்ஏக்களாக இருந்தவர்களை தான் பார்த்ததில்லை என்றும், முதலமைச்சர் விஜய் வந்ததில் இருந்து மிகவும் சந்தோஷமாக இருப்பதாகவும், அவர் நிச்சயமாக தங்களது கஷ்டங்களை தீர்ப்பார் என்றும், இனி தங்களுக்கு எந்த ஒரு குறையும் இருக்காது என்றும் பெரம்பூர்வாசி பெண் ஒருவர் மகிழ்ச்சி தெரிவித்தார்.