Also Watch
Read this
By: Web Team

வெளிநாட்டு பயணங்கள் குறித்து, அரசியல் காரணங்களுக்காக, தன்னை விமர்சிப்பதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். விமர்சனங்களை புறங்கையால் ஒதுக்கி விட்டு, பொருளாதார முன்னேற்றம், வேலைவாய்ப்புக்கான முதலீடுகளை ஈர்ப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறி இருப்பதாவது:
ஜெர்மனியில் இருந்து லண்டனுக்கு விமானத்தில் பறந்து செல்லும் நேரத்தில், இந்த கடிதத்தை எழுதுகிறேன். ஒரு டிரில்லியன் டாலர் எனும் பொருளாதார இலக்குடன் திராவிட மாடல் அரசு தொடர்ந்து முன்னேறி வருகிறது.
இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியில், தமிழகம் பெரும் பங்களிப்பைச் செலுத்தி வரும் நிலையில், ஜெர்மனி நாட்டில் உள்ள இந்திய அதிகாரிகளின் வரவேற்பு ஊக்கத்தையும் உற்சாகத்தையும் அளித்தது. அந்த மகிழ்ச்சியுடன் விமான நிலையத்திலிருந்து வெளியே வந்தபோது இன்ப அதிர்ச்சி. அந்த பகுதியில் வசிக்கும் தமிழர்கள், குடும்பம் குடும்பமாக வந்து நின்று வரவேற்பளித்தனர்.

வெளிநாட்டுப் பயணங்கள் குறித்து, அரசியல் காரணங்களுக்காக முன்வைக்கப்படும் விமர்சனங்களைப் புறங்கையால் ஒதுக்கிவிட்டு, தமிழகத்தின் பொருளாதார முன்னேற்றத்திற்கும், தமிழகத்தில் உள்ளவர்களின் வேலை வாய்ப்புக்கும் தேவையான முதலீடுகளை இத்தகைய சந்திப்புகள் மூலம் ஈர்க்க முடிகிறது என்ற நிறைவு, உங்களில் ஒருவனான எனக்கு ஏற்பட்டது.
தமிழகத்தின் தொழில் வளர்ச்சியை மேம்படுத்தும் வகையில் 26 நிறுவனங்களுடன் 15 ஆயிரத்து 320 பேருக்கு வேலைவாய்ப்பு அளித்திடும் வகையில் 7,020 கோடி ரூபாய் முதலீட்டுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
திமுக ஆட்சியில் தமிழகத்தில் உள்ள தமிழர்களின் வளர்ச்சிக்காக, வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்கிறோம். லண்டனிலும் தமிழகத்தின் வளர்ச்சிக்கான முதலீட்டாளர்கள் சந்திப்பு உண்டு. அன்புடன் எதிர்பார்த்துக் காத்திருக்கும் லண்டன் தமிழ்ச் சொந்தங்களைச் சந்திக்க ஆவலுடன் இருக்கிறேன்.
இவ்வாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.