Also Watch
Read this
By: Manigandan Raja
சர்வாதிகார ஆணவப்போக்குடன் அதிமுகவை இபிஎஸ் வழிநடத்திக் கொண்டிருக்கிறார் என ஓ.பன்னீர்செல்வம் விமர்சித்துள்ளார்.
திமுகவில் ஓ.பன்னீர்செல்வம்
முன்னாள் முதல்வரும் அதிமுகவில் இருந்து விலகியவருமான ஓ.பி.எஸ். இன்று பிப்ரவரி 27ஆம் தேதி, திமுகவில் இணைந்தார். தமிழ்நாட்டில் மூன்று முறை முதலமைச்சராக இருந்த ஒருவர், மாற்று கட்சியில் இணைவது இதுவே முதல்முறை.
சென்னை, அண்ணா அறிவாலயத்துக்கு வருகை தந்த ஓ.பி.எஸ்.ஐ முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின், பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். தொடர்ந்து ஓ.பி.எஸ்., அவரது மகனும் அதிமுக முன்னாள் எம்பியுமான ரவீந்திரநாத், உசிலம்பட்டி அதிமுக எம்எல்ஏ ஐயப்பன் ஆகியோர் திமுகவில் இணைந்தனர்.

தாய்க் கழகத்தில் இணைந்த மகிழ்ச்சி
இதுகுறித்து ஓபிஎஸ் கூறியதாவது:
இன்றைக்கு அண்ணா ஆரம்பித்த தாய்க் கழகமான திமுகவில் மகிழ்ச்சியோடு என்னை இணைத்துக் கொண்டிருக்கிறேன். என்னை திமுகவில் இணைத்துக் கொண்ட திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். அரசியலில் அண்ணா, கலைஞர் காட்டிய வழியில் அனைத்து மக்களையும் அரவணைத்துச் செல்கின்ற அரசியல் பண்பாட்டுடன் கட்சியையும் ஆட்சியையும் ஸ்டாலின் வழி நடத்திக் கொண்டிருக்கிறார் என்பதை உணர்ந்து பெரு மகிழ்ச்சியுடன் என்னை தி.மு.க.வில் இணைத்திருக்கிறேன்.
சர்வாதிகார ஆணவப்போக்கு
சர்வாதிகார ஆணவப்போக்குடன் கட்சியை நடத்திக் கொண்டிருக்கிற இபிஎஸ், என்றைக்கும் வெற்றி பெற முடியாத ஒரு சூழ்நிலையை அதிமுகவுக்கு உருவாக்கியிருக்கிறார். ஜெயலலிதாவின் தொண்டர்கள் அனைவரும் திமுகவில் தங்களை இணைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஒரு அரசியல் இயக்கத்தை நட்போடு அரவணைத்துச் செல்கிறார் ஸ்டாலின். கடந்த 5 ஆண்டு காலம் முதல்வராக அனைத்துத் துறைகளிலும் சிறப்பான ஆட்சியை நடத்தி வருகிறார்.
சிறந்த இயக்கமாக திமுக
திமுகவை அழிக்க எந்த சூழ்நிலையில் தடைகள் வந்தாலும் அதனைத் தடுத்து அண்ணா வழியில் சிறந்த திராவிடத் தலைவராக ஸ்டாலின் இருக்கிறார். சர்வாதிகாரத்தனமாக இருக்கும் இபிஎஸ், அதிமுகவை அழிவுப் பாதைக்கு கொண்டு செல்கிறார். அதிமுக தொண்டர்கள் வருத்தத்தில் உள்ளனர். குறிப்பாக தென் மாவட்டத்தில் இருந்து எந்த தலைவரும் வரக் கூடாது என்பதில் இபிஎஸ் முனைப்பு காட்டி வருகிறார். எனவே, தமிழக மக்களின் முன்னேற்றத்திற்கான சிறந்த இயக்கமாக திமுக உள்ளதால் அதில் என்னை இணைத்திருக்கிறேன்.

திமுகவால் தான் முடியும்
கடந்த காலங்களில் ஏற்பட்ட கசப்பான நிகழ்வுகளுக்கு முடிவு கட்ட வேண்டும் என சுயமாக பொறுமையாக சிந்தித்து இந்த முடிவை எடுத்திருக்கிறேன். அனைவரையும் அரவணைத்துச் செல்கிற போக்கு அதிமுகவில் இப்போது இல்லை. வரும் பேரவைத் தேர்தலில் முதல்வர் வாய்ப்பு தந்தால் போட்டியிடுவேன். திமுகவை எதிர்க்க எந்த சக்தியும் இல்லை. தமிழகத்தைக் காக்க திமுகவால்தான் முடியும்.
இவ்வாறு ஓபிஎஸ் தெரிவித்தார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved