இன்றா நாளையா? என ஊசலாடிக் கொண்டிருந்த ஐயங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்து திமுகவில் இணைந்திருக்கிறார் முன்னாள் முதலமைச்சர் ஓபிஎஸ். ஒருகாலத்தில் அரசியல் கூட்டாளிகளாக இருந்தவர்கள் கைவிரிக்க, எம்.ஜி.ஆர்.-இன் தாய்க் கழகத்தில் இணைந்து, ஏற்கனவே பரபரவென காணப்படும் தமிழக அரசியல் வட்டாரத்தை மேலும் பரபரப்பாக்கியிருக்கிறார் ஓபிஎஸ். காலங்காலமாக தான் விமர்சித்து வந்த கட்சிக்காக, இனி பரப்புரை செய்யப்போகிறாரா ஓபிஎஸ்? இணைவுக்குப் பின் இருக்கும் காரணங்கள், அரசியல் என்ன?தேர்தல் நெருங்க நெருங்க... காலம் கரைய கரைய நடந்த சம்பவத்தின் அடர்த்தி குறையும் என சொல்வார்கள். அப்படித்தான், அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட புதிதில், இபிஎஸ்ஸை பழித்துக் கொண்டிருந்த முன்னாள் முதலமைச்சர் ஓபிஎஸ், தேர்தல் நெருங்க நெருங்க மனமாற்றமடைந்தார். அதாவது நிபந்தனைகளின்றி அதிமுகவில் இணைய தயார் என தெரிவித்திருந்தார். தனியே கட்சி தொடங்கியவரையே இந்த முறை கூட்டணியில் ஏற்றுக் கொண்ட இபிஎஸ், உரிமை மீட்புக் குழுவை மட்டுமே உருவாக்கிய ஓபிஎஸ்ஸின் வரவை மட்டுமே அறவே விரும்பவில்லையாம். கைவிரித்த பாஜக, கண்டுகொள்ளாத அதிமுக எம்.பி. தேர்தலில் கூட்டாளியாக இருந்தவர்கள் பாஜகவினர். அவர்கள் உதவியை நாடலாம் என பலமுறை முயற்சித்துப் பார்த்திருக்கிறார். அமித்ஷா வரை சென்றும் திட்டம் கைகொடுக்காததால், திமுக பக்கம் சாய ஆரம்பித்தார். முதற்கட்டமாக மகனோடு சென்று முதல்வரை சந்தித்தவர், மீண்டும் சிறிது நாட்களுக்கு அமைதி காத்து வந்தார். அப்போதும் அழைப்பு வராததால், திமுக தலைமையிடம் ஓபிஎஸ் பேசியதாக சொல்லப்படுகிறது. அங்கு தான் எதிர்பார்த்தபடி மதிப்பு கிடைக்கும் என்பதை ஓரளவு கணித்தாரோ என்னவோ தெரியவில்லை, ஊடகங்கள் முன்பு திடீரென முதல்வரை புகழ்ந்து தள்ளினார். அப்படி அவர் சொன்ன வார்த்தை தான், “ஐந்து ஆண்டுகளில் திமுக அரசு சிறப்பாகச் செயல்பட்டது, மீண்டும் திமுக-வே ஆட்சிக்கு வரும்” என்பது. இதை, தான் மட்டும் சொல்லாமல், தன் ஆதரவு எம்.எல்.ஏ.வையும் சொல்ல அனுமதித்தார், அதுவும் சட்டமன்றத்திற்குள்ளேயே. முதல்வரை புகழ்ந்த ஓபிஎஸ் ஆதரவு எம்எல்ஏ உசிலம்பட்டி எம்.எல்.ஏ. ஆக இருக்கக்கூடிய ஓபிஎஸ் ஆதரவு எம்.எல்.ஏ. சட்டமன்றத்தில் பேசிய வார்த்தைகளைக் கேட்டு திமுகவினர் பூரித்துப் போனார்கள். “வருகின்ற தேர்தலில் மீண்டும் வெற்றிபெற்று தமிழகத்தின் முதல்வராக நமது தலைவர் மு.க.ஸ்டாலின் வரவேண்டுமென்று, புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். ஆசியோடும், புரட்சித் தலைவி அம்மா ஆசியோடும் மீண்டும் மீண்டும் வரவேண்டுமென்று இந்த நேரத்தில் வாழ்த்தி, அண்ணன் ஓபிஎஸ் வாழ்த்துக்களோடு நான் நன்றி கூறி, எனது தொகுதி மக்களுக்கு நன்றிகூறி விடைபெறுகிறேன்” என பேசி, ஓபிஎஸ் திமுகவில் இணைகிறார் என்ற ஊர்ஜிதங்களை உறுதிப்படுத்தியிருந்தார். இணைவு தேதி மட்டும் தெரியாமல் அரசியல் வட்டாரங்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்க, தற்போது அத்தனைக்கும் முற்றுப்புள்ளி வைத்து இறுதியாக திமுகவில் இணைந்தே விட்டார். மகனுடன் திமுகவில் ஐக்கியம்முதல்வராக பதவிவகித்த கட்சி தன்னை ஏற்காமல் போக, அரசியல் எதிர்காலத்திற்கு, பழமை வாய்ந்த கட்சியே கைகொடுக்கும் என்ற நோக்கில் ஓபிஎஸ், திமுகவில் புகலிடம் தேடிக் கொண்டார். கூடவே அவரது ஆதரவு எம்.எல்.ஏ.வும், மகன் ரவீந்திரநாத்தும் இணைந்திருக்கின்றனர். வரும் சில்லறை ஓட்டுகளையும் கைவிடக்கூடாது என்ற முடிவில் இருக்கும் திமுகவோ, ஓபிஎஸ் வருகையால், தென் மண்டலத்தில் வாக்கு வங்கி பலப்படும் என்ற நோக்கில் அவரை கட்சியில் இணைத்துக் கொண்டுள்ளது. Related Link அரையிறுதிக்கு செல்லும் வாய்ப்பை தக்கவைத்த இந்திய அணி