Also Watch
Read this
தமிழ்நாட்டில் பாஜகவின் முக்கிய முகவரியாக இருந்த அண்ணாமலை அக்கட்சியிலிருந்து விலகி, We The Leader என்ற புதிய அரசியல் இயக்கத்தை துவங்கியதாக அறிவித்துள்ளார். கத்தி கூச்சல் போடாமல் 18 மாதங்கள் பொறுமையாக பேசியும் எதுவும் நடக்கவில்லை என்பதாலேயே தனி இயக்கத்தை ஆரம்பித்து உள்ளதாகவும், தனது இயக்கத்தின் மூலம் அரசியலே க்ளீனாக இருக்கும் எனவும் அண்ணாமலை கூறியுள்ள நிலையில் அவர் ஆரம்பித்த நாளிலேயே அந்த இயக்கத்தில் 11 லட்சத்திற்கும் அதிகமானோர் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

தேமுதிகவில் தொடங்கி...
தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை அக்கட்சியில் இருந்து விலகி உள்ள நிலையில், அவர் புதிய கட்சி தொடங்க உள்ளதாக தகவல் வெளியானது. இந்நிலையில், தான் ஏன் பாஜகவில் இருந்து விலகினேன்? என்ன காரணம்? தனது அடுத்த அரசியல் பாதை என்ன? என்பது குறித்து சமூகவலைதளத்தில் அரைமணிநேரம் பேசி உள்ளார் அண்ணாமலை. கட்சியை விட்டு வெளியில் சென்றாலும் முறைப்படி சொல்லிவிட்டு செல்வது தானே நமது மரபு என ஆரம்பிக்கும் அந்த வீடியோவில், தான் ஐஐஎம் லக்னோவில் படிக்கும்போது 2009ஆம் ஆண்டு தேமுதிக தலைவர் விஜயகாந்த் கட்சியில் இன்டெர்ன்ஷிப்பாக ஆரம்பித்து, அதன்பிறகு 10 ஆண்டு காலம் கழித்து தான் பாஜகவில் இணைந்ததாக கூறினார்.

ரஜினிகாந்த் அழைப்பு
தனது 25ஆவது வயதில் விஜயகாந்தை சந்தித்ததே பெரிய பாக்கியம் என்ற அவர், 2020 ஆகஸ்ட் 24ஆம் தேதி பாஜகவில் இணைய வரும்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனக்கு போன் செய்து, அந்த நேரத்தில் அவர் ஆரம்பிக்க இருந்த இயக்கத்தில் சேருமாறு கூறியதாகவும், அப்போது தனக்கு எது நல்லது? சூப்பர் ஸ்டாருக்கு எது நல்லது? தமிழ்நாட்டு எது நல்லது? என்ற அடிப்படையில் தான் ஒரு முடிவெடுத்ததாகவும் கூறினார்.

தேர்தல் முடியும் வரை...
ரஜினியிடம் பேசிய மறுநாள் தான் பாஜகவில் இணைந்ததாகவும், சில யூகங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கவே இதனை கூறுவதாக தெரிவித்த அண்ணாமலை, பிரதமர் மோடி மீது தனக்கு மிகுந்த மரியாதை உள்ளது, ஆனால் பாஜகவில் தனக்கு சின்ன சின்ன பிரச்சினைகள் முளைத்துக் கொண்டேதான் இருந்தன, நானும் 18 மாதங்கள் கத்தி கூச்சல் போடாமல் பொறுமையாக தலைவர்களிடம் சொல்லி பார்த்துவிட்டேன், அப்படியும் அதெற்கெல்லாம் தீர்வு கிடைக்காததால் தான் கட்சியில் இருந்தே விலகியதாக கூறினார். எடுத்தோம், கவிழ்த்தோம் என எதையுமே செய்யவில்லை, தேர்தல்முடியும் வரை ஒரு உண்மை தொண்டனாக இருந்து கட்சிக்கான பணிகளை செய்து கொடுத்துள்ளதாகவும் தெரிவித்தார்.

தரத்துடன் இருக்கும் அரசியல்...
இதெல்லாம் தனது பழைய கதை. இனி தனது பாதையே புதியது எனக் கூறிய அண்ணாமலை, அதற்காக ஒரு அரசியல் இயக்கத்தை தொடங்க உள்ளேன் என்றார். மேலும், அடுத்து தமிழகத்தில் நடைபெற உள்ள பொதுத் தேர்தலில் நமது இயக்கத்தில் உள்ளவர்கள் நிச்சயம் போட்டியிடுவார்கள், அதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை எனவும் அதேநேரம், அது சாதாரணமாக நடந்துவிடாது, அதற்கு பின்னால் முன்னெடுக்க வேண்டியவை நிறைய உள்ளதாக ஒவ்வொன்றாக பட்டியலிட்டார். தலைவர்கள், நிர்வாகிகள், தன்னார்வலர்களை உருவாக்கி அவர்களை தயார்படுத்த வேண்டும், அவர்களுக்கு பயிற்சியுடன்கூடிய அரசியலை கற்றுக் கொடுக்க வேண்டும் என்றார். மொத்தத்தில் அனைத்து தரப்பு மனிதர்களையும் உள்ளடக்கிய அரசியல் என்பதுதான் நமது இயக்கத்தின் நோக்கம் எனவும் அரிசி முதல் அனைத்து பொருட்களையும் பத்துகடை ஏறி இறங்கி தரம் பார்த்து வாங்குவதுபோல் தான் நாம் உருவாக்க உள்ள அரசியலும் தரத்துடன் இருக்கும் என கூறினார்.

நாற்காலியில் அனைவருக்கும் வாய்ப்பு
ஒரு தலைவரை அல்லது ஒரு குறிப்பிட்ட சித்தாந்தத்தை கடவுளைப்போல வழிபட்டு, விமர்சனங்களின்றி ஏற்றுக்கொள்ளும் தீவிர அரசியலைக் குறிக்கும் Cult Politics-ஐ அறவே ஒழிக்க வேண்டும் எனக்கூறிய அண்ணாமலை, அரசியல் தலைவர்களின் பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடும் கலாச்சாரத்தையும் உடைப்பதே நமது அரசியல் சித்தாந்தம் என்றார். ஒரு முதலமைச்சர், 35 அமைச்சர்கள், 234 சட்டமன்ற உறுப்பினர்கள், 39 நாடாளுமன்ற உறுப்பினர்கள் நினைத்தால் மட்டும் தமிழ்நாட்டை மாற்றிவிட முடியாது, பஞ்சாயத்து தலைவர் ஆரம்பித்து கவுன்சிலர் வரை அனைத்து உறுப்பினர்களும் நினைத்தால்தான் மாற்ற முடியும் எனக்கூறிய அண்ணாமலை ”அரசியல் நாற்காலியில் அனைவருக்கும் வாய்ப்பு” என தெரிவித்தார்.

இதுதான் இயக்கத்தின் ரூட்...
தான் உட்பட நிரந்தர தலைவர், நிரந்தர அமைச்சர் என காலங்காலமாக அரசியலில் நடக்கும் அனைத்தையும் தவிடுபொடியாக்க வேண்டும் எனக்கூறிய அண்ணாமலை, அதற்காகவே www.wetheleader.org என்ற இணைய தளம் செயல்படும், இதன்மூலம் நமது இயக்கத்தில் இணைய முடியும், கோவையில் ஏ.பி.ஜே.அப்துல் கலாம் பெயரில் Centre for Ethics and Politics எனும் அமைப்பை உருவாக்க இருக்கிறோம், இதன்மூலம் பயிற்சி அளிக்கப்படும், நாம் மாறினால் மாற்றம் தானாக வரும் எனவும் இதுதான் இந்த இயக்கத்தின் ரூட் எனவும் கூறினார்.

11 லட்சத்திற்கும் மேல்...
அண்ணாமலை we the leader இயக்கத்தை ஆரம்பித்த நாளிலேயே 11 லட்சத்திற்கும் அதிகமானோர் அந்த இயக்கத்தில் விறுவிறுவென இணைந்துள்ளதாக கூறப்படுகிறது. இது, பாஜகவை சேர்ந்தவர்களுக்கு சற்று பதற்றத்தை தான் கொடுத்துள்ளதாம். காரணம், தமிழ்நாட்டில் பாஜகவின் முக்கிய முகவரியாக இருந்தவரே அண்ணாமலை தான். அதனால், பலர் பாஜகவில் இருந்து வெளியேறி அண்ணாமலை இயக்கத்திற்கு பாயலாம் என்ற பயம்தானாம். அப்படி, we the leader இயக்கத்தில் இணைபவர்களின் எண்ணிக்கை அதிகமானால் அது பாஜகவிற்கு தான் பெரும் பின்னடைவு என அரசியல் விமர்சகர்கள் தரப்பில் கூறப்படுகிறது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved