Also Watch
Read this
By: Web Team

மகாராஷ்டிரா மாநிலத்தில், முன் எப்போதும் இல்லாத அளவுக்கு கனமழை கொட்டித் தீர்க்கிறது. இரவு, பகல் என்றும் பாராமல் தொடர்ந்து மழை பெய்து கொண்டே இருப்பதால் பொது மக்கள் அவதிப்பட்டுள்ளனர்.
இடைவிடாத மழையால் வர்த்தக நகரான மும்பை தத்தளித்து வருகிறது. பல்வேறு பகுதிகளில் மழையளவு 100 மில்லி மீட்டரை கடந்து பதிவாகி உள்ளது. மும்பை நகரில் மட்டும் 8 மணிநேரத்தில் 177 மிமீ மழை பதிவாகி இருக்கிறது. இடைவிடாத மழையால், கல்வி நிலையங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மும்பை பல்கலைக்கழகம் தேர்வுகளை ஒத்தி வைத்துள்ளது.
பேருந்து, ரயில், விமான சேவைகளும் மழை, வெள்ள பாதிப்பில் இருந்து தப்பவில்லை. வரலாறு காணாத மழையால், மும்பை நகரம் மற்றும் புறநகர் பகுதிகளுக்கு சிவப்பு எச்சரிக்கையை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது.
பேரிடர் மேலாண்மைத் துறையுடன் இணைந்து முதல்வர் தேவேந்திர ஃபட்னவிஸ், வெள்ள நிலைமையை ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
மும்பை, தானே, ராய்காட், ரத்னகிரி, சிந்தூர்க் மாவட்டங்களுக்கு அடுத்த 48 மணி நேரம் மிக முக்கியமானதாக இருக்கும். நிர்வாகம் நிலைமையை உன்னிப்பாக கண்காணித்து வருகிறது. தாழ்வான பகுதிகளில் இருந்து பொது மக்கள் வெளியேறுவதை நிர்வாகம் உறுதி செய்துள்ளது. மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.
இவ்வாறு முதல்வர் தேவேந்திர ஃபட்னவிஸ் தெரிவித்தார்.
மழை பாதிப்புகளை ஆய்வு செய்த துணை முதல்வர் அஜித் பவார், “இடைவிடாத மழையால் மாநிலத்தில் கிட்டத்தட்ட 10 லட்சம் ஹெக்டேர் விவசாய நிலங்கள் நீரில் மூழ்கியுள்ளன. மழை நின்றவுடன் சேத மதிப்பு தொடங்கப்படும்,” என்று தெரிவித்துள்ளார்.
மும்பை உட்பட கொங்கன், மத்திய மகாராஷ்டிரா உள்ளிட்ட பகுதிகளில் அடுத்த 2 நாட்களுக்கு கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. மேலும், மராத்வாடா, விதர்பா பகுதிகளுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுத்துள்ளது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved