Also Watch
Read this
By: Srini Vasan

TN Assembly Governor: தமிழ்நாடு சட்டமன்றத்தில் அறிஞர் அண்ணா, அண்ணல் அம்பேத்கர், எம்ஜிஆரை மேற்கோள்காட்டி முக்கிய சுமார் 39 நிமிடங்கள் வரை வாசிக்கப்பட்டது.
உண்மையான தலைவர்கள் மக்கள்தான்
“இந்த நாட்டின் உண்மையான தலைவர்கள் மக்கள் தான்” என்று பேரறிஞர் அண்ணா கூறியுள்ளார். சமீபத்தில் நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் தமிழ்நாட்டின் உண்மையான எஜமானர்களான மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு, 17வது தமிழ்நாடு சட்டமன்றத்தின் முதல் கூட்டத் தொடரில் கலந்து கொண்டுள்ள மாண்புமிகு உறுப்பினர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவிக்கிறேன்.
இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க சட்டமன்றத்தின் உறுப்பினர்கள் மக்களுக்கு மக்களின் தேவைகளை விவாதித்து, அதற்கேற்ப சட்டங்களை இயற்றி, மக்களின் நலனை பாதுகாப்பீர்கள் என நான் நம்புகிறேன். “உண்மையான ஜனநாயகம் என்பது சமத்துவம், சுதந்திரம் மற்றும் சகோதரத்துவம் ஆகிய மூன்றின் சங்கமம்” என்று அண்ணல் அம்பேத்கர் கூறியுள்ளார். இப்படிப்பட்ட ஜனநாயகம் செழிக்க, தமிழ்நாட்டு மக்கள் எடுத்துள்ள உறுதியான முடிவால் புதிதாக அமைந்திருக்கும் முதலமைச்சர் ஜோசப் விஜய் தலைமையிலான ஆட்சியால் அது சாத்தியமாகும்.
வரலாற்று புரட்சி
“மாற்றம் மட்டுமே மாறாதது” என்ற கருத்தை உணர்த்தும் வகையில், தமிழ்நாட்டின் அரசியல் வரலாற்றில் இதுவரை இல்லாத மாற்றம் சமீபத்தில் நடந்து முடிந்த தேர்தலில் நிகழ்ந்துள்ளது. வெறும் இரண்டு ஆண்டுகளில் உருவான கட்சியின் தலைவராக இருக்கும் முதலமைச்சர் பல தடைகளை உடைத்து, பணத்தின் ஆதிக்கத்தை முறியடித்து, மக்களின் பேராதரவுடன் இன்று ஆட்சி அமைத்துள்ளார். இந்தியா சுதந்திரம் பெற்றதிலிருந்து 1967-ல் பேரறிஞர் அண்ணாவும், 1977-ல் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரும் அரசியலில் பெரிய மாற்றங்களை ஏற்படுத்தினர். அதேபோன்று 2026-ல் முதலமைச்சர் ஜோசப் விஜய் தனிப்பட்ட முறையில் ஒரு வரலாற்றுப் புரட்சியை ஏற்படுத்தியுள்ளார்.

தமிழ்நாட்டு மக்களுக்காக பிரதமரிடம் பேசிய விஜய்
இந்த அரசு மாநில உரிமைகள், பெண்களின் பாதுகாப்பு, சமூக நீதி, சம வாய்ப்பு, மாற்றுத் திறனாளிகள், விவசாயிகள், மீனவர்கள், நெசவாளர்கள், தொழிலாளர்கள், திருநங்கைகள் மற்றும் சிறுபான்மையினர் நலன், கல்வி மற்றும் சுகாதாரம் ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் அளித்து, 7.5 கோடி மக்களின் நலனுக்காக செயல்படும். கூட்டணி ஆட்சியின் உண்மையான வடிவமாக, “ஆட்சியிலும் அதிகாரத்திலும் பங்கு” என்ற புதிய நடைமுறையை இந்த அரசு உருவாக்கியுள்ளது.
பதவி ஏற்றதும் டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்த முதலமைச்சர் ஜோசப் விஜய், மேகதாது அணை கட்டுவதை நிறுத்துவது, இலங்கை கடற்படையால் கைதான தமிழக மீனவர்களை விடுவிபப்து, தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய நிதி ஒதுக்கீட்டை விடுவிப்பது, தேசிய முக்கியத்துவம் வாய்ந்த கல்வி நிறுவனங்களை அமைப்பது,ஒசூர், கோயம்புத்தூர், மதுரை ஆகிய நகரங்களுக்கு மெட்ரோ ரயில் திட்டங்களை கொண்டு வருவது உள்ளிட்ட பல கோரிக்கைகளை மத்திய அரசிடம் முன்வைத்துள்ளார். நிதி ஆயோக் கூட்டத்திலும் இந்த கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டுள்ளன. மத்திய அரசும் முதலமைச்சரின் கோரிக்கைக்களை பரிசீலித்து உதவி வழங்கும் என நம்பப்படுகிறது.
ஒவ்வொரு தமிழர் மீதும் கடன்சுமை
கடந்த சில ஆண்டுகளில் தமிழ்நாட்டின் நிதிநிலை மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனை வெளிப்படுத்த தற்பொதுள்ள தமிழக அரசு வெள்ளை அறிக்கையை வெளியிட்டுள்ளது. கடந்த 5 ஆண்டுகளில் மாநிலத்தின் கடன் இரட்டிப்பாகி ரூ.10 லட்சம் கோடியை எட்டியுள்ளது. இதனால் ஒவ்வொரு நபருக்கும் ரூ.1 லட்சத்திற்கும் மேல் கடன் சுமை உள்ளது. 2024-25ல் ரூ.48,840 கோடியாக இருந்த வருவாய் பற்றாக்குறை, 2025-26ல் ரூ.78,324 கோடியாக உயர்ந்துள்ளது. மொத்த வருவாயில் 23% வட்டி செலவுக்கே செல்கிறது. வருவாய் துறைகளில் ஊழல் காரணமாக வரி வருவாய் குறைந்துள்ளது.

நிதி சிக்கலிலும் முதலமைச்சரின் முக்கிய உத்தரவு
தமிழக அரசு கடுமையாக நிதி சிக்கல்கள் இருந்தாலும், முதலமைச்சர் உடனடியாக மூன்று முக்கிய உத்தரவுகளை பிறப்பித்தார்:
*500 யூனிட் வரை மின்சாரம் பயன்படுத்துவோருக்கு 200 யூனிட் இலவசம்
*ஒவ்வொரு மாவட்டத்திலும் போதைப்பொருள் தடுப்பு படை
*பெண்கள் பாதுகாப்பிற்காக “சிங்கப்பெண் சிறப்பு படை”

இதில் பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு முக்கிய குறிக்கோளாகக் கொண்டு, குற்றங்களை செய்யும் குற்றவாளிகளுக்கு கடுமையான நடவடிக்கை எடுக்க“சிங்கப்பெண் படை” முழுமையாக செயல்படும். போதைப்பொருள் நடமாட்டத்தை தடுக்கவும் சிறப்பு படை அமைக்கப்பட்டுள்ளது. மக்களின் நலனை கருத்தில் கொண்டு தமிழ்நாட்டில் 717 மதுக்கடைகள் மூடப்பட்டுள்ளன என ஆளுநர் அர்லேகர் உரையாற்றியுள்ளார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved