Also Watch
Read this
திமுக அரசின் உரையை ஒருமுறை கூட முழுமையாக படிக்காமல், தவெக அரசு எழுதிக் கொடுத்ததை ஆளுநர் அப்படியே வாசித்திருப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி விமர்சித்து உள்ளார். ஒரு எழுத்து கூட மாற்றாமல் ஆளுநர் படித்திருப்பதன் மூலம், தவெக அரசுக்கும் பாஜகவுக்கும் இடையே இணக்கமான தொடர்பு ஏற்பட்டு இருப்பதாக சந்தேகம் எழுந்து இருப்பதாகவும் கூறி உள்ளார்.

சட்டப்பேரவை வளாகத்தில்...
ஆளுநர் உரையுடன் தமிழ்நாடு சட்டமன்ற கூட்டத்தொடர் தொடங்கிய நிலையில் பேரவை வளாகத்தில், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் கூறியதாவது;
திமுக ஆட்சியில், அரசின் எந்த உரையையும் ஆளுநர் முழுவதுமாக படித்ததே இல்லை, திருத்தங்களை செய்வார். ஆனால், இன்று தவெக அரசு தயாரித்த உரையை, ஒரு வரி கூட மாற்றாமல் ஆளுநர் படித்து உள்ளார். இதிலிருந்தே தவெக - பாஜக இடையே இணக்கமான சூழல் ஏற்பட்டு உள்ளதோ? என்ற எண்ணம் அனைவருக்குமே ஏற்பட்டுள்ளது.

திமுக அரசின் திட்டங்கள்
முரண்பாடுகளின் மொத்த உருவமாக ஆளுநர் உரை அமைந்து உள்ளது. இந்த அரசு அமைந்து ஒரு மாதம் ஆகிவிட்டது. ஆனால், இவர்களிடம் சொல்ல சாதனைகளே இல்லை. இவர்கள் சொல்வது, அறிவிப்பது எல்லாமே திராவிட மாடல் அரசின் திட்டங்கள் தான். திமுக அரசின் திட்டங்கள் மீது ஸ்டிக்கர் ஒட்டிவிட்டு, ஆட்சியின் தோல்விக்கான பழியையும் திமுக அரசின் மீது போட்டு உள்ளனர்.

காப்பி பேஸ்ட்...
தவெக அரசு, காப்பி பேஸ்ட் அரசாக உள்ளது, தேர்தலின் போது அறிவித்த பல அறிவிப்புகளின் ட்ரெய்லராக, ப்ளூ ப்ரிண்ட்டாக இந்த கூட்டம் இருக்கும் என நினைத்தோம். மக்களும் அதை தான் எதிர்பார்த்தார்கள். ஆனால் ஏமாற்றம் தான் மிஞ்சி உள்ளது. சுருக்கமாக சொன்னால் ஆளுங்கட்சியினர் ரீல்ஸ் போடுவதற்கான Content material ஆக மட்டுமே இந்த ஆளுநர் உரை அமைந்து உள்ளது. கொடுத்த வாக்குறுதிகளில் இருந்து எப்படி எஸ்கேப் ஆகலாம் என்பதை காட்டும் முன்னோட்டமாக இந்த அரசு, சமீபத்தில் வெள்ளை அறிக்கை என்ற வெற்று அறிக்கையை வெளியிட்டது. நன்றாக செயல்படுத்தப்பட்டு கொண்டிருக்கும் திட்டங்களை கெடுப்பதை நாங்கள் வேடிக்கை பார்த்து கொண்டு இருக்க மாட்டோம்.

வாய் திறங்க சிஎம்...
எப்போதாவது பேசும் முதல்வரை கண்டித்தே திமுக எம்.எல்.ஏ.க்களாகிய நாங்கள், இன்று “வாய் திறங்க CM” என்ற கருப்பு பேட்ஜ் அணிந்து பேரவைக்கு வந்தோம். அதிலும் தவெக விரிச்சுவல் அபியூஸர்ஸ், முதல்வர் இன்று கோட்டைக்கு வந்தார், கோட் - சூட் போட்டு வந்தார், இன்று வேட்டி சட்டையில் வந்தார், டிபன் பாக்ஸ் எடுத்து வந்தார், அவர் வாயில் அவரே வைத்து சாப்பிட்டார் என்று எது கிடைத்தாலும் ட்ரெண்டாக்கி வருகின்றனர்.

எல்லாமே ரீல்ஸ் மயம்
மாநிலத்தில் நிலவும் உண்மையான பிரச்சனைகளை பற்றி வாய் திறக்காத முதல்வர் விஜய், இன்னும் பிரச்சார மோட்-லிருந்து வெளியே வரவே இல்லை. சி.எம். தான் இப்படி இருக்கிறார் என்றால் ஒவ்வொரு தவெக அமைச்சர்கள், ஒவ்வொரு எம்எல்ஏக்கள் என்று, தவெக தரப்பில் இருக்கும் அனைவருமே ரீல்ஸ் வெறியில் சுற்றி கொண்டு உள்ளனர். எல்லாமே அவர்களுக்கு ரீல்ஸ் தான். இதைப் பற்றியெல்லாம் முதல்வர் கவலைப்படுவது போல் தெரியவில்லை

Panic Buying
தேர்தல் பிரச்சாரத்தின்போது பெண்களின் பாதுகாப்பு குறித்து இன்றைய முதலமைச்சர் வீர வசனம் பேசினார். ஆனால், இன்றைய நிலையை பார்க்கும்போது, திரைப்படத்தில் வருவதுபோல், “கண்ணாடிய பார்த்து பேசிட்டு இருக்கீங்க சார்?” என்பது தான் ஞாபகத்திற்கு வருகிறது. அதிமுக எம்எல்ஏக்களை முதலமைச்சர் Panic Buying செய்து வருகிறார்.
இவ்வாறு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கூறி உள்ளார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved