Also Watch
Read this
தனது மகன் மிதுன் அரசியலுக்கு வர மாட்டார் என இபிஎஸ் திட்டவட்டமாக கூறி உள்ளார். அதிமுகவில் அடிப்படை உறுப்பினராக மட்டுமே மிதுன் இருப்பதாகவும் கூறி உள்ளார்.

தமிழகத்தில் முன்பை விட போதைப் பொருள் புழக்கம் அதிகரித்து விட்டதாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டி உள்ளார்.
பெண்கள் பாதுகாப்புக்காக அமைக்கப்பட்ட சிங்கப்பெண் சிறப்புப் படையை பாதுகாப்பதற்கு புதிய படையை உருவாக்க வேண்டிய சூழல் என்றும் இபிஎஸ் விமர்சித்து உள்ளார்.

சட்டப்பேரவையில்...
தமிழக சட்டப்பேரவை வளாகத்தில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியதாவது;
தவெக அரசின் முதல் ஆளுநர் உரையில் புதிதாக எந்த திட்டங்களும் இடம் பெறவில்லை. மாநிலத்தின் சட்டம் ஒழுங்கை பாதுகாக்க எந்த நடவடிக்கையும் இல்லை. இதன் மூலம் மாற்றம் கேட்டவர்களுக்கு ஏமாற்றமே கிடைத்துள்ளது. ஆண்டுக்கு 6 சிலிண்டர் என்பது போன்ற முக்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றும் அறிவிப்பு ஆளுநர் உரையில் இல்லை.

சட்டம் ஒழுங்கு...
தவெக அரசு ஆட்சிக்கு வந்த பின் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் அடிக்கடி மின்வெட்டு ஏற்பட்டு மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். தமிழ்நாட்டில், முதல்வர் விஜய் தலைமையிலான தவெக அரசு ஆட்சியமைத்து 38 நாட்களை கடந்துவிட்ட நிலையில், இதுவரை 150 சிறுமிகளுக்கு பாலியல் வன்கொடுமை நிகழ்ந்துள்ளது. 130 பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். போதை பொருள் நடமாட்டம் முன்பை விட அதிகமாக உள்ளது; 38 நாட்களில் 107 போக்சோ வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

வெள்ளை அறிக்கை - ஆளுநர் உரை
சிங்கப்பெண் பாதுகாப்பு படைக்கு இன்னொரு பாதுகாப்பு படை அமைக்க வேண்டிய சூழல் நிலவுகிறது. காவிரி நீரை பெற தவெக அரசு உரிய முயற்சி எடுக்கவில்லை. தவெக அரசு வெளியிட்ட வெள்ளை அறிக்கையே ஆளுநர் உரையாக அமைந்துள்ளது. ஆளுநர் உரையில் எதிர்பார்த்த அளவிற்கு திட்டங்களோ, அறிவிப்புகளோ இல்லை. சட்டம் ஒழுங்கை பாதுகாக்க தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

அரசியலுக்கு வரமாட்டார் மிதுன்
சி.வி.சண்முகத்தின் குற்றச்சாட்டுகள் தவறானவை. என் மகன் மிதுன் அதிமுகவில் எந்த பொறுப்புக்கும் வரமாட்டார். மிதுனுக்கு அதிமுகவில் பொறுப்பு வழங்கப்படுகிறது என்ற தகவல் தவறாக பரப்பப்படுகிறது.
என்னுடைய மகன் மிதுன் அரசியலுக்கு வரமாட்டார் என்பதை திட்டவட்டமாக தெரிவித்துக் கொள்கிறேன்; வேண்டுமென்றே திட்டமிட்டு அவதூறுகளை சிலர் வெளியிடுகிறார்கள்.

அரசியல் சூழலால்...
பலமுறை தோற்ற பழனிசாமி என சொல்லி வருகிறார்கள், ஆனால் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் நான் வெற்றி பெற்றுள்ளேன். அரசியல் சூழலால் ஆட்சி மாற்றம் நிகழ்வது இயல்பு. என்னுடைய தலைமை சரி இல்லை என்றால் விஜயபாஸ்கர் வெற்றி பெற்று இருப்பாரா? ஓட்டு போட்ட மக்களையும் ஏமாற்றி விட்டார், அதிமுகவின் தொண்டர்களையும் மதிக்கவில்லை.
இவ்வாறு எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved