Also Watch
Read this
நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில், அதிமுக வெற்றி பெற்ற 47 தொகுதிகளில், 31 தொகுதிகள் பாமக போட்ட பிச்சை என அக்கட்சியின் முன்னாள் அமைச்சரும், மூத்த தலைவருமான சி.வி.சண்முகம் முன்வைத்திருக்கும் அதிரடி குற்றச்சாட்டு அதிமுகவுக்குள் மட்டுமின்றி, தமிழக அரசியல் களத்திலும் புயலை கிளப்பியிருக்கிறது. சிவி சண்முகம் கூறியது உண்மை தானா? அவர் குறிப்பிட்ட 31 தொகுதிகள் எவை எவையாக இருக்கலாம்?

அதிமுகவில் ஓயாத பரபரப்பு
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் முடிவடைந்த பிறகு, அரசியல் பரபரப்புகள் ஓரளவுக்கு ஓயும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அந்த பரபரப்புகளை ஓய விடாமல் அடுத்தடுத்து content கொடுத்து வருகின்றனர் அதிமுகவினர். முதலில் கட்சியில் ஏற்பட்ட பிளவு பூகம்பம் கிளப்ப, அடுத்ததாக தவெக அரசுக்கு நம்பிக்கை வாக்கெடுப்பில் ஆதரவளித்தது அதிர்வை கொடுக்க, அதற்கும் பிறகு 4 எம்.எல்.ஏக்கள் ராஜினாமா, நிர்வாகிகள் மாற்றம், கட்சி அலுவலகங்களை கைப்பற்றுவதற்கான போராட்டம், அதிமுக முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் எம்.எல்.ஏக்கள் கூண்டோடு தவெகவில் ஐக்கியம் என அதிரடிகளுக்கு பஞ்சமில்லாமல் பார்த்துக் கொள்கிறது அதிமுக வட்டாரம். அந்த பரபரப்பு இனி வரும் காலங்களிலும் ஓயாது போலிருக்கிறது.

மகனை கட்சிக்குள் கொண்டு வர இபிஎஸ் நாடகம் - சிவிஎஸ்
தற்போது அதிமுக எனும் மாபெரும் இயக்கம், ஒரு குடும்பத்தின் பிடியில் சென்று கொண்டிருப்பதாகவும், தனது மகன் மிதுனை கட்சிக்குள் கொண்டு வருவதற்காக இபிஎஸ் நாடகமாடுவதாகவும் பகீர் கிளப்பியிருக்கிறார் சி.வி.சண்முகம். அதுமட்டுமின்றி சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக வென்ற 47 தொகுதிகளில் 31 தொகுதிகள் பாமக போட்ட பிச்சை என்று புதிய புயலை கிளப்பியிருக்கிறார்.
கள நிலவரம் என்ன?
பாமக ஆதரவுடன் அதிமுக வென்ற மாவட்டங்கள் என்று சி.வி.சண்முகம் குறிப்பிடுவது, அரியலூர், கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, வேலூர், தர்மபுரி மற்றும் சேலம் மாவட்டங்களை தான். இந்த மாவட்டங்களில் கள நிலவரம் கூறுவது என்ன?

சேலம், திருவண்ணாமலை...
முதலாவதாக இபிஎஸ் சொந்தமான மாவட்டமான சேலத்தை எடுத்துக் கொண்டால், மொத்தமுள்ள 11 தொகுதிகளில் எடப்பாடி, கெங்கவல்லி, ஆத்தூர், ஏற்காடு, ஓமலூர், மேட்டூர், சங்ககிரி ஆகிய 7 தொகுதிகளை அதிமுக கைப்பற்றியுள்ளது. அதே போல் திமுகவின் எ.வ.வேலுவின் கோட்டை என்று வர்ணிக்கப்படும் திருவண்ணாமலை மாவட்டத்திலும், மொத்தமுள்ள 8 தொகுதிகளில் ஆரணி, கலசப்பாக்கம், செய்யாறு, கீழ்பென்னாத்தூர், செங்கம் என்று 5 தொகுதிகளை கைப்பற்றி அதிமுக வரலாற்று சாதனை படைத்திருக்கிறது. அதே போல் வன்னியர் மக்களின் வாக்குகளை அதிகம் கொண்ட கடலூர் மாவட்டத்தின் நெய்வேலி, பண்ருட்டி, புவனகிரி தொகுதிகள், தருமபுரி மாவட்டத்தின் பாலக்கோடு, பாப்பிரெட்டிப்பட்டி, அரூர் தொகுதிகள், கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் திருக்கோவிலூர், சங்கராபுரம் தொகுதிகளையும் அதிமுக வசப்படுத்தியிருக்கிறது.

குறிப்பிடப்படாத...
இதே போல் சி.வி.சண்முகம் வெற்றி பெற்ற விழுப்புரம் மாவட்டம் மயிலம் தொகுதி, வேலூர் மாவட்டம் அணைக்கட்டு தொகுதி, அரியலூர் ஆகிய தொகுதிகளிலும் வன்னியர் வாக்குகளே கணிசமானவை. சி.வி.சண்முகம் தனது பேட்டியில் குறிப்பிடாத செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர், மதுராந்தகம், கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர், பர்கூர், ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு, திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி, திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை, நாகை மாவட்டம் வேதாரண்யம் ஆகிய தொகுதிகளிலும் கூட வன்னியர் சமூக வாக்குகளே அதிகம்.

4 தொகுதிகளில் மட்டும்...
இது ஒருபுறம் இருக்க, தேர்தல் முடிவுகள் வெளியான போதே, இதே குற்றச்சாட்டை முன்வைத்து பாமகவினர் தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்த தொடங்கி இருந்தனர். அதிமுக வென்ற தொகுதிகளில் பாமகவின் வாக்குகள் சிந்தாமல் சிதறாமல் அக்கட்சிக்கே சென்றதாகவும், ஆனால் பாமக போட்டியிட்ட தொகுதிகளில் அதிமுகவின் வாக்குகள் தங்கள் வேட்பாளர்களுக்கு கை கொடுக்கவில்லை எனவும் வெளிப்படையாகவே பேசி வந்தனர். 18 இடங்களில் போட்டியிட்ட பாமக, தர்மபுரி, விழுப்புரம் மாவட்டத்திலுள்ள செஞ்சி, விக்கிரவாண்டி, அரியலூர் மாவட்டத்தில் உள்ள ஜெயங்கொண்டம் என வெறும் 4 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது. இந்த நான்கு தொகுதிகளுமே வன்னியர் வாக்குகள் அதிகம் கொண்டவை என்பதாலேயே வெல்ல முடிந்ததாகவும், இங்கும் அதிமுக வாக்குகள் தங்களுக்கு கிடைக்கவில்லை எனவும் பாமக தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

சி.வி.சண்முகத்தின் புதிய அஸ்திரம்
தேர்தல் முடிந்தவுடன் பாமகவினர் முன்வைத்த குற்றச்சாட்டையே தற்போது சி.வி.சண்முகம் கையில் எடுத்திருப்பது, அதிமுகவுக்குள் மட்டுமின்றி, பாமக உடனான கூட்டணியிலும் ஏற்கனவே விழுந்துள்ள விரிசலை மேலும் விரிவுபடுத்தும் அஸ்திரம் என்கின்றனர் அரசியல் நோக்கர்கள்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved