Also Watch
Read this
தவெக குதிரை பேரத்தில் ஈடுபடுவதாக, மூச்சுக்கு முந்நூறு முறை கூறும் அதிமுக பொதுச் செயலாளர் இபிஎஸ் தான், அதிருப்தி எம்.எல்.ஏ.க்களை விலை கொடுத்து வாங்கி, உண்மையில் குதிரை பேரத்தில் ஈடுபட்டதாக முன்னாள் எம்.எல்.ஏ. மரகதம் குமரவேல் குற்றம் சாட்டியுள்ளார். அதேபோல் தேமுதிகவுக்கு ஒதுக்குவதாக இருந்த ராஜ்யசபா சீட்டை, 20 கோடி ரூபாய் பணத்திற்கு தனபாலிடம் விற்று, இபிஎஸ் விலை போனதாகவும் ஆவேசமடைந்தார்.

மதுராந்தகத்தில்...
செங்கல்பட்டு மாவட்டம்,மதுராந்தகத்தில் மரகதம் குமரவேல் தலைமையில் மாற்றுக் கட்சியினர் தவெகவில் இணையும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதிமுக, புரட்சி பாரதம், பாஜக உள்ளிட்ட பல்வேறு கட்சியில் இருந்து தவெகவில் ஏராளமானோர் இணைந்தனர். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் ஆதவ் அர்ஜூனா, செங்கோட்டையன், ஆனந்த் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தேர்தல் முடிவுக்கு பிறகு...
இந்த கூட்டத்தில் மரகதம் குமரவேல் பேசியதாவது;
மே 4ஆம் தேதி தேர்தல் முடிவு வெளியானது. 2 நாள் கழித்து எங்களை வரச் சொன்னார்கள். அப்போது, அதிமுகவில் 47 எம்எல்ஏக்கள் மட்டுமே வெற்றி பெற்றிருந்தனர். பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் என்ன முடிவு எடுத்தார்கள் என்பது எங்களுக்குத் தெரியவில்லை. அனைவரையும் புதுச்சேரிக்கு அனுப்பினர். அங்கு நான்கு நாட்கள் தங்கியிருந்தோம். அதன் பின்னர், மீண்டும் எங்களை வரச் சொன்னார்கள். அப்போது, திமுகவின் ஆதரவுடன் கூட்டணி ஆட்சி அமைக்க வேண்டும் என்ற எண்ணம் எடப்பாடி பழனிசாமியிடம் இருந்ததாக தெரிந்தது. இது நியாயமா? எம்.ஜி.ஆர். யாரை எதிர்த்து கட்சியைத் தொடங்கினார்? திமுகவை எதிர்த்து தானே தொடங்கினார்?.

மக்கள் சேவைக்காக...
சட்டமன்றத்தில் ஒரு பெண் என்று கூட பார்க்காமல் ஜெயலலிதாவை அவமதித்தனர். அப்படிப்பட்ட கட்சியுடன் கூட்டணி வைப்பது சரியா? எனக்கு மிகவும் வேதனையாக இருந்தது. என் தந்தை சாதாரண தோட்டத் தொழிலாளி. எனக்கு ‘மரகதம்’ என்ற பெயரை வைத்தவர் எம்.ஜி.ஆர். தான். அவரின் கொள்கைகளில் வளர்ந்த எங்களுக்கு இது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாக இருந்தது. அதனால் தான் அந்த அமைப்பிலிருந்து வெளியேறினோம். தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஆதரவு அளித்து மக்களுக்காக நல்லது செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் தான் நாங்கள் செயல்பட்டோம்.

விஜய்க்கு எதிராக சதி
சட்டமன்றத் தேர்தலின்போது, ஒரு மாவட்டச் செயலாளர் திமுக வேட்பாளரிடம் ரூ.50 லட்சம் பெற்றதாக தகவல்கள் உள்ளன. அதற்கான ஆதாரங்கள், ஆடியோ பதிவுகள் அனைத்தும் என்னிடம் உள்ளன. அவற்றை விரைவில் வெளியிடுவேன். மக்கள் என் மீது நம்பிக்கை வைத்து வாக்களித்தார்கள். நான் உழைத்ததற்கும் என் நேர்மைக்கும் வாக்களித்தார்கள். ஆனால் தலைமை மட்டத்திலேயே திமுக உடன் இணைந்து செயல்பட வேண்டும் என்ற எண்ணம் இருந்தது. தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் முதல்வராக வரக்கூடாது என்பதற்காகவே இந்த சதிகள் நடந்ததாக நான் கருதுகிறேன்.

எந்த விசாரணைக்கும் தயார்
எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் மக்களுக்காக வாழ்ந்தவர்கள். அதேபோல் விஜய்யும் மக்களின் நெஞ்சங்களில் இடம் பிடித்துள்ளார். மக்களுக்காகவே அவர் செயல்படுகிறார். தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்ததற்காக பல குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. எனக்கு ரூ.50 கோடி, ரூ.100 கோடி கொடுக்கப்பட்டதாக கூறினார்கள். எந்த விசாரணை வந்தாலும் நான் எதிர்கொள்ளத் தயாராக இருக்கிறேன்.

குதிரை பேரம் எங்கே நடந்தது?
அதிமுகவில் நடந்த பல செயல்பாடுகள் குறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும். குதிரை பேரம் நடந்தது எங்கே என்றால், அது அங்குதான் நடந்தது. இன்று தமிழக வெற்றிக் கழகத்தில் தூய்மையான மனிதர்கள் உள்ளனர். துரோகம் இல்லாத இடமாக இதை நான் பார்க்கிறேன்.

அதனால்தான் இந்த இயக்கத்தில் இணைந்தேன். தமிழக வெற்றிக் கழகமே மக்களுக்காக இயங்கும் இயக்கம். நமக்கான நிலையான இடம் இதுவே. நாம் அனைவரும் உயர்ந்த நிலையை அடைவோம். தமிழக மக்களின் பாதுகாவலர், இளைஞர்களின் நம்பிக்கை, பெண்களின் காவலர், ஏழைகளின் உறவினர் என விளங்கும் விஜய் மக்களின் முன்னேற்றத்தையே தனது லட்சியமாகக் கொண்டுள்ளார்.

ஜெயலலிதாவின் உருவத்தை...
அதிகாரம் என்பது பதவி அல்ல. மக்களுக்கு சேவை செய்வதற்கான வாய்ப்பு என்பதை விஜய் நிரூபித்து வருகிறார். பெண்களுக்காக ஜெயலலிதா பல திட்டங்களை அறிவித்ததைப் போலவே, விஜய்யும் பெண்களுக்கான பல திட்டங்களை அறிவித்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. ஜெயலலிதாவின் உருவத்தை நாங்கள் தளபதி விஜய்யிடம் பார்க்கிறோம்.
இவ்வாறு மரகதம் குமரவேல் பேசி உள்ளார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved