Also Watch
Read this
By: Manigandan Raja

தமிழக முதல்வர் ஜோசப் விஜய் அவர்களின் பிறந்தநாள் வருகிற ஜூன் 22 ஆம் தேதி வரவுள்ளது. இந்த நிலையில் முதல்வரின் பிறந்த நாளை ஒட்டி பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மதுரை அவனியாபுரம் மந்தையில் நடைபெற்றது.
கூட்டத்தில் மின்சாரம் மற்றும் சட்டத்துறை அமைச்சர் நிர்மல் குமார் கலந்து கொண்டு பொதுமக்களிடம் உரையாற்றினார். தொடர்ந்து நிகழ்ச்சியின் முடிவில் பொதுமக்களுக்கு சிறிய அளவிலான அரிசி பைகள் வழங்கப்பட இருந்தது.
அமைச்சர் பேசி விட்டு புறப்பட்ட அடுத்த சில நிமிடங்களிலே ஆண்கள்,பெண்கள் கையில் குழந்தைகளுடன் மற்றும் முதியவர்கள் என அரிசிப்பை வாங்க முந்தியடித்தனர் இதனால் அந்த இடம் சலசலப்பானது.
முறையாக வரிசை படுத்தாமல் நிர்வாகிகள் நலத்திட்ட உதவிகள் கொடுக்க ஆரம்பித்ததால் மக்கள் நாளா பக்கமும் முந்தியடிக்க தவெக நிர்வாகிகளால் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாத சூழல் உருவாகியதால் அங்கு தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

சிறிய லோடு வாகனத்தில் கொண்டுவந்த அரிசி பைகளை முந்தி அடித்த மக்களுக்கு கொடுத்துவிட்டு முதல்வர் புகைப்படத்துடன் கூடிய டோக்கன்களை கையில் வைத்திருந்த நிறைய பெண்களுக்கு நலத்திட்டம் வழங்காமல் வீடு தேடி வரும் அனைவரும் புறப்படுங்கள் என்று கூறிவிட்டு நைசாக அங்கிருந்து புதிய தவெக நிர்வாகிகள் புறப்பட்டனர்.
நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தவர்கள் கடந்த வாரம் தான் அதிமுகவிலிருந்து தமிழக வெற்றிக் கழகத்தில் தங்களை இணைத்துக் கொண்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அமைச்சரிடம் நல்ல பெயர் எடுக்க முயற்சி செய்து பொதுமக்களை முறைப்படுத்தாததால் முயற்சி அனைத்தும் வீணா போனதே மிச்சம்.
பழைய திராவிட ஆட்சிகளிலும் மக்கள் முந்தியடிக்கும் நிலைமைதான் தற்போது இந்த ஆட்சியிலும் அதே நிலைமை தான் ஆட்சி மாறியும் காட்சி மாறவில்லை என விவரம் தெரிந்தவர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved