Also Watch
Read this
இந்திய அரசின் கீர்த்தி சக்ரா விருது பெற்ற லான்ஸ் நாயக் மீனாட்சி சுந்தரத்தை நேரில் அழைத்துப் பாராட்டிய முதலமைச்சர் ஜோசப் விஜய், பயங்கரவாதிகளுக்கு எதிரான வீர தீரச் செயலைப் பாராட்டி, 48 லட்சம் ரூபாய்க்கான காசோலை வழங்கியதோடு வீரரின் குழந்தையை கொஞ்சி மகிழ்ந்தார்.

வீர தீர செயலுக்கு பாராட்டு
இதுதொடர்பாக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது;
தமிழக முதல்வர் விஜய் இன்று ஜூன் 15ஆம் தேதி, தலைமைச் செயலகத்தில், இந்திய அரசின் “கீர்த்தி சக்ரா” விருது பெற்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த ராணுவ வீரர் லான்ஸ் நாயக் மீனாட்சி சுந்தரத்துக்கு, பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கையில், அசாத்திய வீர தீரச் செயலைப் பாராட்டி தமிழக அரசின் சார்பில் 48 லட்சம் ரூபாய்க்கான காசோலையை வழங்கினார்.

தேனி மாவட்டத்தை சேர்ந்தவர்
இந்திய ராணுவத்தின் பீரங்கிப் படைப் பிரிவில் பணியாற்றி வரும் தேனி மாவட்டத்தைச் சேர்ந்த லான்ஸ் நாயக் மீனாட்சி சுந்தரம், டிசம்பர் 19, 2024 அன்று ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திலுள்ள குல்காம் பகுதியில் நடைபெற்ற பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கையின்போது, பயங்கரவாதிகளின் துப்பாக்கிச் சூட்டில் முகம் மற்றும் தோள் பட்டையில் பலத்த காயம் அடைந்த நிலையிலும், தனது கடமையில் இருந்து தவறாமல் தொடர்ந்து போராடி, பயங்கரவாதிகளை வீழ்த்தினார்.

கீர்த்தி சக்ரா விருது
அவரது அசாத்திய வீர தீரச் செயலைப் பாராட்டி, இந்தியாவின் இரண்டாவது உயரிய அமைதிக்கால வீர விருதான கீர்த்தி சக்ரா விருதினை இந்திய குடியரசுத் தலைவர் கடந்த ஜூன் 8ஆம் தேதி அன்று டெல்லியில் நடைபெற்ற விழாவில் வழங்கிச் சிறப்பித்தார்.

தேசத்தின் பாதுகாப்பிற்காகத் தனது இன்னுயிரையும் பொருட்படுத்தாமல் அர்ப்பணிப்புடன் செயல்பட்ட இந்திய ராணுவ வீரர் லான்ஸ் நாயக் மீனாட்சி சுந்தரத்தின் நாட்டுப் பற்று, துணிச்சல், கடமை உணர்வு தமிழ் மண்ணிற்குப் பெருமை சேர்ப்பதோடு, இளம் தலைமுறையினர் இடையே வீர உணர்வு மற்றும் தியாக மனப்பான்மையை வளர்த்திடும் வகையில் அமைந்துள்ளது.

ரூ.48 லட்சம் பரிசு
பல்வேறு வீர தீரச் செயல்களுக்காக தமிழ்நாட்டைச் சேர்ந்த பாதுகாப்புப் படை வீரர்கள் விருதுகளைப் பெறுகின்றபோது, அவர்களைப் பெருமைப்படுத்தும் வகையில், தமிழக அரசு ராணுவ வீரர் பெற்ற விருதுகளுக்கேற்ப ரொக்கப் பரிசு வழங்கிச் சிறப்பித்து வருகிறது. இந்த வகையில், உயரிய விருதான “கீர்த்தி சக்ரா” விருது பெற்ற ராணுவ வீரர் லான்ஸ் நாயக் மீனாட்சி சுந்தரத்துக்கு, தமிழக முதல்வர் தமிழக அரசின் சார்பில் 48 லட்சம் ரூபாய்க்கான காசோலையை வழங்கி, தனது பாராட்டுகளைத் தெரிவித்துக் கொண்டார்.
இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved