Also Watch
Read this
By: Web Team

இஸ்ரேல் மீது மீண்டும் தாக்குதலை தொடர்ந்தால், மிகப்பெரிய விலை கொடுக்க நேரிடும்... தாக்குதலுக்கு திட்டமிட்டாலே இறங்கி அடிப்போம் என, ஹவுதி அமைப்பினருக்கு, பகிரங்க எச்சரிக்கை விடுத்துள்ளார் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு...
என்ன தான் நடக்கிறது? இரண்டு தரப்பிலும் யார் பக்கம் நியாயம்? பேச்சுவார்த்தைகள் பலன் தராதா?
பாலஸ்தீனம் மீது போர் தொடுத்துள்ள இஸ்ரேல், ஹமாஸ் படையினரை அழிப்பதாக கூறி, கொத்துக் கொத்தாக அப்பாவி மக்களை படுகொலை செய்து வருகிறது.
இந்த நிலையில், போரை நிறுத்த இரு தரப்பும் பரஸ்பரம் அவ்வப்போது ஒப்புக் கொண்டு தான் வருகின்றன. ஆனால், தாக்குதல் நின்றபாடில்லை.
போருக்கு மத்தியில், "போர் நிறுத்தம் குறித்து பேச்சுவார்த்தை நடத்துவோம்" என்று, இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு கூறியிருந்தார். கத்தார் மற்றும் எகிப்திய மத்தியஸ்தர்கள் முன்மொழிந்த 60 நாள் போர் நிறுத்த திட்டத்திற்கு ஹமாஸ் ஒப்புக்கொண்டது.
இதன்படி, காசாவில் உள்ள பணயக் கைதிகளில் பாதி பேர் விடுவிக்கப்படுவார்கள் என்று கத்தார் தெரிவித்தது. இருப்பினும், இந்த ஒப்பந்தத்தை ஏற்றுக்கொள்ள முடியாது என நெதன்யாகு கூறி விட்டார்.

சர்வதேச அளவில் கடும் எதிர்ப்பு நிலவி வரும் போதிலும், காசா நகரத்தின் மீது மிகப்பெரிய தாக்குதல் நடத்த அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாகவே தெரிவித்திருக்கும் நெதன்யாகு, போர் நிறுத்த ஒப்பந்தத்தை ஏற்க மறுத்துவிட்டார்.
ஆனால், இது குறித்த பேச்சுவார்த்தை நடத்த இடம் இறுதி செய்யப்பட்டு அதற்கான தூதர்கள் அனுப்பி வைக்கப்படுவார்கள் என்றும் தெரிவித்தார்.
"அனைத்து பணயக் கைதிகளும் ஒரே நேரத்தில் விடுவிக்கப்பட்டால் மட்டுமே நாங்கள் போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கு ஒப்புக்கொள்வோம்" என திட்டவட்டமாக கூறியிருக்கிறார் நெதன்யாகு.
ஹமாஸை நிராயுதபாணியாக்குதல், காசாவை ராணுவமயமாக்கல், காசா எல்லையை இஸ்ரேல் கட்டுப்படுத்துதல் மற்றும் ஹமாஸ் அல்லாத, பாலஸ்தீனிய அதிகாரசபை அல்லாத நிர்வாகத்தை நிறுவுதல்... இதுவே, போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கான நிபந்தனைகள் என்றும் நெதன்யாகு கூறியிருக்கிறார்.

கடந்த 2023ம் ஆண்டு, அக்டோபர் 7ஆம் தேதி அன்று தெற்கு இஸ்ரேல் மீது, ஹமாஸ் நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக இஸ்ரேலிய ராணுவம் காஸாவில் ஒரு தாக்குதலைத் தொடங்கியது. இதுவே போரின் ஆரம்பம்...
முதல் தாக்குதலிலேயே ஆயிரத்து 200 பேர் கொல்லப்பட்டனர், 251 பேர் பணயக் கைதிகளாக பிடித்துச் செல்லப்பட்டனர். அப்போதிருந்து காஸாவில் குறைந்தபட்சம் 62 ஆயிரத்து192 பேர் கொல்லப்பட்டுள்ளனர் என்று அப்பகுதியின் சுகாதார அமைச்சகம் தெரிவித்தது.
இஸ்ரேல் - காசா இடையேயான போர், கடந்த 22 மாதங்களாக நடைபெற்று வருகிறது. தொடரும் அப்பாவி மக்களின் உயிர்பலி காரணமாக, போர் நிறுத்தத்தை ஏற்படுத்த வேண்டும் என்று உலகின் பல நாடுகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன.
ஆனால், பணய கைதிகள் விடுதலை, ஆயுத குறைப்பு நடவடிக்கை என்ற தமது நிபந்தனையை ஏற்கவில்லை என்றால் காசா நகரம் முற்றிலும் அழிக்கப்படும் என்று இஸ்ரேல் நிபந்தனை விதித்துள்ளது.
"நரகத்தின் கதவுகள் திறக்கப்படும்” என்று, இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
காஸாவில் உணவுப் பஞ்சம் மிகவும் மோசமாக தலை விரித்தாடுகிறது. எல்லைக்கு வெளியே நூற்றுக்கணக்கான உதவிப் பொருள்களுடன் லாரிகள் நின்றுகொண்டிருக்கின்றன, ஆனால் அவை உள்ளே செல்ல முடியாமல் சிக்கியுள்ளன.
ஐக்கிய நாடுகள் சபையின் ஆதரவுடன் செயல்படும், உலகளவில் பசியை கண்காணிக்கும் முக்கிய அமைப்பான ஐபிசி (IPC) வெளியிட்ட அதிர்ச்சி தகவலின்படி, காஸாவில் உள்ள பாலஸ்தீனர்களில் நான்கில் ஒருவர், அதாவது சுமார் 5 லட்சம் பேர், கடுமையான பஞ்சத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர் என தெரிய வந்துள்ளது.

காசா நகரை முழுமையாக கைப்பற்றும் நடவடிக்கைகளில், இஸ்ரேல் ராணுவம் பின்வாங்கவில்லை. பொது மக்களை தெற்கு பகுதிக்கு செல்லுமாறு எச்சரித்து வருகிறது. கடந்த 2023ஆம் ஆண்டு அக்டோபர் 7ஆம் தேதி, தொடங்கியது இஸ்ரேல் - காசா போர். பொதுவாக, இஸ்ரேல் தான் தாக்குதலை தொடங்கும். ஆனால், இந்த முறை வழக்கத்திற்கு மாறாக பாலஸ்தீனம் போரை தொடங்கியது. சும்மா இருக்குமா இஸ்ரேல்...
ஏவுகணை தாக்குதல், வான்வழி தாக்குதல், தரைவழி தாக்குதல் என போர் தொடர்ந்துகொண்டே இருக்க, பல ஆயிரக்கணக்கான பொது மக்களின் உயிரிழப்புகளும் தொடர்ந்தன.
ஆனால், உலக நாடுகளின் பெரு முயற்சியால், முதல்கட்ட பேச்சுவார்த்தையால், தற்காலிக போர் நிறுத்தம் அமலானது. இரு தரப்பும் பணய கைதிகளை விடுவித்து வந்தது. இன்னும் சில நாள்களில் அடுத்த கட்ட பேச்சுவார்த்தை தொடங்கும் என்ற நிலையில் தான் அதிர்ச்சி. இஸ்ரேல் ராணுவம், காசா மீது தாக்குதலை தொடர்ந்தது.
போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கு பிறகு, இஸ்ரேல் ராணுவம், காசா மீது நடத்திய முதல் மிகப்பெரிய தாக்குதல் இது. இந்தத் தாக்குதலினால் போர் நிறுத்தம் ரத்தானது.
இஸ்ரேல் பாதுகாப்பு துறை, "காசாவில் ஹமாஸ் இருக்கும் தீவிரவாத பகுதிகளில் தற்போது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது" என்று பகிரங்கமாக அறிவித்தது.
'காசா பணய கைதிகளை விடுவிக்காததே இந்த தாக்குதலுக்கு காரணம்' என்று இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு, சமூக வலை தளத்தில் பதிவிட்டார்.
முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக, இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனம் இடையே பல்வேறு சுற்று பேச்சு வார்த்தை நடந்துள்ளன. ஆனால் இதுவரை தீர்வு எட்டப்படவில்லை. என்ன தான் காரணம்?
பாலஸ்தீனம் சுதந்திரமான தனி நாடாக உருவாகுமா, இல்லையா? பிற நாடுகளில் தஞ்சமடைந்துள்ள பாலஸ்தீன அகதிகளை என்ன செய்வது? இதற்கு இஸ்ரேல் - பாலஸ்தீன தரப்பில் தீர்வில்லை.
இரு தரப்பும் ஜெருசலேமை பகிர்ந்து கொள்வதா இல்லையா? மேற்கு கரையில் இஸ்ரேல் கட்டியுள்ள குடியிருப்புகள் அப்படியே இருக்க வேண்டுமா அல்லது அகற்றப்படவேண்டுமா?
கேள்விகளுக்கு பஞ்சமில்லை... ஆனால் இதற்கு விடை தான் இல்லை...

தற்போது நடக்கும் போரைப் பார்க்கும் போது, இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனம் இடையே உடன்பாடு எட்டப்படுவது மிகவும் கடினம் தான் என்பது நிதர்சனம் என்கின்றனர் சமூக ஆர்வலர்கள். போர் மற்றும் இனப்படுகொலையில் இருந்து தப்பி, இந்த பகுதியில் குடியேறி, தமக்கென தனி தேசத்தை உருவாக்கிய யூதர்கள்... வாழ்ந்து வந்த மண்ணை பறிகொடுத்து வீட்டுக்கு திரும்பமுடியாமல் அகதிகளான பாலஸ்தீனர்கள்...
இரு தரப்பில் யார் சரி, யார் தவறு? எங்கே, எது பாதிக்கப்பட்ட தரப்பு? இதற்கெல்லாம் விடை இல்லை. ஆனால், அமைதி ஒன்றே வேண்டும் என, ஒவ்வொரு மனித உயிரும் ஏங்கிக் கொண்டிருக்கிறது..
அமைதி நிலவ பிரார்த்திப்போம்...
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved