Also Watch
Read this
நீட் தேர்வை எதிர்த்து, டெல்லியில் நடைபெற்று வரும் இளையோர் போராட்டம், மத்திய அரசு விழிப்படைவதற்கான இறுதிக்கட்ட குரல் என்றும், எளிய மாணவர்களுக்கு மருத்துவக் கல்வியை எட்டா தூரத்தில் வைத்துள்ள நீட் தேர்வு முழுதாக ஒழிக்கப்பட வேண்டிய நேரம் வந்து விட்டதாகவும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறி உள்ளார்.
மனசாட்சியை உலுக்குகிறது...
இதுகுறித்து, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறி இருப்பதாவது;
நீட் வினாத்தாள் கசிவை தொடர்ந்து, வரலாறு காணாத வகையில் நாடு முழுவதும் மாணவர்கள் முன்னெடுத்துள்ள போராட்டங்கள், வெறும் ஒரு தேர்வின் நம்பகத்தன்மை சீர்குலைந்ததற்கான எதிர்வினை மட்டுமல்ல. தகுதி அடிப்படையிலானது என்று முன்னிறுத்தப்பட்ட ஒரு அமைப்பின் மீதான ஆழமான நம்பிக்கை இழப்பையே வெளிப்படுத்துகிறது. லட்சக்கணக்கான மாணவர்களின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் நடைமுறையின் நேர்மை மீதான நம்பிக்கை தகரும் போது, அது நாட்டின் மனச்சாட்சியையே உலுக்குகிறது.

முதல் குரல் தமிழ்நாட்டில்...
நீட் தேர்வுக்கு எதிராக, முதன்முதலில் எச்சரிக்கைக் குரல் எழுப்பிய மாநிலம் தமிழ்நாடு தான். காரணம், நீட் தேர்வு நடத்தப்பட்ட விதத்தில் முறைகேடுகள் இருந்தன என்பதல்ல. மருத்துவம் படிக்க விரும்பும் ஒவ்வொரு மாணவரின் எதிர்காலத்தையும் ஒரு தேசிய நுழைவுத் தேர்வில் பணயம் வைத்து தீர்மானிக்க வேண்டும் என்ற அடிப்படைக் கொள்கையையே கேள்விக்கு உட்படுத்தினோம். நடைமுறையில் பிரச்சினை என்பதைவிட அதன் அடிப்படையே பிரச்சினைக்குரியது. சமீபத்திய நிகழ்வு எங்கள் கவலை முற்றிலும் நியாயமானது என்பதை உறுதிப்படுத்தி உள்ளது.
வசதி படைத்தவர்களின் ஆதிக்கம்...
நீட் தேர்வு முறை, உண்மையிலேயே தகுதியால் நிர்வகிக்கப்பட்டிருந்தால், இத்தகைய அசாதாரணமான தளர்வுகளுக்கான தேவை எழுந்திருக்காது. உண்மை நிலை இதற்கு முற்றிலும் மாறானது. குறைந்த எண்ணிக்கையிலான அரசு மருத்துவக் கல்லூரி இடங்களுக்காக ஏழை மாணவர்கள் மிகக் கடுமையான போட்டியை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. ஆனால், பொருளாதார வசதி படைத்தவர்கள் மிகவும் தளர்வான தகுதி அளவுகோலில், தனியார் மருத்துவக் கல்வியைப் பெற முடிகிறது. இது தகுதியை முன்னிறுத்துவது அல்ல, வசதி படைத்தவர்களின் ஆதிக்கத்தை அமைப்பு ரீதியாக நிலை நிறுத்தும் முறை.

விலக்கு கோரும் மாநிலங்களுக்கு...
இந்த பிரச்சினைகளை தொடக்கத்திலேயே உணர்ந்த மாநிலம் தமிழ்நாடு. நீட் தேர்வில் இருந்து விலக்கு கோரி, தமிழ்நாடு சட்டப்பேரவை ஒருமனதாக மசோதாவை நிறைவேற்றியது. ஆனால், ஆளுநர் அதற்கு ஒப்புதல் அளிக்காமல் நிறுத்தி வைத்தார். மாநிலம் முன்வைத்த கவலைகளின் சாரத்தைப் புரிந்துகொண்டு ஆக்கப்பூர்வமாக அணுக ஒன்றிய அரசும் முன்வரவில்லை. நீட் தேர்வில் இருந்து விலக்கு கோரும் மாநிலங்களுக்கு அந்த உரிமை வழங்கப்பட வேண்டும். மாணவர் சேர்க்கை முறைகளில் நிலவும் பன்முகத்தன்மையால் கல்வித் தரம் பாதிப்படையாது. மாறாக, அது சமத்துவத்தையும் சிறப்பான வெளிப்பாட்டையும் வலுப்படுத்தக்கூடும்.
மாணவர்கள் போராட்டம்
இந்தியா முழுவதும் நடைபெற்று வரும் மாணவர் போராட்டங்கள், தேர்வு நடத்தும் முறைகளை மட்டும் மேம்படுத்த வேண்டிய அவசியத்தை உணர்த்தும் எச்சரிக்கை அல்ல. பெரும் தொகையையும் காலத்தையும் பணயமாக கோரும் தேசிய நுழைவுத் தேர்வு என்ற ஒட்டு மொத்த கட்டமைப்பையே அடிப்படையில் மீளாய்வு செய்ய வேண்டிய நேரம் வந்துவிட்டது என்பதற்கான எச்சரிக்கை மணியாக அமைய வேண்டும்.

திறந்த மனதுடன்...
மாநிலங்கள், கல்வியாளர்கள், மாணவர்கள், மருத்துவத் துறையினர், இதில் தொடர்புடைய அனைவரோடும் திறந்த மனதுடன் ஒன்றிய அரசு கலந்தாலோசிக்க வேண்டும். ஒற்றைத்துவத்தையே இறுதி இலக்காகக் கருதும் மனப்போக்கை கைவிட வேண்டும். இந்தியாவுக்குத் தேவை அதிகாரக்குவிப்பு அல்ல. மாநிலங்கள் மீதும், மாநில அரசுப் பள்ளிகள் மீதும், மாணவர்கள் மீதும் அதிக நம்பிக்கை வைப்பதே நாட்டின் இன்றைய தேவை. மருத்துவக் கல்வியின் எதிர்காலம் இன்னும் நியாயமான, கூட்டாட்சித் தத்துவத்தை மேலும் மதிக்கும் அணுகுமுறையைக் கோருகிறது.
இவ்வாறு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறி உள்ளார்.