Also Watch
Read this
நூறு கோடி ரூபாய் மதிப்பிலான பழனி கோயில் நிலத்தை வெறும் 2 கோடி ரூபாய்க்கு பதிவு செய்தது குறித்து பாரபட்சமற்ற விசாரணை நடத்தப்படும் என்றும், திமுக ஆட்சியில் இதுபோன்று பல்வேறு மோசடி பத்திரப்பதிவு அரங்கேறி இருப்பதாகவும் அமைச்சர் நிர்மல் குமார் குற்றம் சாட்டி உள்ளார்.
பாஜக உடன் திமுக திரைமறைவில் உறவில் இருப்பது வெட்ட வெளிச்சமாகி இருப்பதாக அமைச்சர் நிர்மல்குமார் விமர்சனம் செய்துள்ளார். திருச்சி சிவா விரைவில் மத்திய அமைச்சர் ஆவார் என அனிதா ராதாகிருஷ்ணன் பேசியதற்கு என்ன பொருள்? என்றும் கேள்வி எழுப்பினார்.

கடந்த 5 ஆண்டுகளாக...
இதுகுறித்து, அமைச்சர் நிர்மல் குமார் கூறி இருப்பதாவது;
பழநி முருகன் கோயிலுக்கு சொந்தமான நிலம் மோசடியாக பத்திரப் பதிவு செய்யப்பட்ட விவகாரத்தில் விரிவான விசாரணை தேவை. இந்த விசாரணை விரிவடைய வேண்டும். இதில், பலர் சம்பந்தப்பட்டிருக்க வாய்ப்பு உள்ளதாக கருதுகிறோம். பழநியில் மட்டுமின்றி, பல இடங்களில் போலி பத்திரப் பதிவு சம்பவங்கள் கடந்த 5 ஆண்டுகளாக நடந்து உள்ளதாக சந்தேகப்படுகிறோம். இதுதொடர்பான விசாரணை விரிவடைய வேண்டும். குற்றம் இழைத்தவர்கள் கைது செய்யப்பட வேண்டும்.

விரிவான விசாரணைக்கு...
கோயில் இடம், நீர்நிலை உள்ள இடங்களில் போலி பத்திர பதிவு செய்யப்பட்டு உள்ளதாக ஏராளமான புகார்கள் வந்துள்ளன. எனவே, இவை அனைத்தும் துரிதமாக விசாரிக்கப்பட வேண்டும். கடந்த ஐந்து ஆண்டுகளில் பத்திரப் பதிவு மோசடி தொடர்பாக ஒரு வழக்கு கூட பதிவு செய்யப்படவில்லை. தவெக அரசு வந்த பிறகுதான் இதில் நடந்துள்ள மோசடி குறித்து விரிவாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பழநி நில மோசடி தொடர்பாக சிபிசிஐடி விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டு உள்ளது. இதற்கு முந்தைய ஆட்சியில் இதுபோன்ற நடவடிக்கைகள் ஏதும் எடுக்கப்படவில்லை. பழநி கோயில் நில போலிப் பத்திரப் பதிவு மிகவும் நுணுக்கமாக நடைபெற்றுள்ளது. இதுபோல் வேறு எங்கேனும் போலி பத்திர பதிவு நடைபெற்று இருந்தால் பொதுமக்கள் அதனை அரசின் கவனத்துக்குக் கொண்டு வர வேண்டும். விரிவான விசாரணையை அரசு நடத்தும்.
பாஜக இருக்கிறது?
திமுக எம்பி திருச்சி சிவா எப்போது வேண்டுமானாலும் மத்திய அமைச்சர் ஆகலாம் என்று அனிதா ராதாகிருஷ்ணன் கூறி இருப்பதை எளிதாக எடுத்துக்கொள்ள முடியாது. ’எங்களுக்குப் பின்னால் பாஜக இருக்கிறது, நாங்கள் அசைக்க முடியாத சக்தி,’ என்று அனிதா ராதாகிருஷ்ணன் சொல்ல வருகிறாரா? என்ற கேள்வி எழுகிறது.

தவெக அரசை பதவி நீக்க திட்டம்
தவெக எம்எல்ஏக்களை விலைக்கு வாங்கும் முயற்சியை திமுக தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. 40, 50 கோடி ரூபாய் கொடுத்து தவெக எம்எல்ஏக்களை விலைக்கு வாங்க தொடர்ந்து முயற்சி செய்து கொண்டு தான் இருக்கின்றனர். இந்த முயற்சி தொடர்பாக 2 கோடி ரூபாய்க்கும் மேலாக ரொக்கம் கைப்பற்றப்பட்டு உள்ளது. தவெக எம்எல்ஏக்களை விலைக்கு வாங்க திமுக மற்றும் செந்தில் பாலாஜி சார்பாக கொடுக்கப்பட்ட பணம் ஆங்காங்கே பதுக்கி வைக்கப்பட்டுள்ளது. அந்த பணத்தை கைப்பற்றும் நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். நிறைய இடங்களில் இவ்வாறு பணத்தை பதுக்கி வைத்து இருக்கின்றனர். இன்றளவும் அந்த முயற்சி தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது. இந்த முயற்சியை கைவிட வேண்டும். சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வர திட்டமிட்டு உள்ளனர். அதில் வெற்றி பெறுவதன் மூலம், இந்த அரசை பதவி நீக்கம் செய்ய திட்டமிடுகிறார்கள்.
இவ்வாறு நிர்மல்குமார் கூறி உள்ளார்.