Also Watch
Read this
தவெக அழைப்பு விடுத்துள்ள தோழமை கட்சிகள் கூட்டத்தில் கலந்து கொள்ளப்போவதில்லை என இடதுசாரிகள் அறிவித்துள்ளன. அரசுக்கு வெளியில் இருந்து மட்டுமே ஆதரவு தெரிவிப்பதாகவும், தவெகவுடன் கூட்டணியில் இல்லை என்றும் மீண்டும் விளக்கம் அளித்துள்ளது.

முதல்வருடன் கம்யூனிஸ்ட் தலைவர்கள் சந்திப்பு
சென்னை தலைமைச் செயலகத்தில், முதலமைச்சர் விஜயுடன் மார்க்சிஸ்ட் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர்கள் சண்முகம், வீரபாண்டியன் நேரில் சந்திப்பு நிகழ்த்தினர். காலி அரசுப் பணியிடங்களை நிரப்ப வேண்டும், காவிரி விவகாரத்தில் அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்ட வேண்டும் உள்ளிட்டவற்றை வலியுறுத்தியதாக விளக்கம் அளித்தனர்.

முதல்வருடன் முதல் சந்திப்பு
இதுதொடர்பாக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் கூறியதாவது;
முதல்வராக விஜய் பதவி ஏற்ற பிறகு நடந்திருக்கும் முதல் சந்திப்பு. தமிழ்நாடு மக்கள் எதிர்நோக்கக் கூடிய முக்கிய கோரிக்கைகள் சம்பந்தமாக வலியுறுத்தி உள்ளோம். வேலையின்மை என்பது முக்கியப் பிரச்சினையாக உள்ளது. புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கக் கூடிய வகையில் ஏற்கெனவே உள்ள காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும். பள்ளி, கல்லூரிகளில் ஆசிரியர் காலி பணியிடங்களால் கல்வித் தரம் பாதிக்கப்படுகிறது. தமிழக பட்ஜெட்டில் மக்கள் புதிய திட்டங்களை எதிர்பார்க்கிறார்கள்.

சிங்கப்பெண் படைக்கு சிறப்பு பயிற்சி
பெண்கள், குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமை தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது. சிங்கப் பெண் படை அமைக்கப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது. ஏற்கெனவே காவல் துறையில் இருந்தவர்கள் தான் பணி மாற்றம் செய்யப்பட்டு உள்ளனர். சிங்கப் பெண் படையில் உள்ளவர்களுக்கு சிறப்பு பயிற்சி தர வேண்டும்.
தொழிலாளர் தொகுப்புச் சட்டங்கள் என்பது மத்திய அரசால் அமல்படுத்தப்பட்டு உள்ளது. ஆனால், அதற்கான விதிகள் தமிழக அரசு சார்பில் இன்னும் உருவாக்கப்படவில்லை. அந்த விதிகளை உருவாக்கும்போது தமிழ்நாட்டில் அனைத்து தொழிற்சங்க தலைவர்களை அழைத்து கலந்து பேசி முடிவெடுக்க வேண்டும். பாஜக உருவாக்கி இருக்கும் தொழிலாளர் நலச் சட்டங்கள், தொழிலாளர்களின் நலன்களுக்கு எதிராக உள்ளது. தொழிலாளர்கள் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும். அதனை எக்காரணம் கொண்டும் அப்படியே அமல்படுத்தக் கூடாது.

ஸ்டாலின் கருத்து ஏற்புடையதல்ல
காவிரி பிரச்சினையில் முதல் தடவை, அரசுக்கும் பல கட்சிகளுக்கும் விவசாய சங்க கூட்டத்துக்கும் மாறுபட்ட கருத்து ஏற்பட்டுள்ளது. முதல்வர் விஜய் தலைமையிலான தோழமைக் கட்சிகள் கூட்டத்திலும், அரசின் விருந்திலும் தான் கலந்து கொள்ளவில்லை. மற்றபடி அரசுக்கான ஆதரவு என்பது தொடரும். தவெக அரசு கவிழும் என்று, மு.க.ஸ்டாலின் சொல்வது ஏற்புடையது அல்ல. அப்படியான சூழல் தமிழகத்தில் இல்லை. நாங்கள் உறுதியான ஆதரவை தெரிவித்து உள்ளோம்.
இவ்வாறு சண்முகம் கூறினார்.