Also Watch
Read this
By: Web Team

ஓணம் பண்டிகை, நாளை 5ஆம் தேதி வெள்ளிக்கிழமையன்று, கோலாகலமாக கொண்டாடப்படவுள்ள நிலையில், தமிழக கல்லூரிகளில் விழாக்கோலம் களை கட்டியது.
மலையாள மொழி பேசும் மக்களின் அண்டை மாநிலமான தமிழ்நாட்டிலும், ஓணம் பண்டிகை கொண்டாட்டங்கள் கோலாகலமாக நடைபெற்றன.
தமிழக கல்வி நிறுவனங்களில், மாணவ, மாணவிகள் கேரள மாநிலத்தின் பாரம்பரிய ஆடை அணிந்து அத்தப்பூ கோலமிட்டும், பாடல்களுக்கு நடனமாடியும் சிறப்பித்தனர்.

தனியார் மகளிர் கல்லூரியில் ஓணம் கொண்டாட்டம்
மணவிளை, கன்னியாகுமரி
கன்னியாகுமரி மாவட்டம், வெள்ளிச்சந்தை அருகே மணவிளை பகுதியில் உள்ள தனியார் மகளிர் பொறியியல் கல்லூரியில் ஓணம் கொண்டாட்டம் சிறப்பாக நடைபெற்றது. மாணவிகள் அனைவரும் கேரள பாரம்பரிய உடையணிந்து பல்வேறு பாடல்களுக்கு நடனமாடி மகிழ்ந்தனர்.

செண்டை மேளம் முழங்க மாணவ, மாணவியர் நடனம்
பழனி, திண்டுக்கல்
திண்டுக்கல் மாவட்டம், பழனி அருகேயுள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்ற ஓணம் கொண்டாட்டத்தில் மகாபலி வேடம் அணிந்து, செண்டை மேளம் முழங்க மாணவ, மாணவியர் ஆடிப்பாடி மகிழ்ந்தனர். கேரளாவில் இருந்து வந்து தமிழகத்தில் தங்கி படிக்கும் மாணவர்கள் தங்கள் நண்பர்களுடன் ஓணம் பண்டிகையை உற்சாகமாக கொண்டாடினர்.

உற்சாகமாக நடனமாடி மாணவ, மாணவிகள் கொண்டாட்டம்
வடபுதுப்பட்டி, தேனி
தேனி அருகே வடபுதுப்பட்டியில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் ஓணம் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டது. கேரள மாநில பாரம்பரிய உடை அணிந்து வந்த மாணவ, மாணவிகள், அத்தப் பூ கோலம் போட்டு, பாடல்களுக்கு ஏற்றவாறு உற்சாகமாக நடனமாடி, கொண்டாடி மகிழ்ந்தனர்.

ஆடிப்பாடி மகிழ்ந்த தனியார் கல்லூரி மாணவிகள்
திருப்பூர்
திருப்பூர் மங்கலம் சாலையில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்ற ஓணம் கொண்டாட்டத்தில் மாணவிகள் கேரளாவின் பாரம்பரிய உடையணிந்து அத்தப்பூ கோலமிட்டு, செண்டை மேளங்களுடன் உற்சாகமாக ஆடிப்பாடி மகிழ்ந்தனர்.

விழாக் கோலம் பூண்டது போல் காட்சியளித்த கல்லூரி
கோவை
கோவையிலுள்ள தனியார் கலை அறிவியல் கல்லூரியில் ஓணம் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டது. சினிமா பாடல்களுக்கு ஏராளமானோர் நடனமாடியதை காணும்போது, கல்லூரி முழுவதுமே விழாக் கோலம் பூண்டது போல் காட்சியளித்தது.