Also Watch
Read this
தமிழ்நாடு பொறுப்பு ஆளுநர் அர்லேகரை, திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி உள்ளிட்டோர் சந்தித்து, தவெக குதிரை பேரம் நடத்தியதாக குற்றம்சாட்டியதோடு, முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனை மிரட்டிய விவகாரத்தில் நடவடிக்கை எடுக்க கோரி மனு அளித்தனர்.
திமுக எம்எல்ஏக்கள் ஆஸ்டின், சீனிவாசனிடம் தவெக குதிரை பேரம் நடத்தியதாக பரபரப்பு குற்றச்சாட்டை முன் வைத்து, தவெக அரசுக்கு எதிராக ஆளுநர் நடவடிக்கை எடுக்காவிட்டால் சட்ட ரீதியாக சந்திப்போம் என ஆர்.எஸ்.பாரதி எச்சரிக்கை விடுத்தார்.
ஆள் பிடிப்பதற்காகவே ஆட்சி நடத்தி வருவதாக தவெக மீது திமுக கடும் விமர்சனத்தை முன் வைத்து, தவெகவில் இணைந்தால் அமைச்சர் பதவி தருவதாக கூறி, ஓ.எஸ்.மணியனிடம் சி.விஜயபாஸ்கர் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் ஆர்.எஸ்.பாரதி குற்றச்சாட்டை முன் வைத்தார்.
தவெக அமைச்சரவை கூட்டத்தில் விஷ்ணு ரெட்டி, ஜான் ஆரோக்கியசாமி பங்கேற்றது தொடர்பாக ஆளுநரிடம் திமுக புகார் மனு அளித்துள்ளது. தவெக ஆட்சியில் அதிகார துஷ்ப்பிரயோகம் நடப்பதாக ஆர்.எஸ்.பாரதி சரமாரி குற்றச்சாட்டுகளை முன் வைத்தார்.

கூர்மையாக கவனித்தார்...
ஆளுநரை சந்தித்த பின்னர் ஆர்.எஸ்.பாரதி கூறியதாவது;
தமிழ்நாட்டில் நடந்து கொண்டிருக்கும் குதிரை பேரம், அதிகார துஷ்பிரயோகம் குறித்து ஆளுநரைச் சந்தித்து விளக்கினோம். ஜான் ஆரோக்கியசாமி, விஷ்ணு ரெட்டி ஆகிய இரண்டு பேர் அமைச்சர்களைவிட அதிகாரம் பெற்றவர்களாக உள்ளனர். அரசின் அனைத்துக் கூட்டங்களிலும் பங்கேற்று அதிகாரிகளுக்கு உத்தரவு போடுகின்றனர். இப்படி ஒரு கேவலமான சூழ்நிலை தமிழகத்தில் ஏற்பட்டுள்ளது. இது குறித்து ஆளுநரிடம் தெரிவித்தோம். அவர் அதை கூர்மையாக கவனித்தார்.

சிரித்துக் கொண்டே...
ஜான் ஆரோக்கியசாமி, விஷ்ணு ரெட்டி ஆகிய இருவர் அமைச்சரவைக் கூட்டங்களில் பங்கேற்பது தவறு என்பதை ஆளுநரே ஒப்புக்கொள்கிறார். 'அப்படியென்றால் அவர்களை அமைச்சராக்கி, அமைச்சரவையில் பங்கேற்க வைக்க வேண்டியதுதானே?' என்று, ஆளுநரே சிரித்துக் கொண்டே சொன்னார். இது தவறு என ஆளுநரே மறைமுகமாக ஒப்புக் கொள்கிறார். கடந்த கால ஆட்சியில் அவதூறு வழக்குகளுக்கு எல்லாம் யாரையும் கைது செய்தது கிடையாது. அதையும் மீறி அனிதா ராதாகிருஷ்ணனை கைது செய்து உள்ளனர். அவர் 7 முறை எம்எல்ஏவாக இருந்தவர். 2 முறை அமைச்சராக இருந்தவர். அவரை 5 மணி நேரம் துன்புறுத்தியுள்ளனர். அத்துடன், தவெகவில் இணைய வற்புறுத்தியுள்ளனர்.

பேரம் பேசுகின்றனர்...
தவெகவில் இணைந்தால், கேட்கும் அமைச்சர் பதவியை தருவதாக திமுகவின் அமைப்பு துணை செயலாளரான ஆஸ்டினிடம் தவெகவினர் கூறி உள்ளனர். ராஜினாமா செய்து விடுங்கள், விஜய் உங்களை பிரச்சாரம் செய்து வெற்றி பெறச் செய்வார் என வற்புறுத்தி உள்ளனர். வேப்பனஹள்ளி தொகுதி திமுக எம்எல்ஏ சீனிவாசனுக்கு ரூ.50 கோடி கொடுப்பதாக பேரம் பேசினர். ‘நீங்கள் இளைஞர். தவெகவுக்கு வாருங்கள். திமுகவை ஒன்றும் இல்லாமல் ஆக்கி விடலாம்’ என தெரிவித்து உள்ளனர்.

விஜயபாஸ்கர் அழைக்கிறார்
விஜயபாஸ்கர் தற்போதுதான் தவெகவில் சேர்ந்தார். அவர் ஓ.எஸ்.மணியனிடம் இங்கு வந்தால் அமைச்சர் பதவி தருவதாக கூறியுள்ளார். ஆள் பிடிக்கவே இந்த ஆட்சி நடக்கிறது. ஆக்கபூர்வமான பணிகளை செய்யவில்லை. இது குறித்து ஆளுநரிடம் கூறி உள்ளோம். அவர் உரிய நடவடிக்கை எடுப்பார்.
இவ்வாறு ஆர்.எஸ்.பாரதி கூறி உள்ளார்.