Also Watch
Read this
பொல்லாத ஆட்சிக்கு பொள்ளாச்சியே சாட்சி என்று சொல்லும் வகையில் ஆட்சி செய்தவர் எடப்பாடி பழனிசாமி என்றும், கால்களை வாரிவிட்டு அரசியலுக்கு வந்த இபிஎஸ், திமுக அரசு மீது பொய், புரட்டை பரப்புகிறார் என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.

ஈரோடு மாவட்டத்தில் மு.க.ஸ்டாலின்
ஈரோட்டில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து திமுக தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் பேசியதாவது;
மீண்டும் திராவிட மாடல் ஆட்சிக்கு தயாரா? இது பெரியார் பிறந்த ஊர் மட்டுமல்ல, அண்ணா, கலைஞர் வாழ்ந்து வளர்ந்த ஊர். பெரியார் இல்லை என்றால் அண்ணா இல்லை, அண்ணா இல்லை என்றால் கலைஞர் இல்லை. கலைஞர் இல்லை என்றால் நாம் எல்லாம் இல்லை.

வீட்டுக்கு ஒருவராவது...
திராவிட மாடல் என்பது வளர்ச்சி மாடல், அனைத்து தரப்பு மக்களுக்கான வளர்ச்சியாக இருக்க திட்டமிட்டோம். அத்திக்கடவு அவிநாசி திட்டத்தை முழுமையாக நிறைவேற்றிக் காட்டிய ஆட்சி திராவிட மாடல் ஆட்சி. திமுக அரசின் திட்டங்களால் பயனடைந்தவர்கள் வீட்டுக்கு ஒருவராவது உள்ளனர். திமுக அரசு கொண்டுவந்த திட்டங்கள் முழுக்க, என்னால் நாள் முழுக்க சொல்லிக் கொண்டிருக்க முடியும்.

பொள்ளாச்சி வழக்கு
86 விழுக்காட்டுக்கு மேலான வழக்குகளில் 60 நாட்களுக்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது திமுக ஆட்சியில் தான். பொள்ளாச்சி வழக்கில் குற்றவாளிகளை மறைத்தவர் எடப்பாடி பழனிசாமி. அதிமுக ஆட்சியில் பெண் எஸ்பிக்கு டிஜிபியே பாலியல் தொல்லை கொடுத்து உள்ளார். தமிழ்நாடு வளர்ச்சியை கண்டு எடப்பாடி பழனிசாமிக்கு வயிற்றெரிச்சல். எடப்பாடி பழனிசாமி பொறாமையில் பேசி வருகிறார். அதிமுகவின் பொல்லாத ஆட்சிக்கு பொள்ளாச்சியே சாட்சி.

சாதனைகளை சொல்ல எதுவுமில்லை
பெண்களின் பாதுகாப்பை பற்றி பேச அருகதை இருக்கிறதா? பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு மரண தண்டனை விதிக்கும் அளவுக்கு சட்டத்தை திருத்தி உள்ளோம். அதிமுக அரசின் சாதனைகளை சொல்ல எடப்பாடி பழனிசாமியிடம் எதுவுமில்லை. மதுரை எய்ம்ஸை தவிர பாஜக சாதனை என்று சொல்ல பிரதமரிடம் ஒன்றும் இல்லை. மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையை ஒவ்வொரு செங்கல், செங்கல்லாக கட்டிக் கொண்டு இருக்கின்றனர். பாஜகவின் கிளை செயலாளராக உள்ள எடப்பாடி பழனிசாமிக்கு தமிழ்நாட்டின் வளர்ச்சி பிடிக்கவில்லை.

மக்கள் தூக்கி எறிவார்கள்
துரோகங்களின் முழு உருவமாக இருப்பதுதான் பழனிசாமியும் அவரது கூட்டாளிகளும். நீட் துரோகம், மெட்ரோ துரோகம் என என்.டி.ஏ.வின் துரோகம் லிஸ்ட் நம்மிடம் உள்ளது. என்டிஏ என்னும் துரோக கூட்டணியை தமிழ்நாட்டு மக்கள், ஏப்ரல் 23ஆம் தேதி நிச்சயம் தூக்கி எறிவார்கள்.
இவ்வாறு பேசி முதல்வர் மு.க.ஸ்டாலின் வாக்கு சேகரித்தார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved