Also Watch
Read this
By: Web Team

மின்சாரத்துறையில் மொத்தமாக ரூ.2.42 ஆயிரம் கோடி கடன் இருப்பதாக சொன்ன அமைச்சர் நிர்மல்குமார், நடப்பாண்டில் மின் கட்டணம் உயர்த்தப்படுமா என்ற விளக்கத்தையும் கொடுத்துள்ளார்.
இன்று மின்சார துறை மீதான வெள்ளை அறிக்கையை வெளியிட்டார் அமைச்சர் நிர்மல்குமார். அப்போது, மின் துறையின் பயன்பாடு, ஊழியர்கள் விவபரம், மின்சார தேவை, மின் உற்பத்தி, மின் துறை சார்ந்த கடன், கட்டண விவரங்களை பட்டியலிட்ட அமைச்சர் நிர்மல் குமார் விளக்கமளித்தார்.

அமைச்சர் வெளியிட்ட வெள்ளை அறிக்கையில், “கடந்த 25 ஆண்டுகளில் ஒரு லட்சத்து 93 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு வருவாய் பற்றாக்குறை உள்ளது. மின்சாரத்துறையின் மொத்த கடன் 2 லட்சத்து 47 ஆயிரம் கோடி ரூபாயாக உள்ளது, புதிதாக எதுவும் செய்யாமல் செலவு மட்டும் அதிகரித்துள்ளது. மின்சாரத் துறையில் 1 லட்சத்து 40 ஆயிரம் பணியாளர்கள் தேவை உள்ளது. ஆனால், தற்போது 74 ஆயிரம் பேர் மட்டுமே உள்ளனர். மேலும் சுமார் 66 ஆயிரம் ஊழியர்கள் தேவை.

கடந்த திமுக ஆட்சியில் புதிதாக 343 ஊழியர்கள் மட்டுமே மின்சாரத் துறையில் பணியில் அமர்த்தப்பட்டு உள்ளனர். கடந்த ஆட்சியில் தேர்வு செய்யப்பட்ட 5 ஆயிரம் கேங்மேன்கள் உள்பட 20 ஆயிரம் பேர் இந்த ஆண்டில் பணியில் அமர்த்தப்படுவார்கள் என்பது உறுதி. தற்போது இந்த ஆட்சியில் ஒரேநாளில் 3 ஆயிரத்து 440 பேருக்கு கேட்ட இடத்திற்கு பணி இட மாறுதல் கொடுத்திருக்கிறோம், அதற்காக கட்சி நிதி இனி இல்லை
மின் வாரிய ஊழியர்களின் பணியிட மாறுதல், பதவி உயர்வு ஆகிய அனைத்தும் நியாயமாக நடைபெறும். அடுத்த ஓராண்டில் மின் துறையில் 49 ஆயிரத்து 532 கோடி ரூபாய் அளவுக்கு செலவு செய்யத் திட்டமிட்டுள்ளோம். புதிய பணியிடங்கள், 352 துணை மின் நிலையங்களுக்கு மட்டும் 25 ஆயிரம் கோடி ரூபாய் செலவு செய்ய மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. அதேநேரம்
ஸ்மார்ட் மின் மீட்டர்கள் பொருத்தும் திட்டம் தொடர்பாக இன்னும் எந்த முடிவும் எடுக்கவில்லை. தொழில்நுட்பம் மாறிக் கொண்டே இருப்பதால் அதற்கேற்றவாறு கொள்கை முடிவு எடுக்கப்படும். இதேநேரம் இந்த ஆண்டு மின் கட்டண உயர்வு இருக்காது. கடன் சுமை மேலும் அதிகரிக்காமல் அரசு பார்த்துக் கொள்ளும் என திட்டவட்டமாக தெரிவித்தார் அமைச்சர் நிர்மல் குமார்.

மேலும், திமுக ஆட்சியில் அனைத்து டெண்டர்களிலும் 30 முதல் 40 சதவீதம் கமிஷன் பெறப்பட்டதாக குற்றம்சாட்டிய அமைச்சர் நிர்மல் குமார் , யாராவது இதற்கு முன்பு மின் துறையில் கமிஷன் கொடுத்ததாக புகார் அளிக்க முன்வந்தால் உடனடியாக வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.