Also Watch
Read this
கர்நாடகாவில், நீண்ட காலம் முதலமைச்சராக பணியாற்றிய சித்தராமையா ராஜினாமா செய்துள்ளார்.
ராஜினாமா ஏன்? - சித்தராமையா விளக்கம்
காங்கிரஸ் மேலிடம் கேட்டுக்கொண்ட 48 மணி நேரத்திற்குள் முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்ததாக சித்தராமையா விளக்கம் அளித்தார். மாநிலங்களவைக்கு செல்ல விரும்பவில்லை என்றும், கடைசி மூச்சு உள்ளவரை கர்நாடக அரசியலில் இருப்பேன் என்றும் உருக்கமுடன் பேசினார். இந்நிலையில், கர்நாடகாவின் புதிய முதலமைச்சராக திங்கள் கிழமை அன்று சிவக்குமார் பதவியேற்கிறார். பதவியை ராஜினாமா செய்த மூத்த காங்கிரஸ் தலைவர் சித்தராமையா காலில் விழுந்து, சிவகுமார் ஆசிபெற்றார்.

காங்கிரஸ் ஆலோசனை
கர்நாடக முதலமைச்சர் மாற்றம் தொடர்பாக, டெல்லியில் மே 26ஆம் தேதி நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், காங்கிரஸ் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, கர்நாடக முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் டி.கே. சிவகுமார், காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இக்கூட்டத்தில் எடுத்த முடிவின்படி, முதல்வர் சித்தராமையா இன்று மே 28ஆம் தேதி தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார்.
சித்தராமையா ராஜினாமா கடிதம்
இன்று பிற்பகல், 3 மணி அளவில் ஆளுனர் மாளிகைக்கு சித்தராமையா வருகை தந்தார். துணை முதல்வர் டி.கே.சிவகுமார், அமைச்சர்கள் பரமேஸ்வரா, பிரயங்க் கார்கே உள்ளிட்டோரும் வந்தனர். அப்போது, ஆளுநர் இல்லாத நிலையில், ஆளுநரின் சிறப்பு செயலாளர் பிரபு ஷங்கரிடம், தனது ராஜினாமா கடிதத்தை சித்தராமையா வழங்கினார்.

தனிப்பெரும்பான்மை உள்ளது
இதுகுறித்து சித்தராமையா கூறியதாவது;
எனது கடிதத்தை ஆளுநர் அலுவலகத்தில் சமர்ப்பித்து உள்ளேன். ஆளுநர் தற்போது இங்கு இல்லை. இன்று இரவு அவர் வர உள்ளார். ஆளுநர் அலுவலகத்தில் எனது ராஜினாமா கடிதத்தை கொடுத்தேன். எனது ராஜினாமாவை ஆளுநர் ஏற்றுக் கொள்வார் என்ற நம்பிக்கை உள்ளது. ஏனெனில், இது அரசியல் சாசனத்துக்கு உட்பட்ட நடவடிக்கை தான். சட்டப்பேரவையில் எங்கள் கட்சிக்கு தனிப்பெரும்பான்மை உள்ளது. எனவே, புதிய சட்டமன்றக் குழு தலைவர் ஆட்சி அமைக்க அனுமதிக்கப்பட வேண்டும்.
வாக்கை காப்பாற்றி விட்டேன்
எனது பதவியை ராஜினமா செய்ய வேண்டும் என்று கட்சி மேலிடம் ஏற்கெனவே என்னிடம் கேட்டுக்கொண்டது. நானும் அதற்கு ஒப்புக்கொண்டேன். தற்போது, வாக்கை காப்பாற்றிவிட்டேன். கர்நாடகாவுக்கு சேவை செய்ய கட்சி எனக்கு இரண்டு முறை வாய்ப்பு வழங்கியது. அதற்காக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி, மல்லிகார்ஜுன கார்கே ஆகியோருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு சித்தராமையா கூறினார்.

முதலமைச்சர் பதவிக்கு கடும் போட்டி
கர்நாடகாவில் கடந்த 2023ஆம் ஆண்டு நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி வென்றதை தொடர்ந்து, முதலமைச்சர் பதவிக்கு கடும் போட்டி நிலவியது.
மூத்த தலைவர் சித்தராமையா, டி.கே.சிவகுமார், ஜி.பரமேஷ்வர் ஆகிய மூவருக்கும் இடையே கடும் போட்டி ஏற்பட்டது. நீண்ட இழுபறிக்கு பின்னர் சித்தராமையாவுக்கு முதல்வர் பதவியும், டி.கே.சிவகுமாருக்கு துணை முதல்வர் பதவியும் தரப்பட்டது. அப்போது இருவருக்கும் தலா இரண்டரை ஆண்டுகள் முதலமைச்சர் பதவி வழங்க காங். மேலிடம் ஒப்புக்கொண்டதாக கூறப்படுகிறது.

காங். மேலிடம் உத்தரவு
சித்தராமையா முதல்வராக பொறுப்பேற்று 3 ஆண்டுகள் ஆன நிலையில், டி.கே.சிவகுமாருக்கு முதல்வர் பதவியை வழங்க வேண்டும் என அவரது ஆதரவாளர்கள் போர்க்கொடி தூக்கினர். இதையடுத்து டெல்லி மேலிடத்தில் ஆலோசனை கூட்டம் நடந்தது. அப்போது மேலிடத் தலைவர்கள், சித்தராமையாவை முதல்வர் பதவியில் இருந்து விலகுமாறு கூறினர். மேலும், மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிட்டு, தேசிய அரசியலில் கவனம் செலுத்துமாறு அவர்கள் வலியுறுத்தியதாகவும் கூறப்படுகிறது.