Also Watch
Read this

மத்திய பிரதேசத்தில், ரீல்ஸ் மோகத்தில், தன்னிடம் உள்ள நகைகள், பணத்தை வீடியோவாக பதிவிட்ட பெண் யூ-டியூபருக்கு ஏற்பட்ட இழப்பு பேசு பொருளாகி உள்ளது. நோட்டம் விட்டு வீடு புகுந்து மொத்தமாக கொள்ளையர்கள் அள்ளிச் சென்றது, அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது.
லைக் லைக் லைக்
இன்றைய டிஜிட்டல் உலகத்தில் 'லைக்' அள்ள, பலரும் எதையும் செய்யத் துணிந்து விட்டனர். ஆனால், இப்படிப்பட்டவர்கள் பகிரும் ஒரு சிறிய வீடியோ, வாழ்நாள் சேமிப்பையே அள்ளிச் சென்று விடும் என்று நினைத்துப் பார்க்க முடியுமா?

மத்தியப் பிரதேச மாநிலம், சிவபுரி மாவட்டத்தில் இப்படியொரு அதிர்ச்சி சம்பவம் அரங்கேறி உள்ளது. பகட்டுக்காக தன்னிடம் இருந்த தங்கம், வெள்ளி நகைகளை ரீல்ஸ் வீடியோவில், ஒரு பெண் காட்டிய நிலையில் அவரது தங்க நகைகளை தங்களுக்கு சொந்தமாக்கிக் கொண்ட மர்ம நபர்கள், திட்டமிட்டு கொள்ளை அடித்து உள்ளனர்.

ரீல்ஸ் பதிவிடுவதில் மோகம்
சிவபுரி மாவட்டம், மோகினி கிராமத்தைச் சேர்ந்தவர் ரச்சனா குர்ஜார். இவருக்குச் சமூக வலைதளங்களில் 'ரீல்ஸ்' செய்வது என்றால் அலாதி பிரியம். கையில் கட்டுக்கட்டாக பணம், கழுத்து நிறைய தங்கம், ஜொலி ஜொலிக்கும் வெள்ளி நகைகள் என்று, தமது ஆடம்பர வாழ்க்கையை வீடியோவாகப் பதிவிட்டு வந்து உள்ளார். அந்த வீடியோக்கள் அவருக்குப் பாராட்டுகளைப் பெற்றுத் தந்ததோ இல்லையோ? லைக்குகளை அள்ளித் தந்ததோ இல்லையோ? கொள்ளையருக்கு சரியான 'ரூட் மேப்' போட்டு கொடுத்து உள்ளது.

ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த போது...
கிராமமே தூங்கிக் கொண்டிருந்த வேளையில், கனக் கச்சிதமான திட்டத்தோடு ரக்சனா வீட்டிற்குள் நுழைந்தது ஒரு கொள்ளைக் கும்பல். முதலில் வீட்டின் வெளியே இருந்த மின் கம்பிகளைத் துண்டித்தனர். பின்னர், ஒரு ஏணியைப் பயன்படுத்தி லாவகமாகச் சுவர் ஏறி குதித்தனர். வீட்டிற்குள் நுழைந்ததும் கொள்ளையர் காட்டிய வேகம் அதிர வைத்து உள்ளது. தங்கள் முகம் பதிவாகிவிடக் கூடாது என்பதற்காக, சிசிடிவி கேமராவை மேல்நோக்கித் திருப்பி விட்டுள்ளனர். ஆனாலும், அதிர்ஷ்டவசமாக கேமரா முழுமையாகத் திரும்பாததால், கொள்ளையரின் சில நடமாட்டம், பதிவானது.

பதிவிட்ட வீடியோக்களே...
இந்த கொள்ளையர், நேராக நகைகள் இருக்கும் அலமாரிக்குச் சென்று, அதன் பூட்டை உடைத்து லட்சக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள தங்கம் மற்றும் ரொக்கப் பணத்தைச் அள்ளிக் கொண்டு மின்னல் வேகத்தில் தப்பி உள்ளனர்.

கொள்ளையருக்கு வீட்டின் உட்புற அமைப்பு அத்தனை தெளிவாகத் தெரிந்திருப்பது, போலீசாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. ரச்சனா வெளியிட்ட வீடியோக்களே கொள்ளையருக்கு துப்பு கொடுத்திருக்கலாம் என கிராம மக்கள் கூறுகின்றனர். தற்போது, சிசிடிவி காட்சிகளை வைத்து கொள்ளையரை, போலீசார் வலைவீசித் தேடி வருகின்றனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved