Also Watch
Read this
பிரபல நடிகை தயாரிப்பாளர் மீது கூறிய புகார், அவருக்கே சிக்கலை ஏற்படுத்தி உள்ளது.

சின்னத்திரை பிரபலம்
மகாராஷ்டிரா மாநிலம் மும்பையை சேர்ந்தவர் ஷில்பா ஷிண்டே. நடிப்பின் மீது இவருக்கு இருந்த ஆர்வத்தால் 1999ஆம் ஆண்டு சின்னத்திரையில் நடிக்க ஆரம்பித்தார். ஏராளமான இந்தி சீரியல்களில் நடித்த இவருக்கு பெரிய அளவில் கை கொடுத்தது 'பாபிஜி கர் பர் ஹைன்' தான். இந்த சீரியல் மூலம் ஷில்பா ஷிண்டே, பட்டி தொட்டி எங்கும் பிரபலமானார். இந்த சீரியலை பினைஃபர் கோலியும் அவரது கணவர் சஞ்சய் கோலியும் தயாரித்தனர். ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வந்த 'பாபிஜி கர் பர் ஹைன்' சீரியலில், திடீரென ஷில்பா ஷிண்டேவுக்கும் தயாரிப்பாளர்களுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது.

கருத்து வேறுபாடு, குற்றச்சாட்டு
இந்த கருத்து வேறுபாட்டால், தயாரிப்பு நிறுவனம் ஷில்பா ஷிண்டேவை ஒரு பிரத்தியேக ஒப்பந்தத்தில் கையெழுத்திட சொன்னதாகவும் அதன் மூலம் தனது சம்பள உயர்வை தடுத்து, அவர்களின் கட்டுப்பாட்டிற்குள் வைத்துக் கொள்ள முயற்சி செய்கின்றனர் என்றும் ஷில்பா ஷிண்டே குற்றம் சாட்டினார். ஆனால், இதற்கு தயாரிப்பு நிறுவனம் சார்பில், "ஷில்பா ஷிண்டே ஒழுங்கீனமாக நடந்து கொள்கிறார், முறையாக சொல்லாமல் படப்பிடிப்புக்கு வராமல் விடுப்பு எடுக்கிறார், இதனால் நஷ்டத்தை ஏற்படுத்துகிறார்" என்று ஷில்பா ஷிண்டேவுக்கு சட்டப்பூர்வ நோட்டீஸ் அனுப்பியது.

நீதிமன்றம் சென்ற விவகாரம்
இப்படியே தொடர்ந்த இந்த கருத்து வேறுபாடு ஒரு கட்டத்தில் அதிகமானதால், 2016ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் இந்த சீரியலில் இருந்து விலகினார் ஷில்பா ஷிண்டே. சரி அவ்வளவு தான், கருத்து வேறுபாடு முடிந்தது என நினைத்த நிலையில், "தயாரிப்பாளர் சஞ்சய் கோலி பாலியல் ரீதியாக தவறாக நடந்து கொண்டார்" என்று 2017ஆம் ஆண்டு, மும்பை காவல் நிலையத்தில் புகார் அளித்தார் ஷில்பா ஷிண்டே. இந்த புகார் வழக்காக மாறியது. ஆனாலும் இந்த விவகாரம் நீதிமன்றத்திற்கு வெளியே ஒரு சுமூகமான ஒப்பந்தம் மூலம் முடிவுக்கு வந்ததது. இதன்படி, தயாரிப்பு நிறுவனம் ஷில்பா ஷிண்டேவுக்கு வழங்க வேண்டிய 3 மாத சம்பள பாக்கியையும் இதர நிலுவை தொகையும் வழங்கியது. இதனால், ஷில்பா ஷிண்டேவும் தனது வழக்கை திரும்ப பெற்றார்.

மவுனம் கலைத்த நடிகை
இதன்பின், நீண்டகாலம் அமைதியாக இருந்த ஷில்பா ஷிண்டே சமீபத்தில் podcast நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசினார். அப்போது, "10 ஆண்டுக்கு முன் 'பாபிஜி கர் பர் ஹைன்' சீரியல் தயாரிப்பாளர் சஞ்சய் கோலி மீது தான் சுமத்திய பாலியல் புகார், பொய் தான் என்று அந்த podcast நிகழ்ச்சியில் பேசினார். மேலும், "அந்த நேரத்தில் தயாரிப்பாளர்கள் என்னை சுற்றி வளைத்து திரையுலகில் யாரும் தனக்கு வேலை தராத மாதிரி திட்டமிட்டனர். இதற்காக, காவல் நிலையத்தை அணுகிய போது, போலீசார் என்னிடம் எப்.ஐ.ஆரில், குற்றம் ஸ்ட்ராங்-ஆ இருக்க வேண்டும் என கூறினார்கள். இதனால் தான் தயாரிப்பாளர் சஞ்சய் கோலி மீது பாலியல் குற்றம் சாட்டிருந்தேன் என்றும் என்னோட சம்பளத்தை அவர்களிடமிருந்து நான் திரும்ப பெறவே இவ்வாறு வேறு வழியின்றி செய்தேன் என்றும் கூறினார்.

ஷில்பா மீது புகார்
இந்நிலையில், "பெண்களுக்கான சட்டத்தை ஷில்பா ஷிண்டே தவறாக பயன்படுத்தி விட்டார்" என்று பலரும் தங்களது ஆதங்க கருத்துக்களை பதிவிட்டு வந்தனர். மேலும், ஆண்கள் உரிமைக்கான தொண்டு நிறுவனம் ஒன்று, இப்படி பொய் புகார் கூறிய ஷில்பா ஷிண்டே மீது நடவடிக்கை எடுக்க கோரி, மும்பை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

வீடியோ வெளியிட்ட ஷில்பா
இவ்வாறு பல்வேறு கண்டனத்தை பெற்ற ஷில்பா ஷிண்டே, தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் இதுகுறித்து ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். அதில், "பணம் கொடுத்து என் மீது ஒரு PR TEAM அவதூறுகளை பரப்புகிறார்கள், நான் பணத்திருக்காக அந்த பொய் வழக்கை போடவில்லை. அந்த சமயத்தில் ஒட்டுமொத்த திரையுலகமும் என்னை ஒதுக்கியது. இதனால் விபரீத முடிவு எடுக்கும் அளவுக்கு யோசித்தேன். அதனால் தான் அந்த பொய் சொல்லும் நிலை ஏற்பட்டது. ஆனால் இத்தனை ஆண்டுகள் அந்த பொய் என் மனதை உறுத்தியதால் நானாகவே அந்த podcast நிகழ்ச்சியில் உண்மையை பேசினேன்," என்று கூறியுள்ளார்.