Also Watch
Read this
ஈரானுக்கும் அமெரிக்காவிற்கும் இடையேயான போர், எதிர்பாராத ஒரு களத்திற்கு விரிவடைந்துள்ளது. அதன் பெயர் காஸ்பியன் கடல்.
காஸ்பியன் கடல் வழி குறிவைக்கப்படுவது ஏன்?
உலகின் மிகப்பெரிய உள்நாட்டு நீர்நிலையான காஸ்பியனில் ராணுவ சரக்குகளை ஏற்றிச் சென்ற இரண்டு ரஷ்ய கப்பல்களை ட்ரோன்கள் மூலம் தாக்கியதாக உக்ரைன் கடந்த வார இறுதியில் கூறியது. உக்ரைனின் ஆபத்தான சாகசவாதத்திற்கு நிச்சயமாக பதிலடி கொடுக்கப்படும் என்று ஈரான் எச்சரித்தது. ஈரானுக்கும் ரஷ்யாவிற்கும் இடையிலான வளர்ந்து வரும் ராணுவ, பொருளாதார உறவில் ஒரு முக்கியமான ரத்த நாளம் போல உள்ள காஸ்பியன் கடல் வழி குறிவைக்கப்படுவது ஏன்? உக்ரைனும் ஈரான்-அமெரிக்க போருக்குள் இழுக்கப்படுகிறதா? டிரம்ப்-ஜெலன்ஸ்கி சந்திப்பு அதை உறுதிப்படுத்துகிறதா?

இரு துறைமுகங்களுக்கு இடையில்...
ரஷ்யாவில் இருந்து காஸ்பியன் கடல்வழியில் தானியங்கள் மற்றும் எஃகு உள்ளிட்ட சரக்குகள் ஈரானுக்கு கொண்டு செல்லப்படுகின்றன. இதற்காக ஈரான் பல குறிப்பிடத்தக்க துறைமுகங்களை உருவாக்கியுள்ளது, அவற்றில் அன்சாலி என்ற துறைமுகமும் ஒன்று. பெயர் குறிப்பிடப்படாத கப்பல் ஒன்று, ரஷ்ய துறைமுகமான அஸ்ட்ராகானில் (Astrakhan) இருந்து ஈரானில் உள்ள அன்சாலிக்கு (Anzali) பயணித்தது. இரு துறைமுகங்களுக்கும் இடையிலான வணிக பரிமாற்றங்களுக்கான பாதுகாப்பான மற்றும் நம்பகமான வழித்தடம் என்று ஈரான் வர்ணிக்கும் வழியில் அந்த கப்பல் சென்று கொண்டிருந்தது.
பதிலடி தரப்படும்...

5 நாடுகளுக்கு மத்தியில்...
ஈரான், ரஷ்யா, அஜர்பைஜான், கஜகஸ்தான், துர்க்மேனிஸ்தான் (Azerbaijan, Iran, Kazakhstan, Russia, Turkmenistan) ஆகிய ஐந்து நாடுகளின் நிலப் பரப்புக்கு நடுவே காஸ்பியன் கடல் அமைந்துள்ளது. பெரும் பரப்பளவில் அமைந்துள்ளதாலும் உப்புநீர் காரணமாகவும் கடல் எனக் குறிப்பிடப்பட்டாலும் உண்மையில் இது உலகின் மிகப்பெரிய ஏரி ஆகும். 5 நாடுகளின் எல்லையாக இருப்பதால் காஸ்பியன் கடலின் முக்கியத்துவம் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. பாரசீக வளைகுடா மற்றும் ஓமன் வளைகுடா முற்றுகைக்கு ஆளாகி இருப்பதால், காஸ்பியன் ஒரு வர்த்தக பாதையாக புதிய வடிவத்தை எடுத்துள்ளதால் அதன் முக்கியத்துவம் மேலும் அதிகரித்துள்ளது.
ஈரானுக்கு தேவை
சீனாவுடன் ரயில் தடங்கள் வழியாகவும், மத்திய ஆசியா, கருங்கடலுக்கும் காஸ்பியன் கடலுக்கும் இடையே உள்ள அல்லது மேற்காசியாவுக்கும் கிழக்கு ஐரோப்பாவுக்கும் இடையே உள்ள காகசஸ் பகுதி, கிழக்கு ஐரோப்பா மற்றும் ரஷ்யாவுடன் வர்த்தகத்தை ஊக்குவிப்பதற்கு காஸ்பியன் கடல் வழி ஈரானுக்கு முக்கியம். வர்த்தக உத்திகளை பன்முகத்தன்மையோடு அமைத்துக் கொள்வதற்கு காஸ்பியன் கடல் வழி ஈரானுக்கு அவசியத் தேவை. பாரசீக வளைகுடாவும், ஓமான் வளைகுடாவும் ஈரானுக்கு தென்பகுதி நீர்வழிகள். எனவே வடபகுதியை அணுகுவதற்கு காஸ்பியன் கடல்வழி தேவை. இது ஈரானின் வர்த்தக உத்திகளை முழுமைப்படுத்துகிறது.

ரஷ்யாவுக்கும் முக்கியம்...
ரஷ்யாவைப் பொறுத்தவரை, காஸ்பியன் என்பது மத்திய ஆசியா மற்றும் ஈரானுக்கு ஒரு முக்கியமான வழியாகும். ஈரானின் மின்சார தயாரிப்புக்கான அணுசக்தி திட்டத்தில் ரஷ்யாவுக்கு முக்கிய பங்கு உள்ளது. இதேபோல ஈரானில் எண்ணெய் அகழ்வுப் பணியிலும் ரஷ்யா ஈடுபடுகிறது. ஈரானுடனான கூட்டு விரிவடைந்து வரும் நிலையில் வியூக அடிப்படையில் ரஷ்யாவுக்கும் காஸ்பியன் கடல்வழி ஒரு முக்கியமான பாதையாகும்.
பாதுகாப்பு, வியூக முக்கியத்துவம்
ஈரானும் ரஷ்யாவும் பொருளாதார மற்றும் ராணுவ ஒத்துழைப்பை உள்ளடக்கிய ஒரு பரந்த ஸ்டிரேட்டஜிக் ஒப்பந்தத்தைக் கொண்டுள்ளன. இது பரஸ்பர பாதுகாப்பு ஒப்பந்தம் அல்ல. இருப்பினும் உக்ரைனுடனான போரின் ஆரம்பத்தில் காஸ்பியன் வழியாக ஈரானிய ஷாஹேத் ட்ரோன்கள் அனுப்பப்பட்டன. பின்னர் ரஷ்ய மண்ணில் உள்ள தொழி்ற்சாலைகளில் அந்த ட்ரோன்கள் தயாரிக்கப்பட்டன. மாஸ்கோவிற்கும் தெஹ்ரானுக்கும் இடையில் வளர்ந்து வரும் ராணுவ தொடர்புகளுக்கான பாதையாக காஸ்பியன் மாறியுள்ளது. மேற்கத்திய நாடுகளின் கடற்படை அணுக முடியாத வகையில், நிலப்பரப்பால் சூழப்பட்டு ஈரான், ரஷ்யா மற்றும் அவற்றின் அண்டை நாடுகளால் கட்டுப்படுத்தப்படும் காஸ்பியன் கடல் வழி, சர்வதேச பொருளாதாரத் தடைகளால் பாதிக்கப்படுவதில்லை. எனவே காஸ்பியன் கடல் வழியைச் சார்ந்து, ஈரானுக்கும் ரஷ்யாவுக்கும் பாதுகாப்பு மற்றும் வியூக முக்கியத்துவமும் உள்ளது.

அமெரிக்கா சொன்னது?
ஈரானின் வடக்கு துறைமுகங்களை ரஷ்ய துறைமுகமான அஸ்ட்ராகானுடன் இணைக்கும் காஸ்பியன் பாதை இதற்கு முன்பு உக்ரைனால் குறி வைக்கப்பட்டுள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதம் ஷாஹேத் -136 (Shahed-136) ட்ரோன்களுக்கான உதிரி பாகங்கள் மற்றும் ஈரானிய வெடிமருந்துகள் ஏற்றப்பட்டதாகக் கூறப்படும் ஒரு சரக்குக் கப்பல் (Port Olya 4) உக்ரைன் ட்ரோன்களால் தாக்கி அழிக்கப்பட்டது. இந்த வகை கப்பலில், 2024 ஆம் ஆண்டில், ஈரானிய பாலிஸ்டிக் ஏவுகணைகளை மாஸ்கோவுக்கு கொண்டு செல்லப்பட்டதாக குற்றம்சாட்டப்பட்டது. இந்த ஏவுகணைகள் உக்ரைனுக்கு எதிராக பயன்படுத்தப்படும் என்று அமெரிக்கா அப்போது கூறியது.
ராணுவ ஒத்துழைப்பு...
ஈரானுக்கும் ரஷ்யாவுக்கும் இடையிலான ஆழமான ராணுவ ஒத்துழைப்பு குறித்து அமெரிக்க தேசிய பாதுகாப்பு கவுன்சில் வெளிப்படையாகவே எச்சரித்தது. ஆனால் ரஷ்யாவுக்கு ராணுவ உதவிகளை வழங்கவில்லை என்று அப்போது ஈரான் மறுத்தது. வட கொரியாவைப் போலவே ஈரானும் ரஷ்யாவுக்கு ஆயுதங்களை வழங்குகிறது என்பது வெளிப்படையான உண்மை. இந்த பின்னணியில், கடந்த வார இறுதியில் காஸ்பியனில் கப்பல்கள் மற்றும் எரிசக்தி உள்கட்டமைப்பு மீதான உக்ரைனின் ட்ரோன் தாக்குதல்கள் நடைபெற்றன.

ரஷ்யா, உக்ரைன் மோதலுடன்...
இதுமட்டுமல்லாமல், மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்க படைத் தளங்கள் மீது தாக்குதல்களை நடத்த ஈரானுக்கு செயற்கைக்கோள் தரவுகளை ரஷ்யா வழங்கி வருகிறது என்றும் உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி குற்றம் சாட்டியுள்ளார். ஆனால், காஸ்பியன் கடலில் ஈரானிய வணிகக் கப்பல் மீது உக்ரைன் சனிக்கிழமை தாக்குதலைத் தொடங்கியது. இந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கப்படும் என ஈரான் எச்சரித்துள்ளது. அதாவது மத்திய கிழக்கு போர் ரஷ்யா-உக்ரைன் மோதலுடன் ஒன்றுகலக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

டிரம்ப், ஜெலென்ஸ்கி பேச்சு
இதற்கு வலு சேர்க்கும் வகையில், அமெரிக்க அதிபர் டிரம்ப்பை உக்ரேனிய அதிபர் ஜெலென்ஸ்கி சந்தித்து பேசியுள்ளார். சந்திப்பு "மிகச் சிறப்பாக நடந்தது" என்று டிரம்ப் ட்ரூத் சோஷியல் தளத்தில் தெரிவித்துள்ளார். உக்ரைனுக்கு ராணுவ உதவி குறித்து அதிகாரப்பூர்வ அமெரிக்கா உறுதிப்படுத்தவில்லை என்றாலும், பேட்ரியாட் ஏவுகணைகளின் உள்நாட்டு உற்பத்திக்கான உரிமங்களை வழங்க டிரம்ப் ஒப்புக் கொண்டதாக ஜெலென்ஸ்கி பின்னர் கூறினார்.

அமெரிக்காவின் நரித்தனம்?
ரஷ்யாவின் ட்ரோன் மற்றும் பாலிஸ்டிக் ஏவுகணை தாக்குதல்களில் இருந்து உக்ரேனிய நகரங்களைப் பாதுகாக்க பேட்ரியாட் அவசியம். பேட்ரியாட் இடைமறிப்பு ஏவுகணைகள் இன்றி, பாலிஸ்டிக் ஏவுகணைகளை இடைமறிக்கக்கூடிய வான் பாதுகாப்பு சாத்தியமில்லை. எனவே, நீண்ட காலமாக அமெரிக்காவின் பேட்ரியாட் இடைமறிப்பு ஏவுகணைகளை தருமாறு உக்ரைன் கேட்டு வருகிறது. அவற்றை அமெரிக்கா வழங்குவது மத்திய கிழக்கு போரை, உக்ரைன்-ரஷ்யா போருடன் கோர்த்து விடுவது என்ற அமெரிக்காவின் நரித்தனத்தை சந்தேகத்திற்கிடமில்லாமல் வெளிப்படுத்துவதாகும்.