ஆட்சியில் பங்கும், தேர்தலில் போட்டியிட கூடுதல் தொகுதிகளும் வேண்டும் என, மதுரையில் எம்.பி. மாணிக்கம் தாகூர் தலைமையில் நடந்த காங்கிரஸ் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றியது குறித்து தனக்கு எதுவுமே தெரியாது என, அக்கட்சி தலைவரான செல்வப்பெருந்தகையே கையை விரித்திருப்பது, அவரது தலைமை பண்பை கேள்விக்குள்ளாக்கியுள்ளது. திமுக - காங்கிரஸ் கூட்டணியை கட்டி காப்பாற்ற தலைகீழாக நிற்காத குறையாக போராடி வரும் செல்வப்பெருந்தகைக்கு கட்சிக்குள்ளேயே எதிர்ப்பு கிளம்பியிருப்பதாக கூறப்படுகிறது. இது குறித்து விவரிக்கிறது இந்த செய்தித் தொகுப்பு. ஆட்சியில் பங்கு வேண்டும் - தீர்மானம் திமுக - காங்கிரஸ் கூட்டணி விவகாரத்தில் நாளுக்கு நாள் புகைச்சல் தீவிரமாகி வருகிறது. இந்த நிலையில், மதுரை தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டம், திருப்பரங்குன்றத்தில் எம்.பி., மாணிக்கம் தாகூர் தலைமையில் நடைபெற்றது. இதில் ஆட்சியில் பங்கு வேண்டும் என கேட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல், கூட்டத்தில் பேசிய MP மாணிக்கம் தாகூர், பாஜகவை உண்மையிலேயே எதிர்க்கும் திராணி தங்களுக்கு மட்டும் தான் இருக்கிறது எனவும், காங்கிரஸை மரியாதை குறைவாக நடத்தினால் திருப்பி பதிலடி கொடுப்போம் எனவும், திமுகவுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் பேசியிருந்தார்.தனக்கு எதுவுமே தெரியாதுஇந்த நிலையில், சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, மதுரையில் நடந்த கூட்டம் குறித்து தனக்கு எதுவுமே தெரியாது என கூறியது, காங்கிரஸ் கட்சியில் என்ன தான் நடக்கிறது என்ற கேள்வியை எழுப்பியுள்ளது. கட்சியின் மாநில தலைவருக்கு தெரியாமலேயே கூட்டம் நடத்திய எம்.பி., மாணிக்கம் தாகூரை செல்வப்பெருந்தகை கண்டிக்காமல் கூட கடந்து சென்றதும் யோசிக்க வைத்துள்ளது.திமுகவுடன் அளவு கடந்து நெருக்கம்கடந்த 2024ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவராக செல்வபெருந்தகை நியமிக்கப்பட்டார். அப்போதில் இருந்தே செல்வபெருந்தகைக்கு எதிரான கோஷ்டி, காங்கிரஸ் கட்சியில் தலையெடுக்க தொடங்கியது. காங்கிரஸ் கட்சியை வளர்க்க, வாக்கு சதவீதத்தை உயர்த்த பெரிய அளவில் எந்த நடவடிக்கைகளும் எடுக்கவில்லை என செல்வபெருந்தகை மீது விமர்சனமும் எழுந்தது. தலைவர் பொறுப்புக்கு வந்த சில நாட்களிலேயே செல்வபெருந்தகைக்கு எதிராக டெல்லி தலைமைக்கு புகார் கடிதங்களும் பறந்தன. சொந்த கட்சியை தாண்டி, கூட்டணி தலைமையான திமுகவுடன் நெருக்கம் காட்டுவதிலேயே செல்வபெருந்தகை குறியாக இருப்பதாக சத்தியமூர்த்தி பவன் பக்கம் முணுமுணுப்புகளும் எழ தொடங்கின. இந்த நிலையில் தான், திமுக - காங்கிரஸ் இடையேயான கூட்டணி விவகாரமும் கை மீறி போய் கொண்டிருக்கிறது. திமுகவுடன் அளவு கடந்து செல்வபெருந்தகை காட்டிய நெருக்கம்தான், அவருக்கு எதிராக டெல்லி தலைமை மாறியதற்கு காரணம் என சொல்லப்படுகிறது.செல்வபெருந்தகையின் தலைமையை மீறி...கூட்டணி, தொகுதி பங்கீடு விஷயத்தில் செல்வபெருந்தகை செயல்பாடுகளை கவனித்த டெல்லி தலைமை, வேறொரு ரூட்டில் கையாண்டு வரும் நிலையில், செல்வபெருந்தகையின் தலைமையை மீறி தமிழக காங்கிரஸ் இயங்கி கொண்டிருக்கிறது. செல்வபெருந்தகைக்கு தமிழக காங்கிரஸிலும், டெல்லி மேலிடத்திலும் செல்வாக்கு இல்லாமல் போயிருக்கிறது என்பதையே மீண்டும் மீண்டும் கூட்டணி குழப்பங்கள் சுட்டிக்காட்டும் உண்மையாக இருக்கிறது. செல்வபெருந்தகைக்கு அதிகாரம் கிடைக்குமா? இதனிடையே, அவசர அவசரமாக பெங்களூருவுக்கு சென்ற செல்வபெருந்தகை, அங்கு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூனே கார்கேவை சந்தித்து பேசி, மாணிக்கம் தாகூர் மீது புகார் கடிதம் கொடுத்திருப்பதாக சொல்லப்படுகிறது. கார்கேவின் ஆசீர்வாதத்தில் தான் செல்வபெருந்தகைக்கு, தமிழக காங்கிரஸ் தலைவர் பதவி கிடைத்தது என்ற நிலையில், கார்கேவின் உத்தரவால் செல்வபெருந்தகைக்கு அதிகாரம் கிடைக்குமா? ஒப்புக்கு ஒரு தலைவர் என காலத்தை ஓட்ட வேண்டியது வருமா? என்பது போக போக தான் தெரியும். Related Link திமுக ''கை'' கழுவுமா? காங். ''கை'' நழுவுமா?