Also Watch
Read this
By: Web Team

இந்திய பொருட்கள் மீது ஏற்கனவே உள்ள 25 சதவீத இறக்குமதி வரியுடன், அமெரிக்கா கூடுதலாக விதித்த 25 சதவீத வரிவிதிப்பு அமலாகிறது.
அமெரிக்க அதிபர் டிரம்ப் விதித்த அதீத வரிவிதிப்பு இன்று நள்ளிரவு 12:01 மணி முதல் நடைமுறைக்கு வரும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதாவது, இந்த 50 சதவீத வரி உயர்வு, ஆகஸ்ட் 27, 2025 அன்று இரவு 12:01 மணிக்கு அமெரிக்காவுக்குள் நுழையும் அல்லது கிடங்கிலிருந்து வர்த்தகத்திற்கு வெளியேற்றப்படும் இந்தியப் பொருட்களுக்கு பொருந்தும் என்று அமெரிக்கா தனது அறிவிப்பில் தெரிவித்துள்ளது.
டொனால்டு டிரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசு, இந்தியா மீது விதித்திருந்த 25 சதவீத ரெசிப்ரோக்கல் (Reciprocal) வரி மற்றும் ரஷ்ய கச்சா எண்ணெய் வாங்குவதற்காக விதிக்கப்பட்ட 25 சதவீத அபராத வரியை கடைசி நேரத்தில் ரத்து செய்யும் என எதிர்பார்க்கப்பட்டது.
இல்லையெனில், சீனாவுக்கு கொடுத்த கால அவகாசம் போல் 90 நாட்கள் தற்காலிக நிவாரணம் அளிக்கும் என்றும் எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், தற்போது அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது டிரம்ப் நிர்வாகம்.
ரஷ்யா, உக்ரைன் இடையிலான போரை முடிவுக்குக் கொண்டு வரும் அமெரிக்காவின் அமைதிப் பேச்சுவார்த்தை தடைபட்டிருப்பதால், இந்தியா மீதான வரி விதிப்பை அமெரிக்கா தொடர முடிவு செய்துள்ளது.
ரஷ்யாவின் எண்ணெய் வர்த்தகத்தை கட்டுப்படுத்துவதன் மூலம் உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவரலாம் என அமெரிக்கா நினைக்கிறது.
இதனாலேயே ரஷ்ய எண்ணெய் வாங்கும் இந்தியா மீது கூடுதலாக 25 சதவீத வரி விதிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்கா வெளியிட்ட அறிவிப்பில், கார், வாகனம், ஆட்டோமொபைல் உதிரிபாகம், பார்மா, அலுமினியம், இரும்பு பொருட்கள், காப்பர் பொருட்களுக்கு இந்த 50 சதவீத வரி விதிப்பில் இருத்து விலக்கு அளிக்கப்பட்டு உள்ளதாக அறிவித்துள்ளது.

இந்திய அரசின் கண்டனம்
இந்திய அரசு இந்த 50 சதவீத உயர்வை அநியாயமானது எனக் கண்டித்துள்ளது. இந்த விவகாரத்தை வெறும் கச்சா எண்ணெய் சர்ச்சையாக காட்டுவது தவறு என வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். சீனா, ஐரோப்பிய நாடுகளுக்கு அமெரிக்கா வரி விதிக்காத நிலையில் இந்தியா மீது மட்டும் விமர்சனமும், வரியும் முன்வைக்கப்படுகிறது என்றும் அவர் கூறியுள்ளார்.
பிரதமர் மோடி அதிரடி

இந்நிலையில், பிரதமர் மோடி, இந்தியாவின் விவசாயிகள் மற்றும் சிறு தொழில்களின் நலன்களை எந்தச் சூழலிலும் விட்டுக்கொடுக்க மாட்டோம் என கூறி உள்ளார்.
அமெரிக்காவின் வரி அச்சுறுத்தல் அதிகரித்தாலும், அதைச் சமாளித்து முன்னேறுவோம் என்றும் பிரதமர் மோடி, தெரிவித்தார்.
குறிப்பாக, அகமதாபாத்தில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களைத் தொடங்கி வைத்தபோது பேசிய பிரதமர் மோடி, விவசாயிகள், கால்நடை வளர்ப்போர் மற்றும் சிறு தொழில்களின் நலன் எங்களுக்கு முதன்மையானது என்றும் நம்பிக்கையுடன் கூறி உள்ளார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved