Also Watch
Read this
By: Manigandan Raja

சஹாரா பாலைவனத்தில் பழுதாகி நின்ற லாரி :
சஹாரா பாலைவனத்தில் லாரி பழுதானதால், அதில் பயணித்த, 50 பயணிகள், குடிக்க தண்ணீர் இல்லாமல் தவித்து உயிரிழந்த சோக சம்பவம் அரங்கேறியுள்ளது. அவர்களில் இருவர் மட்டும் நீர் நிலைகளை தேடி, அங்கிருந்து 50 கிலோ மீட்டர் நடந்து சென்று, அருகிலிருந்த ஒரு நகரத்தை அடைந்ததன் மூலம் மக்களுக்கு லாரியில் பயணித்த பயணியர் பலியானது தெரியவந்தது.
மேற்கு ஆப்ரிக்க நாடான நைஜரைச் சேர்ந்த, 52 பேர் அண்டை நாடான மாலியில் உள்ள டெல்ஹாண்டெக் என்ற நகரில் நடந்த ஓர் ஆன்மிக விழாவில் பங்கேற்று விட்டு, லாரியில் சொந்த ஊர் திரும்பி கொண்டிருந்தனர். அந்த லாரி, வழக்கமான பாதையை விட்டு விலகி சென்றதுடன், சஹாரா பாலைவனத்திற்குட்பட்ட ஒரு தனிமைப்படுத்தப்பட்ட பகுதியில் பழுதாகி நின்றது.
வரும் 8ம் தேதி சீன அதிபர் ஷி ஜின்பிங் வடகொரியா பயணம் :
சீன அதிபரின் வருகைக்கு ஒரு நாள் முன்னதாக, வட கொரியா தனது அணுசக்தி நிலையை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது. இது தொடர்பாக பேசிய வடகொரிய அரசுத் தலைவர் கிம் ஜாங் உன்னின் சகோதரி கிம் யோ ஜாங், அணு ஆயுதம் கொண்ட நாடாகத் திகழும் தனது நிலையிலிருந்து ஒருபோதும் வடகொரியா பின்வாங்கப்போவதில்லை என்றும், எந்தவொரு அச்சுறுத்தலையும் பொறுத்துக்கொள்ளப்போவதில்லை என்றும் கூறினார்.
மேலும் தற்காப்புக்கான அணு ஆயுதத் தடுப்புத் திறனைத் தொடர்ந்து வலுப்படுத்தும் கொள்கையானது, நாட்டின் தலைவரால் அறிவிக்கப்பட்டபடி நிபந்தனையின்றி செயல்படுத்தப்பட வேண்டியவை என கிம் யோ ஜாங் தெரிவித்தார்.
ஹிஸ்புல்லா தாக்குதலுக்கு இஸ்ரேல் பதிலடியாக தாக்குதல் :

ஹிஸ்புல்லா அமைப்பின் ஏவுகணை தாக்குதலுக்கு பதிலடியாக லெபனான் மீது இஸ்ரேல் நடத்திய அதிரடி தாக்குதலில் 2 பேர் உயிரிழந்த நிலையில், 11 பேர் படுகாயமடைந்தனர்.
டஹியா மாவட்டத்தில் செயல்பட்டு வந்த ஹிஸ்புல்லா அமைப்பினரின் கட்டுப்பாட்டு மையங்கள், உள்கட்டமைப்புகளை குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டது. இதனிடையே, லெபனான் மீதான இஸ்ரேல் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ள ஈரான், இந்த தாக்குதலுக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் என மிரட்டல் விடுத்துள்ளது.
இதனால், இஸ்ரேல் - ஈரான் இடையே மீண்டும் நேரடி மோதல் ஏற்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது.
போகோ ஹராம் பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட பொதுமக்கள் :
நைஜீரியாவில் இந்த ஆண்டு தொடக்கத்தில் போகோ ஹராம் பயங்கரவாதிகளால் கடத்திச் செல்லப்பட்ட 360 பொதுமக்களை ராணுவம் மீட்டுள்ளது. பொர்னோ மாகாணத்தில் உள்ள கிராமங்களுக்குள் புகுந்த போகோ ஹராம் பயங்கரவாதிகள், பொதுமக்கள் 360 பேரை கடத்தி சென்றனர்.
இதையடுத்து, கடத்தப்பட்ட பொதுமக்களை பாதுகாப்புப் படையினர் தீவிரமாக தேடிவந்தனர். இந்த சூழலில், போகோ ஹராம் பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட பொதுமக்கள் 360 பேரையும் பொர்னோ மாகாணத்தில் உள்ள மண்டரா மலை பகுதியில் இருந்து ராணுவம் அதிரடியாக மீட்டுள்ளது.
தனியார் டிவி நேர்காணலில் அமெரிக்க அதிபர் டிரம்ப் மிரட்டல் :

பேச்சுவார்த்தை தோல்வியடைந்தால் ஈரான் முற்றிலுமாக அழித்து விடுவதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் மிரட்டல் விடுத்துள்ளார். தனியார் தொலைக்காட்சிக்கு அவர் அளித்த நேர்காணலில், ஈரானுடன் ஒரு ஒப்பந்தத்தை எட்டும் வரையில் முடக்கப்பட்ட சொத்துக்களை விடுவிக்கப்போவதில்லை என தெரிவித்தார்.
மேலும், ஈரான் சரியான விதத்தில் நடந்துகொண்டால் பேச்சுவார்த்தையை தொடங்கலாம் எனவும், ஒப்பந்தம் செய்து நட்புறவுடன் இருந்தால் அவர்களிடமுள்ள செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை எடுத்து அழித்துவிடுவோம் எனவும் கூறினார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved