Also Watch
Read this
By: Manigandan Raja

அமெரிக்கா-இஸ்ரேலை கண்டித்து மக்கள் போராட்டம் :
அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ராணுவம் இணைந்து நடத்திய வான்வழித் தாக்குதலில், வடமேற்கு ஈரானிய நகரமான ஜஞ்சானில் ((city of Zanjan))அமைந்துள்ள 'ஹுசைனிய்யா-யே அஸம்' ((Hosseiniyeh-ye A'zam)) வழிபாட்டு தலம் சேதமடைந்தன. இதற்கு கண்டனம் தெரிவித்த ஈரானிய மக்கள், சேதமடைந்த வழிபாட்டு தலம் முன்பு திரண்டு அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு எதிராக முழக்கமிட்டனர்.
தலைமுறைக்கு தாக்கம் தொடரும் என பிரதமர் கீர் ஸ்டார்மர் கவலை :
ஈரானில் நடைபெறும் போரின் தாக்கத்தால் பிரிட்டனின் எதிர்காலம் பாதிக்கப்படும் என, அந்நாட்டு பிரதமர் கீர் ஸ்டார்மர் கவலை தெரிவித்துள்ளார். இந்த போரின் தாக்கம் ஒரு தலைமுறைக்கு தொடரும் எனக் கூறிய ஸ்டார்மர், 1970களில் ஏற்பட்ட எரிசக்திகளின் விலை உயர்வை போல் இருக்கக்கூடும் என அச்சம் தெரிவித்தார்.
இந்த பாதிப்பு எவ்வளவு கடுமையாக இருந்தாலும், அதை தாங்கிக் கொள்ளும் நிலையில் உறுதியாக இருக்கிறோம் என்று பிரிட்டன் மக்களுக்கு உறுதியளிக்க விரும்புவதாக ஸ்டார்மர் கூறினார். மேலும் பிரெக்ஸிட் ஒப்பந்தம் பிரிட்டனின் பொருளாதாரத்திற்கு மிகுந்த சேதத்தை ஏற்படுத்தியுள்ளது என்பது தெளிவாக தெரிவதாக ஸ்டார்மர் கூறினார்.
ரஷ்ய படை முன்னேறுவதை தடுக்கும் முயற்சியில் உக்ரைன் :
ரஷ்ய படைகள் கடந்த 24 மணி நேரத்தில் வடகிழக்கு உக்ரைனிலுள்ள சுமி பிராந்தியத்தின் சில பகுதிகளை கைப்பற்றியதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
அதே சமயம் தங்கள் எல்லைப்பகுதிக்குள் வேகமாக முன்னேறும் ரஷ்யாவின் முயற்சிகளை முறியடிக்கப் பணியாற்றி வருவதாக உக்ரைன் தெரிவித்துள்ளது. ரஷ்ய படைகளுக்கு கணிசமாக இழப்புகளை ஏற்படுத்தியுள்ளதாகவும் உக்ரைன் ராணுவம் தெரிவித்தது.
வசந்தகால எவரெஸ்ட் மலையேற்ற சீசன் தொடக்கம் :
நடப்பு ஆண்டுக்கான வசந்தகால எவரெஸ்ட் மலையேற்ற சீசன் தொடங்கியதாக நேபாள அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்த சீசனில் சுமார் 500 மலையேற்ற வீரர்கள் பங்கேற்பார்கள் என நேபாள சுற்றுலாத்துறை தெரிவித்துள்ளது.
கடந்த ஆண்டு எவரெஸ்ட் உள்ளிட்ட சிகரங்களில் ஏறி, அங்கு சிக்கிய சுற்றுலாப் பயணிகளை மீட்க 300 ஹெலிகாப்டர்கள் பயன்படுத்தியதாக போலி கணக்கு காண்பித்து, காப்பீட்டு நிறுவனங்களிடம் 186 கோடி மோசடி செய்யப்பட்டது.
இந்நிலையில் இந்த ஆண்டு மிகவும் பாதுகாப்பான மற்றும் ஒழுங்குபடுத்தப்பட்ட மலேயேற்ற பயணத்திற்கு நேபாள அரசு நடவடிக்கை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved