Also Watch
Read this
ஈரோடு அருகே 9ஆவது மாத தடுப்பூசி செலுத்திய சில மணி நேரங்களிலேயே 10 மாத பச்சிளம் குழந்தை உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. ஒரே நாளில் மூன்று தடுப்பூசிகள் செலுத்தப்பட்ட நிலையில், இது செவிலியர்களின் குளறுபடியா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்பது குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு.

ஒரே நாளில் 3 தடுப்பூசி
ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் அருகேயுள்ள கீழ்வாணி கிராமத்தை சேர்ந்த கார்த்திக் - சரோஜினி தம்பதிக்கு தருண் என்ற 10 மாத ஆண் குழந்தை இருந்தது. பிறந்தது முதல் ஆரோக்கியமாக வளர்ந்து வந்த குழந்தைக்கு, வழக்கமாக செலுத்தப்பட வேண்டிய 9ஆவது மாத தடுப்பூசிக்காக, கடந்த 29ஆம் தேதி காலை மொடச்சூரில் உள்ள குழந்தைகள் நல மையத்திற்கு தாய் சரோஜினி குழந்தையை அழைத்து சென்றிருக்கிறார். அங்கு செவிலியர்கள் குழந்தையின் கை மற்றும் தொடையில் 2 தடுப்பூசிகளை செலுத்தியுள்ளனர். அத்துடன் நிறுத்தாமல், இன்னொரு தடுப்பூசியையும் இன்றே போட்டுவிட வேண்டும் எனக் கூறி, சீதாலட்சுமிபுரம் பகுதியில் உள்ள ஒரு அரசு உதவிபெறும் பள்ளியில் இயங்கி வந்த தடுப்பூசி மையத்திற்கு அனுப்பி வைத்துள்ளனர்.

குழந்தைக்கு மூச்சுத்திணறல்
அங்கேயும் அழைத்து செல்லப்பட்ட குழந்தைக்கு மேலும் ஒரு தடுப்பூசியை செலுத்தியுள்ளனர் செவிலியர்கள். ஆக மொத்தம், ஒரே நாளில் வெவ்வேறு இடங்களில் குழந்தைக்கு 3 தடுப்பூசி வரை செலுத்தப்பட்டதாக கூறப்படுகிறது. தடுப்பூசி போட்டு முடித்த கையோடு வீட்டிற்கு அழைத்து வரப்பட்ட குழந்தை தருண், சிறிது நேரத்திலேயே தொடர்ந்து நிறுத்தாமல் அழுதுகொண்டே இருந்து உள்ளது. குழந்தையின் அழுகையை கட்டுப்படுத்த முடியாமல் தவித்த தாய் சரோஜினி, தாய்ப்பால் கொடுத்தபோதும் குழந்தை அழுகையை நிறுத்தவில்லை என சொல்லப்படுகிறது. ஒருகட்டத்தில் மூச்சுத்திணறல் ஏற்படுவது போல குழந்தை தவிப்பதை கண்டு பெற்றோர் அலறி துடித்துள்ளனர்.
வழக்கம்போல்...

உயிரிழந்த குழந்தை
நள்ளிரவு கடந்து விடியற்காலை வேளையில், படுக்கையில் சிறுநீரின் ஈரத்தை உணர்ந்து குழந்தையை எழுப்ப முயன்ற தாய்க்கு உறைந்துபோகும் அதிர்ச்சி காத்திருந்தது. குழந்தை எந்தவித அசைவும் மூச்சு பேச்சும் இன்றி சடலமாக கிடப்பதை கண்டு அக்கம் பக்கத்தினரின் உதவியோடு அலறியடித்து கொண்டு கோபிசெட்டிபாளையம் அரசு மருத்துவமனைக்கு குழந்தையை கொண்டு சென்றுள்ளனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள், குழந்தை ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்து அதிர்ச்சி கொடுத்தனர்.

என்ன நடந்தது?
இந்த சம்பவத்தில், தடுப்பூசி அட்டையில் முறையாக பதிவு செய்யப்படவில்லையா? 9ஆவது மாதத்தில் செலுத்தப்பட வேண்டிய தடுப்பூசிகளை ஒரே நாளில் வெவ்வேறு மையங்களுக்கு அனுப்பி அவசர அவசரமாக செலுத்தியது ஏன்? என்ற பல சந்தேக கேள்விகளை உறவினர்கள் முன்வைக்கின்றனர்.

என்ன காரணம்?
குழந்தையின் உடல் உடற்கூறாய்வுக்காக பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், சம்பவம் குறித்து கோபிசெட்டிபாளையம் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பிரேதப் பரிசோதனை அறிக்கை வந்த பிறகே குழந்தையின் உயிரிழப்பிற்கு தடுப்பூசியின் பக்கவிளைவுகளா? அல்லது வேறு ஏதேனும் உடற்கோளாறா? என்பது தெரியவரும் என சுகாதாரத் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.