Also Watch
Read this
சென்னை பார்க் டவுன் பகுதியில், ஜி.எஸ்.டி. வசூலுக்காக வந்த அதிகாரிகளை சிறைபிடித்து ஒட்டுமொத்த வியாபாரிகளும் அதிரடி காட்டிய நிலையில், நீண்ட பேச்சுவார்த்தைக்கு பின்பே போலீசார் அவர்களை மீட்டுள்ளனர்.

வரி என்ற பெயரில் மாத மாதம் லட்சக்கணக்கில் அதிகாரிகள் லஞ்சமாக வசூலிப்பதை பொறுக்க முடியாமலேயே வியாபாரிகள் ஒன்று திரண்டு அதிகாரிகளை சிறை பிடித்ததாக பகீர் கிளப்புகின்றனர்.

கோடிக்கணக்கில் லஞ்சம்
எட்டு மாதங்களாக ஜி.எஸ்.டி. என்ற பெயரில் மிரட்டி மிரட்டி கோடிக்கணக்கில் லஞ்சம் வாங்கியதாக சொல்லி கொதித்தெழுந்த பாத்திரக்கடைக்காரர்கள் ஒன்றிணைந்து ஒட்டுமொத்த அதிகாரிகளையும் சிறைவைத்து படபடக்க வைத்தனர்.
எப்போதும் பரபரப்பாகவே இயங்கும் பார்க் டவுன் பகுதி, வியாழக்கிழமையன்று மாலையில் வழக்கத்திற்கு மாறாக ஒருபடி மேலே சென்று அசாதாரணமான நிலையில் காணப்பட்டது. ஒட்டுமொத்த பாத்திரக் கடைக்காரர்களும் ஒரு இடத்தில் குழுமி கூச்சலிட்டதை காணும் போது ஏதோ கடைக்காரர்களுக்குள் தொழில்போட்டியால் வந்த வாக்குவாதமாக இருக்கலாம் என நினைத்தால், உண்மை நிலையோ வேறாக இருந்தது.

எட்டு மாதங்களாக...
கடந்த 8 மாதங்களாகவே இந்த பகுதியில் இயங்கும் கடைகளுக்கு வாடிக்கையாக வரும் ஜி.எஸ்.டி. அதிகாரிகள் சிலர், ஏதாவது ஒரு கணக்கை காட்டி 5 லட்சம் பத்து லட்சம் என பில்லை தீட்டி வசூல் செய்வதாக சொல்லப்படுகிறது. பில்லுக்கே ஐந்து லட்சம் என்றால், பில் இல்லாமல் 50 லட்சம் வரை அதிகாரிகள் ருசி பார்ப்பதாக குமுறுகின்றனர் வியாபாரிகள்.

இப்படி தனிப்பட்ட முறையில் அதிகாரிகளை கவனிக்க தவறினால், நள்ளிரவு என்றும் பாராமல் வீட்டிற்கே வந்து ரெய்டு நடத்தி, ஏதேதோ சாக்கு போக்குகளை சொல்லி வங்கி கணக்கை முடக்க உள்ளதாகவும் கடைக்கும் சீல் வைப்பதாகவும் கூறி, பிழைப்பில் மண் அள்ளி போடவும் துணிகின்றனர் எனக்கூறும் வியாபாரிகள், வேறு வழியில்லாமல் பயந்து போய் கேட்டதை கொடுத்து வந்ததாக பகீர் கிளப்புகின்றனர்.

தங்க கட்டிகளாக...
பாத்திரக் கடை உரிமையாளர்கள் தங்களுக்கு பயப்படுவதை பயன்படுத்திக் கொண்ட அதிகாரிகள், மாத மாதம் கட்டிங் அமௌண்டை ஏற்றிக் கொண்டே சென்றதாகவும் ஒரு கட்டத்தில், ‘பணமாக வேண்டாம், கோல்ட் பிஸ்கட்களாக கொடுங்கள்,’ என நெருக்கடி தந்ததாகவும் குற்றம் சாட்டுகின்றனர். பில்லை தாண்டிய எக்ஸ்ட்ரா அமௌண்ட் எதையும் அவர்கள் கடையில் வைத்தோ வீட்டில் வைத்தோ பெறுவதில்லையாம், மாறாக ஓட்டலுக்கு வரவழைத்தோ, அவுட்டர் சிட்டிக்கு வரவழைத்தோ பெறுவதாகவும் குமுறுகின்றனர்.

கடைக்குள் வைத்துப் பூட்டி...
பொறுத்து பொறுத்துப் போன கடை உரிமையாளர்கள் இந்த முறை அதிகாரிகளை சும்மா விடக்கூடாது என்ற உறுதியில், மாத கடைசி நாளான வியாழக்கிழமையன்று ஆய்வுக்கு வந்த அதிகாரிகளை கடைக்குள் வைத்து பூட்டி அதிரடி காட்டியுள்ளனர்.

இதனால் வெலவெலத்து போனவர்கள், போலீசுக்கு தகவல் கூறி வரவழைத்திருக்கின்றனர். வியர்த்து விறுவிறுத்து பயத்தில் இருந்த அதிகாரிகளை யானைகவுனி போலீசார் மீட்க முயற்சி செய்தனர். ஆனால், அங்கிருந்த வியாபாரிகள், கோஷம் எழுப்பி, ஜிஎஸ்டி ஆணையர் வந்தால்தான் அதிகாரிகளை விடுவிப்போம் என்றனர்.

அதிகாரிகள் தானா?
ஒரு குழுவாக வரும் அதிகாரிகளில் ஓரிருவரை தவிர மற்ற யாவரிடமும் ஐடி கார்டு கூட இருப்பதில்லை, உண்மையிலேயே இவர்கள் அதிகாரிகள் தானா? என்பதை ஆணையரே வந்து உறுதிப்படுத்த வேண்டும் என சீறினர். பிறகு காவல்துறை இணை ஆணையர் வந்து பேச்சுவார்த்தை நடத்திய பிறகே கடை உரிமையாளர்கள், ஜிஎஸ்டி அதிகாரிகளை விடுவித்தனர். அதோடு, வியாபாரிகளிடமும் போலீஸ் தரப்பில் புகார் பெறப்பட்டு விசாரணை துவங்கப்பட்டிருக்கிறது.

பதில் கூற வேண்டும்...
ஜிஎஸ்டி அதிகாரிகள் என்றால் எதற்கு நள்ளிரவில் வீட்டுக்கு செல்ல வேண்டும்? வாங்கும் தொகையை ஏன் பில்லில் குறிப்பிடவில்லை? தங்கள் மீது தவறில்லை என்றால் ஏன் யாருக்கும் தெரியாமல் பணம் வாங்க வேண்டும்? மத்திய அரசுக்கு கட்டவேண்டிய அபராதம் எனக்கூறி எதற்காக பணத்திற்கு பதில் தங்க பிஸ்கட் கேட்க வேண்டும்? போன்ற வியாபாரிகளின் மில்லியன் டாலர் கேள்விகளுக்கு ஜி.எஸ்.டி. ஆணையம் தான் பதிலளிக்க வேண்டும்.