Also Watch
Read this
By: Manigandan Raja
சாலையோரம் கிடந்த தங்க நகைகளை உரியவரிடம் ஒப்படைத்து நன்மதிப்பைப் பெற்ற தூய்மை பணியாளர் பத்மாவை போலவே, திருவாரூரிலும் ஒரு தூய்மை பணியாளர் குடும்பத்துடன் சென்று நகைகளை ஒப்படைத்து பாதிக்கப்பட்டவர்களை நெகிழ வைத்துள்ளார். அதுபற்றிய ஒரு செய்தித் தொகுப்பை காணலாம்.

அடுத்த மாதம் மகள் திருமணம்
அடுத்த மாதம் நடைபெற உள்ள மகளின் திருமணத்துக்காக ஆசை ஆசையாய் பார்த்து பார்த்து சேர்த்து வைத்த நகையை தொலைத்துவிட்டு நிற்கதியாய் நின்ற குடும்பத்தினர், நகை கிடைத்ததும் நெகிழ்ச்சியில் கட்டியணைத்து கண்ணீர் விட்டு கதறி அழும் வீடியோ காட்சி, நெகிழ வைத்துள்ளது.

பத்மாவதி... துரை...
தங்கத்தின் விலை உச்சத்தை எட்டியிருக்கும் நிலையில், குப்பையில் கிடந்த தங்க நகைகளை அப்படியே கொண்டு போலீசிடம் ஒப்படைத்து நன்மதிப்பைப் பெற்றவர்தான் தூய்மை பணியாளர் பத்மா. 45 சவரன் நகைகளை துச்சமென நினைத்து உரியவரிடம் தந்த உள்ளத்துக்காக மத்திய அரசு முதல் மலேசிய அரசு வரை பாராட்டு தெரிவித்தது. அந்த வரிசையில் தற்போது திருவாரூரை சேர்ந்த தூய்மைப் பணியாளர் துரையும் இணைந்திருக்கிறார்.

குப்பையோடு குப்பையாக...
விருப்பாச்சி நடப்பு தெருவில் தூய்மை பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த துரையின் கண்ணில் பட்டது சாலையோரம் கிடந்த கட்டப்பை ஒன்று. முதலில் அதை குப்பையோடு குப்பையாக அள்ளிப்போட எண்ணியவர் பிறகு அதனை கொண்டு வீட்டுக்குள் வைத்துவிட்டு வேலைக்கு சென்று விட்டதாக சொல்லப்படுகிறது. வெறும் கட்டப்பை தானே வீட்டுக்கு தேவைப்படும் என எண்ணி, துரை அதை வீட்டில் வைத்த நிலையில், அவரது மனைவியும் மகனும் சேர்ந்து பையை திறந்து பார்த்ததும் அதிர்ச்சி அடைந்தனர். மினுமினுக்கும் தங்க நகைகளும், பளபளக்கும் வெள்ளி ஆபரணங்களையும் கண்டு பதைபதைத்தனர். பின்னர், துரையை அழைத்த அவரது மகன், நகைகளை போலீசில் ஒப்படைக்க கூறியிருக்கிறார். அதன்படியே குடும்பத்தோடு சென்று கட்டப்பையில் இருந்த நகைகளை அப்படியே போலீசிலும் ஒப்படைத்திருக்கிறார் துரை. முன்னதாக, நகையை தொலைத்தவர்களும் அதே காவல் நிலையத்தில் கண்ணீருடன் புகார் அளித்திருந்தது தெரியவந்தது.

அடுத்த மாதம் திருமணம்
சென்னை, கூடுவாஞ்சேரியை சேர்ந்த ராதாகிருஷ்ணன் - முத்துலட்சுமி தம்பதியினர் தங்கள் மகள் அட்சயா தேவிக்கு அடுத்த மாதம் திருமணத்தை நிச்சயித்திருந்ததாக தெரிகிறது. திருத்துறைப்பூண்டியில் திருமணத்திற்கான ஏற்பாடு செய்யப்பட்டு வந்த நிலையில், நகைகளை ஒரு மாதத்திற்கு முன்னதாகவே அங்குள்ள உறவினர் வீட்டில் வைப்பதற்காக எடுத்து சென்றதாக தெரிகிறது. விருப்பாச்சியில் உள்ள உறவினர் வீட்டிற்குச் சென்றுவிட்டு மீண்டும் ஆட்டோவில் செல்லும்போது பின்பக்கத்தில் வைத்த நகைப்பை ஸ்பீடு பிரேக்கரில் ஏறி இறங்கியபோது கீழே விழுந்திருக்கலாம் என சொல்லப்படுகிறது.

மகனுக்கு மருத்துவம் பார்த்தால் போதும்
இந்நிலையில், நகை கிடைத்ததை அறிந்தும், பதற்றம் குறையாமல் அந்த தாய் தனது மகளை கட்டியணைத்து கதறி அழுதார். இது ஒருபக்கம் இருக்க வறுமையிலும் நேர்மைக்கு உதாரணமாக நகையை ஒப்படைத்த தூய்மைப் பணியாளர், தானே 100 சவரன் தங்க நகையை வாங்கியது போல நெகிழ்ச்சியுடன் நடந்த சம்பவத்தை விவரித்தார்.

மேலும், நகையை திருப்பிக் கொடுத்ததற்கு தனக்கு எந்த உதவியும் வேண்டாம் என்றும், நீண்ட நாட்களாக நோய்வாய்பட்டு படுத்த படுக்கையாக கிடக்கும் தனது மகனுக்கு மருத்துவம் பார்த்தால் போதும் என்றும் கோரிக்கை விடுத்தார்.

குவியும் பாராட்டு
இதனைத் தொடந்து நேர்மையுடன் செயல்பட்டு நகைப்பையை எடுத்துக் கொடுத்த தூய்மைப் பணியாளர் துரை மற்றும் அவரது மனைவியை பாராட்டி திருவாரூர் நகர காவல் நிலையம் சார்பில் பொன்னாடை போர்த்தி மாலை அணிவித்து புத்தாடை எடுத்துக் கொடுத்து பாராட்டுகளை தெரிவித்தனர்.

மேலும், தூய்மைப் பணியாளர் துரை மற்றும் அவரது மனைவியை நகராட்சி அலுவலகத்திற்கு அழைத்து நகர்மன்ற தலைவர் மற்றும் நகராட்சி ஆணையர் உள்ளிட்ட அலுவலர்கள் பொன்னாடை போர்த்தி பரிசளித்து பாராட்டுக்களை தெரிவித்தனர்.

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved