Also Watch
Read this
By: Manigandan Raja

வாசலில் நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனம் திருட்டு :
தருமபுரி நகர பகுதிகளில் நகைக்கடை வாசலில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இளைஞரின் பைக்கை லாவகமாக திருட்டு செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பு.
கிருஷ்ணகிரி மாவட்டம், பாளேத்தோட்டம் கிராமத்தை சேர்ந்தவர் சிவகுமார் என்பவர் இன்று தனது நண்பருடன் தருமபுரியில் உள்ள 'செல்வ மாளிகை' நகைக்கடைக்கு நகை வாங்குவதற்காக வந்துள்ளார்.
தனது இருசக்கர வாகனத்தை கடையின் முன்புறம் நிறுத்திவிட்டு சிவகுமார் தனது நண்பருடன் கடைக்குள் சென்றுள்ளார். சிறிது நேரம் கழித்து வெளியே வந்து பார்த்தபோது நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனம் மாயமாகி இருப்பதைக் கண்டு அவர் அதிர்ச்சியடைந்தார்.
இதனைத் தொடர்ந்து நகைக்கடையில் இருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்தபோது சிவகுமார் கடைக்குள் செல்வதை நோட்டமிட்ட இரண்டு மர்ம நபர்கள் ஆள் நடமாட்டம் உள்ள
பகுதியிலேயே எவ்வித பயமும் இன்றி, மிக லாவகமாக இருசக்கர வாகனத்தைத் திருடிச் செல்வது அந்த காட்சிகளில் பதிவாகியுள்ளது.
இந்த திருட்டு சம்பவம் குறித்து சிவகுமார் தருமபுரி நகர காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் காவல்துறையினர் சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் திருட்டில் ஈடுபட்ட
மர்ம நபர்களைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
தருமபுரி நகரின் முக்கியப் பகுதிகளில் சமீபகாலமாக இருசக்கர வாகனத் திருட்டுகள் தொடர்ந்து அதிகரித்து வருவதாகப் பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள நகைக்கடை வாசலிலேயே இந்த துணிகரத் திருட்டு அரங்கேறியுள்ளது வாகன ஓட்டிகளிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved