Also Watch
Read this
திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் அருகே வீட்டின் மொட்டை மாடியில் படித்துக் கொண்டிருந்த கல்லூரி மாணவிக்கு பாலியல் சீண்டல் செய்து, கஞ்சா மற்றும் மதுபோதையில் வந்த கும்பல் அத்துமீறிய போது மாணவி கத்தி கூச்சலிட்டதால் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பி ஓடி உள்ளனர்.
முதலாமாண்டு கல்லூரி மாணவி
திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூரை அடுத்த வல்லூர் ஊராட்சிக்கு உட்பட்ட வாலாஜா மசூதி தெருவில் வசித்து வரும் மாணவி, தனியார் கல்லூரி ஒன்றில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். தற்போது கல்லூரி செமஸ்டர் தேர்வு நடைபெற்று வரும் நிலையில், மாணவி தேர்வுக்காக தயாராகி கொண்டிருந்தார். நேற்று இரவு தனது வீட்டு மாடியில் உள்ள அறையில் தனியாக படித்து கொண்டிருந்த நிலையில், மூன்று இளைஞர்கள் கஞ்சா போதையில் வீட்டு பின்புறம் உள்ள முட்புதர் வழியாக பக்கத்து வீட்டு மாடி வழியாக ஏறி, மாணவி இருந்த வீட்டு மாடியில் குதித்தனர். கஞ்சா போதையில் இருந்த மூன்று இளைஞர்கள், மாணவி அறையில் புகுந்து அவரை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றதாக கூறப்படுகிறது. அப்போது, மாணவி கூச்சலிடவே ஆத்திரமடைந்த போதை இளைஞர்கள் கத்தியால் கை, கால் , தலை உள்ளிட்ட பகுதிகளில் சரமாரியாக வெட்டி விட்டு தப்பி ஓட முயன்றனர்.

மூவரில் ஒருவர் சிக்கினார்
அப்போது, மாணவியின் அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த பெற்றோர் மற்றும் அக்கம்பக்கத்தினர், தப்பி ஓட முயன்ற மூவரில் ஒருவரை மட்டும் விரட்டிச் சென்று பிடித்து, அடித்து, மீஞ்சூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். பின்னர், பாதிக்கப்பட்ட மாணவியை மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்பட்ட மாணவிக்கு, மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

தனிப்படை விசாரணை
இந்த சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த மீஞ்சூர் போலீஸார், கைது செய்யப்பட்ட இளைஞர் டில்லி பாபுவிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், தப்பி ஓடியவர்களை தனிப்படை அமைத்து போலீஸார் தீவிரமாக தேடி வருகின்றனர். இதனிடையே, கைது செய்யப்பட்ட இளைஞர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அதே பகுதியில் வசிக்கும் இளைஞர் சிலருடன் சேர்ந்து கத்தி உள்ளிட்ட ஆயுதங்களுடன் ரீல்ஸ் பதிவிட்டு வந்ததும், மேலும் அப்பகுதி மக்களை அச்சுறுத்தும் வகையிலான செயலில் ஈடுபட்டு வந்ததும் விசாரணையில் தெரியவந்தது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved