Also Watch
Read this
By: Manigandan Raja

விருதுநகர் மாவட்டம் நரிக்குடி ஊராட்சி ஒன்றியம் சாலை இலுப்பைகுளம் ஊராட்சிக்கு உட்பட்ட சொட்டமுறி கிராமத்தில் சுமார் 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன.
இந்த நிலையில் இந்த கிராமத்தில் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக உப்புத் தன்மையுடன் கூடிய நீரை மட்டுமே குடிநீராக பயன்படுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் இந்த உப்பு நீரை குடித்து பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட ஏராளமானோர் சிறுநீரக பாதிப்பு, உப்புச்சத்து உள்ளிட்ட பல்வேறு நோய்களால் பாதிக்கபட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த நிலையில் சொட்டமுறி கிராமத்தில் முறையாக குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், தங்கள் கிராமத்தில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள் காலி குடங்களுடன் நரிக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு கோஷங்களை எழுப்பி முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதனையடுத்து நரிக்குடி வட்டார வளர்ச்சி அலுவலர்(கி. ஊ) வாசுகி மற்றும் காவல் துறையினர் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதனையடுத்து சொட்டமுறி கிராமத்தில் விரைவில் சுத்தமான குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதியளித்தனர்.
மேலும் மாவட்ட நிர்வாகத்திற்கு அறிக்கை தாக்கல் செய்யப்படும் என்றும், விரைவில் சொட்டமுறி கிராமத்தில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அதிகாரிகள் உறுதி அளித்தனர்.
மேலும் அதுவரை தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம் சொட்டமுறி கிராமத்தில் தனி தண்ணீர் தொட்டி அமைத்து பொதுமக்களுக்கு குடிநீர் வழங்கப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். வரும் திங்கட்கிழமை சொட்டமுறி கிராமத்தில் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெறும் என்றும் வட்டார வளர்ச்சி அலுவலர் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் அனைவரும் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.